பிரார்த்தனைகளுடன் அன்றாட வாழ்க்கையை திட்டமிடுவோம்
- by admin
- 7
மனிதர்களுக்கு விஞ்ஞானத்தையோ அல்லது தொழில் நுட்பம், மருத்துவம் போன்றவற்றையோ கற்பிக்க இறைத்தூதர்கள் அனுப்படவில்லை. மாறாக இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் மனிதர்கள் தமக்கு மத்தியிலான உறவுகள் போன்றவற்றை சீர்படுத்தவே இறைதூதும் அதைத் தாங்கிய இறைத்தூதர்களும் வந்தார்கள். இஸ்லாம் என்றால் அதற்கு இரண்டு பொருள்கள் உண்டு : ஒன்று, அடிபணிதல். மற்றது, சமாதானம். இந்த இரண்டு பொருள்களுமே நாம் மேலே கூறியவற்றை நிரூபணம் செய்கிறது.
இறைவனிடத்தில் மனிதனுக்கு உள்ள தொடர்பு அவனுடைய ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட அடிபணிதலாக உள்ளது. சம வேளையில் மனிதர்களுக்கு மத்தியிலான உறவின் அடிப்படையாக சமாதானம் உள்ளது. மனிதர்களுக்கு கெளரவமும், சமத்துவமும், நீதியும் தான் சாமாதானத்தின் அடிப்படைகள்.
கொரோனா வைரஸை எதிர் கொள்ள வேண்டியது மனிதனின் பொறுப்பு. ஏலவே கூறியது போல மனிதர்களுக்கு விஞ்ஞானத்தையும், மருத்துவத்தையும் கற்பிக்க இறைதூது வரவில்லை. அதற்கு மனிதப் பகுத்தறிவே போதுமானது. தவிர ஆரம்பம் முதலே இஸ்லாத்தில் பெளதீக விதிகளுக்கான இடம் சிறப்பாக அளிக்கப்பட்டுள்ளது. மக்காவில் இருந்து மதீனாவுக்கு இறைதூதர் புலம்பெயர்ந்த நிகழ்வான ஹிஜ்ரத்தின் பொழுது பரிபூரண திட்டமிடலுடன் நபிகளார் பிரயாணித்தார். முஸ்லிம்களோ, இஸ்லாத்தின் எதிரிகளோ நபிகளார் ஏன் பறக்கும் கம்பளத்தில் போய் மதீனாவில் இறங்கவில்லை என்று கேட்கவில்லை. அந்தளவுக்கு பெளதீக விதிகளை அனுசரித்து நடப்பதை நபிகள் நாயகம் வலியுறுத்தல் செய்தார். இறைதூதரின் வாழ்க்கையில் பல்வேறு இடங்களில் இந்த உண்மையை நாம் கண்டு கொள்ளலாம்.
பூமியில் இறைவனின் பிரதிநிதியாக மனிதன் இருக்கிறான். “அனைத்து பொருள்களின் பெயர்களையும் ஆதமுக்கு அவன் (இறைவன்) கற்பித்தான்” என்கிறது அல் குர்ஆன்.
காரண காரியங்களை பற்றிய அறிவு, பெளதீக விதிகளை பற்றிய அறிவு போன்றவை பூமியில் இறைவனின் பிரதிநிதியாக நிற்பதற்கு அடிப்படையான தகுதிகள். நபிகளாரின் வாழ்க்கை பகுத்தறிவுக்கும் மறைவானவற்றின் மீதான நம்பிக்கைக்கும் இடையிலான நுட்பமான பிணைப்பு. நபிகளாரின் மிஃராஜ் எனப்படும் இரவுப் பயணத்தை எந்தக் கேள்வியும் கேட்காமல் நம்பிய நபித் தோழர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை குறித்து எண்ணற்ற கேள்விகளை கேட்டனர். நபிகளாருடன் முரண்பட்டனர். பகுத்தறிவுக்கும் நம்பிக்கைகுமான வேறுபாட்டை துல்லியமாக பிரித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு நபிகளாரின் பயிற்றுவிப்பு அதன் உன்னத தரத்தில் இருந்தது. கொரோனா வைரஸ் நாம் அறிவியல் ரீதியாக வெற்றி கொள்ள வேண்டிய ஒன்று. பிரார்த்தனைகள் எல்லாம் மனித அறிவின் எல்லையை உணர்ந்து கொள்ளவே அன்றி மனித முயற்சிகளுக்கு தடையிட அல்ல. மிக ஆழமான பிரார்த்தனைகளுடன் அன்றாட வாழ்க்கையை திட்டமிட்டு நடாத்திய நபிகளாரே அழகிய முன்மாதிரி!
Lafees Shaheed
மனிதர்களுக்கு விஞ்ஞானத்தையோ அல்லது தொழில் நுட்பம், மருத்துவம் போன்றவற்றையோ கற்பிக்க இறைத்தூதர்கள் அனுப்படவில்லை. மாறாக இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் மனிதர்கள் தமக்கு மத்தியிலான உறவுகள் போன்றவற்றை சீர்படுத்தவே இறைதூதும் அதைத் தாங்கிய…
மனிதர்களுக்கு விஞ்ஞானத்தையோ அல்லது தொழில் நுட்பம், மருத்துவம் போன்றவற்றையோ கற்பிக்க இறைத்தூதர்கள் அனுப்படவில்லை. மாறாக இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் மனிதர்கள் தமக்கு மத்தியிலான உறவுகள் போன்றவற்றை சீர்படுத்தவே இறைதூதும் அதைத் தாங்கிய…