அதிகாலைப் பொழுது

  • 13
ஸூறதுல் பஜ்ரால் வருடப்பட்ட இதய ஓசை

அழகோடிணைந்த
அடிவானின் உதயம் சுமந்த
அம்சமானதோர்
அதிகாலைப் பொழுது
சத்தியம் தாங்கியது

எட்டிப் பிடிக்க முடியா
எட்டோடிரண்டு
ஏகாந்தமாய் போன
எழில் பொங்கும் இரவுகள்
சத்தியம் தாங்கியன.

இரண்டிரண்டாகிய
இரட்டைகளும்
ஒவ்வொன்றாய்
ஒன்றித்துப் போன
ஒற்றைகளும்

கரிகாலன் காலைப்போல்
காரிருள் சூழ்ந்து
கடந்து செல்லும்
இராத்திரிகளும்
சத்தியம் தாங்கியன.

அனைத்துமே
ஆறறிவும்
ஆளுமையும்
ஆழ்ந்த புலனும்
அம்சமாய் ஒன்றித்த
அறிவுடையோர்
அகந்திறந்து பார்த்திட

பூலோகம் முளுதும்
புதிதாய் திடமாய்
பூத்திட்ட கால்கள் போல
பூரிக்க வைத்திடும்
புதுமையாம் “இறம்” எனும்
தூண்களுக்கு
தாங்களே சொந்தக்காரராம்
வான் போற்றும்
வங்காளம் அதிசயிக்கும்
உறுதி பூண்ட
அறுதியான
படைப்பாம் “ஆது”
கூட்டம்
இறையோனை நித்தம்
இறைஞ்சிடாமையால்
இடிந்துபோன
சரிதத்தைச் சற்றே
சிந்தித்திடு!

பள்ளத்தாக்குகளைப்
படுக்கையாக்கி கன
பாறைகளைப்
பஞ்சணையாக்கி
பாரிலே பார்ப்போர் வியக்க
பாறாங்கல் கூட
பறந்திடும் இலவன்
பஞ்சென நெஞ்சை நிமிர்த்தி
பயமற்று மாறுகள் செய்த
“ஸமூத்” கூட்டத்தை
பார்த்துப்
பக்குவமாய்
பறந்திடும் பஞ்சுகளைப் போல
பரிதவிக்கச் செய்த
சம்பவத்தைச் சற்றே
யோசி

ஆள் பலத்தால்
அண்டம் கொண்டவன்
படை பலத்தால்
பாரை ஆண்டவன்
செல்வச் செளிப்பால்
செங்குருதி வழி கூட
செதுக்கிய பவளப்பாதையெனப்
பூண்டவன்
அடக்கி ஆண்டவன்
அவன் மக்களை
அள்ளிப் பிழிந்தவன்
அகநெஞ்சில்
அசைக்க முடியா
கர்வம் கவர்ந்த
காந்தமாம்
“பிர்அவ்ன்”
ஒற்றை நாழிகையுள்
சுற்றமும் கடலால்
சூழ்ந்த சூழ்ச்சியுள் அகப்பட்டு
சுக்கு நூராகிய
கோரப்பிடியைச்
சற்றே நினைத்திடு

கண்ணியங்கள் கோடி
விண்ணகங்கள் போற்றி
மண்ணகங்கள் வாழ்த்தி
இறையோன் தினம்
இனியதோர் வாழ்க்கை
இயம்பிட்டால்
இறைபன்பிது என்
இறைவன் கண்ணியம் கோடி
இயம்புகிறான் என்றெண்ணும்
மானுடனே
அதுவும் அழகிய
சோதனையே இது
மறந்து நீ
சாதனைப் புகழாரம்
பாடுகிறாய்

தினம் தினம்
உண்டுவந்த
உண்டி தனை
உறைய வைத்து
பதற வைக்கும் பசி
வெறுமையான வறுமை
அழவைக்கும் இழப்பு
நெஞ்சை இறுக்கும் நெருக்கடிகள்
தருகையில் அழுது புலம்பி
தினம் திட்டி
மாய்கிறாய் உன்
இறையோனின் இனிய
சோதனையே இதென்பதை
மறந்த மந்தையாய்

நரகம் கண்டு
நடுங்காது
சுவனம் கொண்டு
சுகம் பெற
உந்தன் ஆத்மாவை
உறுதிசெய்திடு
ஈமான் எனும்
ஈருலக ஈடேற்றம் கொண்டு.

சாந்தி பெற்ற ஆத்மாவே
சுவனம் நுழைக!
சாந்தி பெற்ற ஆத்மாவே
சுவனம் நுழைக!

Sheefa Ibraheem (Hudhaaiyyah)
B.A (Hons) Ⓡ SEUSL
Psychological Counsellor Ⓡ
Maruthamunai.

ஸூறதுல் பஜ்ரால் வருடப்பட்ட இதய ஓசை அழகோடிணைந்த அடிவானின் உதயம் சுமந்த அம்சமானதோர் அதிகாலைப் பொழுது சத்தியம் தாங்கியது எட்டிப் பிடிக்க முடியா எட்டோடிரண்டு ஏகாந்தமாய் போன எழில் பொங்கும் இரவுகள் சத்தியம் தாங்கியன.…

ஸூறதுல் பஜ்ரால் வருடப்பட்ட இதய ஓசை அழகோடிணைந்த அடிவானின் உதயம் சுமந்த அம்சமானதோர் அதிகாலைப் பொழுது சத்தியம் தாங்கியது எட்டிப் பிடிக்க முடியா எட்டோடிரண்டு ஏகாந்தமாய் போன எழில் பொங்கும் இரவுகள் சத்தியம் தாங்கியன.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *