அவளின் கதையில் திருமணமான பல பெண்களின் உளக்குமுறல்கள்…..

  • 7

அவள் கணவனின் குடும்பத்தினரால் வெகுவாக கொண்டாடப்பட்ட ஓர் மருமகள். அவளுக்கேயுரிய சிறந்த குணங்களால் அனைவர் மனதிலும் தனி இடம் பதித்தவள். சமீப காலமாக உடல்ரீதியாக, உளரீதியாக, சமூகரீதியாக பல பிரச்சினைகள் அலையாக வந்து அவளை தத்தளிக்க வைக்கின்றன. வைத்தியரின் சிபாரிசின் பெயரில் உளவளத்துணையை நாடுகிறாள்.

அவளின் கதை திருமணமாகி 3 மாதங்கள் கூட கடக்காத நிலையில் அவளின் உடல் பருமன் மிக வேகமாக அதிகரிக்கிறது. திருமணத்தின் பின் எடை அதிகரிப்பது சாதாரணமான விடயம் தான் என்று எடுத்துக் கொண்டாலும் தற்போது திருமணமாகி 4 வருடங்களாகியும் தனது உடல் எடை மென்மேலும் அதிகரிப்பது அவளின் மனதை அழுத்துகிறது. அத்துடன் நிறைந்து வழியும் முகப்பருவும் அதனால் வரும் தலைவலியும் அவளை விரக்திக்கே இட்டுச் செல்கிறது. “இன்னும் விசேஷம் இல்லையா” என்று ஆரம்பித்த கேள்விகள் பிற்பாடு அவளை “மலடி” என்ற பெயரிற்குள் அடக்கி மொத்த குறைகளையும் அவளின் மேல் வெளிப்படையாக சுமத்தும் போது நொருங்கித் தான் போனாள். பல தடவைகள் கணவனை பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அழைத்தும் காலப்போக்கில் சரியாகிடும் என்ற கணவனின் அலட்சியப்போக்கு மற்றும் பிடிவாதம் அவளை மேலும் ஆத்திரத்தில் ஆழ்த்தியது.

பல இடங்களில் “கணவன் இவளின் மகன் போல இருக்கிறார் பொருத்தமற்ற ஜோடி” எனத் தன் தோற்றமாற்றம் தொடர்பாக விமர்சிக்கப்படுகிறாள். இவை அவளின் மனதை முள்ளாய் குத்துகிறது. அவளின் மனநிலை அடிக்கடி மாறியது. அவளால் மனவெழுச்சிகளை சரியாக கையாள முடியவில்லை. உடலில் மாற்றங்களை உணர்ந்தாள். மூட்டுக்களில் நோவு, உடல் வலி என வருத்தங்கள் தொடங்கின.

வைத்தியரை நாடினாள். வைத்திய அறிக்கை அதிர்ச்சியளித்தது. இருபத்தி எட்டு வயதேயான அவள் நீரிழிவு நோய்க்காளாகி இருந்தாள். அவளின் பேச்சுக்கு காது கொடுத்த வைத்தியர் ஓரளவு ஊகித்து மேலும் சில பரிசோதனைகளை செய்ய வைத்து அவள் PCOS நோய்க்காட்பட்டிருப்பதை உறுதிப்படுத்தி வசதி வாய்ப்பிருந்தும் அலட்சியம் காட்டிய கணவனை எச்சரித்து விட்டு உளவளத்துணைக்காக அனுப்பி வைத்தார்.

கணவன் தன் தவறைஉணர்கிறார். ஆரம்ப நாட்களில் அனைவரையும் கவர்ந்த தன் மனைவியின் அழகிய தோற்றம், தற்போதுள்ள தோற்றம். அப்போதிருந்த அவளின் மரியாதையான நடத்தை, உறுதியான ஆளுமை, கலகலப்பான பேச்சு, உள்ளத்தை அமைதிப்படுத்தும் அவளின் ஆற்றுப்படுத்தல் இப்போது தலைகீழாக மாறியுள்ள அவளின் நடத்தை.

இவற்றைக் கண்டும் காணாததைப் போல் அலட்சியம் செய்ததால் ஏற்பட்ட விளைவு. குற்ற உணர்வு மாறாத வகையில் அனைத்தையும் என்னிடம் ஒப்பிவிக்கிறார். தற்போது உளவளத்துணை சிகிச்சை தொடர்கிறது.

அடுத்தவருக்கும் ஓர் விழிப்புணர்வுக்காக PCOS தொடர்பான ஓர் சிறிய கண்ணோட்டத்தை தருகிறேன்.

ஆம்.. நீங்கள் நினைப்பதைப் போன்று PCOS என்பது அரிதான நோய் அல்ல. திருமணமான 10 பெண்களில் ஒருவருக்காவது இது காணப்படும். பரவலாக பல பெண்கள் இதற்கு ஆளாகியிருப்பார்.

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (PCOS) என்பது பிள்ளை பெறும் வயதில் உள்ள பெண்களிடையே காணப்படும் பொதுவான ஹார்மோன் குறைபாடுகளில் ஒன்று. இது மூளை மற்றும் சூலகங்களில் சமநிலையற்ற சுரப்புநீரால் ஏற்படுகிறது. அதாவது பெண்களின் சூழகங்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்டிரோன் என்பவற்றை உண்டாக்கிறது. அத்தோடு இது ஆண் சுரப்பு நீரான அன்ட்ரோஜனையும் (ஆண்மையூக்கி) சிறிதளவில் உண்டாக்கிறது. ஆனால் PCOS இன் போது சூழகங்கள் அன்ட்ரோஜனை அளவுக்கதிகமாக சுரக்கிறது. இதுவே சுரப்பு நீரில் சமனிலையற்ற தன்மையை உண்டாக்கிறது. சில நேரம் இது உடலில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். சிலவேளைகளில் பாதிப்புக்கள் குறைவாக இருக்கும்.

