அப்பா
- by admin
- 15
குழந்தைகளின் முதல் ஹீரோக்கள் அவர்களின் அப்பாக்களே.எனக்கும் கூட. ஈராறு மாதங்கள் அன்னை நம்மை சுமந்து பெற்றெடுத்தாலும் தன் ஆயுள் வரை அன்னையையும் பிள்ளைகளையும் சுமப்பவர் என்றால் அது அப்பா தான். நாம் வாழ தம் வாழ்க்கை , இளமை இரண்டையும் தியாகம் செய்யும் ஒரு உன்னதமான உயர்ந்த ஜீவன் என்றால் அது அப்பா தான். ஒரு பிள்ளைக்கு தன் தன் தந்தையை விட சிறந்த பாதுகாவலரை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியாது என்றே சொல்லலாம். அப்பாக்களுக்கு பல முகங்கள் உண்டு. நம் அம்மா கண்ணீர் விட்டு அழுவதை சில சமயம் நாம் கண்டிருப்போம். ஆனால் அப்பாக்கள் ஒரு போதும் தம் பிள்ளைகள் முன்பு கண்ணீர் விட மாட்டார்கள்.
என் அப்பாவும் இவ்வாறு தான் அப்பாவி என்ற நாமத்தின் அடையாளமாக திகழ்பவர் .எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவர் என்னை தண்டித்தது இல்லை. அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் இடையே ஒரு உன்னதமான உறவு இழையோடுகிறது . மகள்மார் தம் தந்தை மீது உயிரையே வைத்திருப்பார்கள். நான் மட்டும் இதற்கு விதிவிலக்கானவள் அல்ல. அப்பாக்களும் தம் மகள்மார் மீது உயிரையே வைத்திருப்பார்கள் .அவர்களின் ஆசைகள், விருப்பங்கள் போன்றவற்றை இலகுவில் புறக்கணிக்க மாட்டார்கள்
சிறுவயதில் என்னை தன் தோளில் தூக்கி உலகையே எனக்கு காட்டியவர் என் அப்பா தான். என்னுடன் நிறையவே விளையாடி இருக்கிறார் .அவர் பெற்ற அனுபவங்கள் மூலம் எனக்கு வழி காட்டி இருக்கிறார். நினைவலைகளை மீட்டும் போது கடந்து வந்த அந்த பொற்காலங்களை நோக்கி மீண்டும் செல்ல வேண்டும் என மனம் கூறும் . ஆனால் கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கலாமே தவிர திரும்பி போக முடியாதல்லவா?
எனது தந்தைக்கு சினிமா படங்கள் பார்ப்பது என்றால் பிடிக்காது. நான் பாடசாலை பருவங்களில் சில சமயங்களில் படங்கள் பார்ப்பதை கண்டாலும் அவர் பெரிதாக விரும்புவதில்லை. “இதில் எதற்காக நேரத்தை வீணாக செலவிட வேண்டும்.” என்பார். அதுவே சரியென நானும் நகர்ந்து விடுவேன். பரீட்சைகள் முடித்து வீட்டில் ஓய்வாக இருந்த காலப்பகுதிகளில் தான் ஓரிரு படங்கள் பார்த்து இருப்பேன் எனலாம்.
ஒவ்வொரு நாளும் காலையில் தொழிலுக்குப் போய் மாலையில் களைப்புடன் வீடு திரும்பும்போதே, “நான் நன்றாகப் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும், தந்தையின் கனவுகளை நிறைவேற்றியே தீர வேண்டும்” என சபதம் எடுத்த பின்னரே படிக்கத் தொடங்குவேன். அவ்வாறே பல இன்னல்கள், சவால்கள் மத்தியில் சபதத்தின் இறுதிக் கட்டத்தை மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறேன், பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்தவளாய். என் தந்தை எனக்குச் செய்த தியாகத்தை எண்ணியவாறே அவரது கனவுகளை நிறைவேற்ற வாய்ப்புக்கள் அளிக்குமாறு இறைவனிடம் தினம் தினம் வேண்டுகிறேன்.
Mishfa Sadhikeen
குழந்தைகளின் முதல் ஹீரோக்கள் அவர்களின் அப்பாக்களே.எனக்கும் கூட. ஈராறு மாதங்கள் அன்னை நம்மை சுமந்து பெற்றெடுத்தாலும் தன் ஆயுள் வரை அன்னையையும் பிள்ளைகளையும் சுமப்பவர் என்றால் அது அப்பா தான். நாம் வாழ தம்…
குழந்தைகளின் முதல் ஹீரோக்கள் அவர்களின் அப்பாக்களே.எனக்கும் கூட. ஈராறு மாதங்கள் அன்னை நம்மை சுமந்து பெற்றெடுத்தாலும் தன் ஆயுள் வரை அன்னையையும் பிள்ளைகளையும் சுமப்பவர் என்றால் அது அப்பா தான். நாம் வாழ தம்…