இதன் அறிகுறிகளாக பின்வருவன காணப்படும்.

குறைந்தளவு மாதவிடாய் அல்லது தொடர்ந்தேச்சையான மாதவிடாய் தடைபடல். உடல் எடை அதிகரித்தல், இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதால் நீரிழிவு
ஏற்படல், அத்துடன் சிலநேரம் இருதய நோய், மலட்டுத் தன்மை, கருப்பை உட்சுவரில் புற்று நோய் கூட ஏற்படலாம். உடலும், உள்ளமும் எப்போதும் ஒன்றுடனொன்று பிணைந்து காணப்படுவதால் உடலில் ஏற்படும் பாதிப்பு உள்ளத்தையும் பாதிக்கும். எடுத்துக்காட்டாக PCOS உள்ள பெண்கள் அனுபவிக்கும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் அவர்களுடைய மனோநிலைகள் அடிக்கடி மாறக்கூடும். இதனால் மனவெழுச்சி மற்றும் உளக்கொதிப்பு தொடர்பான பிரச்சினைகள் எழும்.

இளம்பெண்களின் பொதுவான தோற்றத்தின் மீதான அக்கறை மற்றும் அடுத்தவர்களின் விமர்சனம் அவர்களை ஆழ்ந்த கவலைக்கு ஆளாக்கும். அது போன்றே இக்குறைபாடு ஏற்படுத்தும் ஏனைய நோய்கள் தொடர்பான பயம், மற்றும் உடல்வலிகள் மனதை அதிகம் பாதிக்கும். மேலும் குழந்தையின்மை தொடர்பான விமர்சனங்கள், குடும்பத்தினரின் அழுத்தங்கள் என்பனவும் பதகளிப்பு, மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற உளநோய்களை உண்டாகும்.

பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் இதிலுள்ள எல்லா அறிகுறிகளும் காணப்பட மாட்டாது. அதேநேரம் இவற்றுக்கான பல வெற்றிகரமான சிகிச்சை முறைகள் உள்ளன.

மருத்துவரின் சிபாரிஸில் வழங்கப்படும் ஒரு சில கருத்தடை மாத்திரைகள் மூலம் பெண்களுக்கான சுரப்புநீரை அதிகரிக்கச் செய்து மாதவிடாய் ஒழுங்கின்மை, கருப்பை உட்சுவரில் ஏற்படும் புற்றுநோய் ஆபத்து போன்றவற்றைக் குறைக்கலாம். அதே நேரம் ஆண் சுரப்பு நீரின் செயற்பாட்டைத் தடைசெய்யும் அன்ரி – அன்ட்ரோஜன் மாத்திரைகள் மூலம் முகப்பரு, தேவையற்ற முடி வளர்ச்சி மற்றும் வழுக்கைத் தன்மையை இல்லாமல் செய்யலாம்.

மேற்படி மருந்துகள் மூலம் வழங்கப்படும் சிகிச்சையுடன் சில வாழ்க்கை முறை மாற்றங்களையும் செய்ய வேண்டும். இதுவே பெண்களின் முதன்மைச் சிகிச்சையுமாகும். அதாவது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் தொடர்ந்தேச்சையான உடற்பயிற்சிகள் PCOS இன் வீரியத்தன்மையை வெகுவாகக் குறைக்கும். உடற்பயிற்சிகள் உடல் குளுக்கோசின் செரிக்கும் தன்மையை கூட்டும். ஆன்ட்ரோஜீனிஸத்தைக் குறைக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அழகான உடல் தோற்றத்திற்கு வழியமைக்கிறது. இவற்றின் மூலம் உடல் எடையை 5-10% குறைத்தாலும் அது உடல், உள, சமூகரீதியான பல நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

அத்துடன் கணவனின் அன்பும், ஆதரவும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் இன்றியமையாத ஓர் தேவையாகும்.

ஏலவே ஒருவர் இதன் மூலம் நீரிழிவு நோய்க்கு ஆளாகியிருந்தால் அதற்கான சிகிச்சையுடன் உள்ளத்தை அமைதியாக வைப்பது மிக முக்கியமாகும். ஏனெனின் நீரிழிவின் சடுதியான உயர்விற்கு உளமுரண்பாடுகளே முதன்மைக் காரணமாகும்.

தகுந்த முறையில் மகப்பேற்று வைத்தியர்கள் மற்றும் உளவளத்துணையாளர்களிடம் மருத்துவர் சிபாரிசு செய்யும் சிகிச்சைகளை பின்பற்றினால் PCOS ஐ மிகவும் இலகுவாக கையாளலாம். இன்ஷா அல்லாஹ்!

றிப்னா ஷாஹிப்
உளவளத்துணையாளர்

அவள் கணவனின் குடும்பத்தினரால் வெகுவாக கொண்டாடப்பட்ட ஓர் மருமகள். அவளுக்கேயுரிய சிறந்த குணங்களால் அனைவர் மனதிலும் தனி இடம் பதித்தவள். சமீப காலமாக உடல்ரீதியாக, உளரீதியாக, சமூகரீதியாக பல பிரச்சினைகள் அலையாக வந்து அவளை…

அவள் கணவனின் குடும்பத்தினரால் வெகுவாக கொண்டாடப்பட்ட ஓர் மருமகள். அவளுக்கேயுரிய சிறந்த குணங்களால் அனைவர் மனதிலும் தனி இடம் பதித்தவள். சமீப காலமாக உடல்ரீதியாக, உளரீதியாக, சமூகரீதியாக பல பிரச்சினைகள் அலையாக வந்து அவளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *