ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசி வரும் இளம் பாரதி
- by admin
- 51
அன்பாளன் அருளாளன் எல்லாம் வல்ல இறைவன் பெயரால் ஆரம்பிக்கிறேன். புகழ் அனைத்தும் ஏக வல்லோன் அல்லாஹ்வுக்கே உரியது. எனது ஆக்கங்களை பலர் வாசித்து வருவது அல்லாஹ் தந்த மாபெரும் அருள். நானும் எனது அறிவிற்கும் எனது சக்திக்கும் ஏற்றாற்போல 50க்கும் அதிகமான காலத்திற்கேற்ற தலைப்பில் ஆக்கங்களை எழுதி வருகிறேன். வாசகர்கள் பலரது வேண்டுகோளுக்கிணங்க எனது தொடர் கட்டுரையான பௌத்த தர்மமும் இஸ்லாமும் கட்டுரை தொகுதியில் நான்கு தொகுதிகள் வெளியாகியுள்ள தோடு இறுதி தொகுப்பு தவிர்க்க முடியாத காரணங்களினால் இதுவரை வெளியிடப்படவில்லை. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்.
என் வாழ்நாளில் நான் பிரதான கனவுகளாக கண்ட கனவுகளில் இன்று மூன்றாவது கனவு நனவாகும் நாள். முதலாவது கனவு இலங்கையின் உயர் இஸ்லாமிய கலாபீடமான ஜாமியா நளீமியாவிற்கு செல்வது. அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அதற்கான ஏற்பாட்டை செய்து இன்றுவரை அருள் புரிந்து வருகின்றான். இரண்டாவது கனவு பல தடைகளை தாண்டி 2018 12 மாதம் 21ஆம் திகதி அன்று நூலாக வெளிவந்த எனது கன்னி நூல் மைல்கற்கள். அல்ஹம்துலில்லாஹ் நாட்டின் பிரபல நூலாசிரியர்கள் வழிகாட்டலின் கீழ் அந்த கனவும் நிறைவேறியது. ஆம் அவ்வாறெனில் மூன்றாவது கனவு என்ன இவ்வளவும் நான் கூறியதற்குக் காரணம் மூன்றாவது கனவு பற்றிக் கூறி இக்கட்டுரையை ஆரம்பிப்பதுதான். விவாதம், மேடை பேச்சு, பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகளில் அதிக ஈடுபாடு உடைய எனக்கு இந்திய பிரபல பட்டிமன்ற இரு பெண் பேச்சாளர்களது பேச்சுக்கள் அவர்களது ஆற்றல்கள் என்னை கவர்ந்தது. ஒன்று பிரபல பேச்சாளர் கவிஞர் மற்றும் ஆசிரியை செல்வி சீமா. அடுத்தவர் இந்த ஆக்கத்தின் கதாநாயகி பிரபல பட்டிமன்றப் பேச்சாளர், இளம்பாரதி, பள்ளி மாணவி, தோழி J.சுல்தானா பர்வீன் அவர்கள்.
சீமாவுடன் தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகள் கிடைக்காதது ஒரு புறம் கவலையாக இருக்க அல்லாஹ் செய்த மாபெரும் அருள் சுல்தானா பர்வீனுடைய தந்தையினது தொடர்பு எனக்கு ஏற்பட்டது. இலங்கை வருவார் என எதிர்பார்த்திருந்த போதும் அல்லாஹ்வின் ஏற்பாடு அந்த பயணம் தடையானது. என்றாலும் அவருடைய தந்தையுடனான தொடர்பின் மூலம் அவரது தொடர்பு கிடைத்தது. அவரது பட்டிமன்ற பேச்சுக்களை தொடர்ந்தும் பார்க்கும் எனக்கு ஒரு முஸ்லீம் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி இவ்வளவு பெரிய சாதனைகளை படைக்கிறார் என்றால் இவர் எமது இலங்கைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார் என முடிவு செய்து கொண்டேன். அன்று ஒரு தீர்மானம் எடுத்தேன். எவ்வாறாவது தோழியின் வாழ்க்கை தொடர்பான குறிப்புகளை தோழியிடம் இருந்து பெற்று ஆக்கம் ஒன்றாக வெளியிட வேண்டும் என்று. கிட்டத்தட்ட ஒரு வருட கால முயற்சியினால் பல தடைகளை தாண்டி இன்று அந்த முயற்சியும் வெற்றி அளித்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி கர்நாடக மாநிலம் எலஹங்கா எனுமூரில் S.ஜமால் முஹம்மது J.சகீதா பானு தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இது அந்த தம்பதியினரது இரண்டாவது குழந்தையாகும். ஏலவே J.ஷபானா பர்வீன் என்ற மகள் ஒன்று இருக்கும் போது இந்த குழந்தை பிறக்கிறது. முஹம்மத் யஸார் என்ற அன்பு தம்பியையும் கொண்ட இந்த குழந்தைக்கு பெற்றோர் J. சுல்தானா பர்வீன் என பெயர் சூட்டுகின்றனர்.
சிறுபராயம் முதலே அதீத திறமை உடைய அந்த குழந்தையை பெற்றோர் 2006ஆம் ஆண்டு ஆரம்ப கல்விக்காக தமிழ் மொழி மூலத்தில் அரச பாடசாலை ஒன்றில் சேர்கின்றனர். முதலாம் தர முதல் ஐந்தாம் தரம் வரை அங்கு கல்வி கற்ற தோழி, ஆறு முதல் எட்டாம் தரம் வரை KIDS PARK கிணத்துக்கடவு பாடசாலையில் கல்வி கற்றார். ஒன்பதாம் தர முதல் பன்னிரண்டாம் தரம் வரை தமது இடைநிலை கல்வியை இந்தியாவின் கோவை பிரதேசத்திலுள்ள பள்ளி ஒன்றான பண்டிட் நேரு மெட்ரிக் பள்ளியில் செவ்வனே முடிக்கின்றார். அதன் பின்னர் தற்போது தனது உயர் கல்வியை கோவையில் உள்ள TexCity Arts and Science college இல் B.Com (CA) துறையில் தொடர்கின்றார்.
இவர் இறுதியாக பன்னிரண்டாம் வகுப்பின் போது 980 மதிப்பெண்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு ஒரு கல்வி கற்கும் மாணவியாக இருக்கும் இவர் அதே வேளையில் பிரபல பேச்சாளராக உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று உள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை.
தொலைக்காட்சி பேச்சாளராக அறிமுகம்.
அந்த அடிப்படையிலேயே தனது மிட்டாய் சாதனைக்கு வாய்ப்பு தந்த முதல் நிகழ்வாக சன்.டி.வி அரட்டை அரங்க நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார் தோழி. அரட்டை அரங்கம் பேச்சாளராக பேசியது பற்றி மகிழ்வுடன் நினைவு கூறிய அவர், 2010 எட்டாம் மாதம் பதினைந்தாம் திகதி தான் முதலாவது தொலைக்காட்சி பேச்சாளராக பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறுகிறார். இதுபற்றி தொடர்ந்து அவர் கூறுகையில் “தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில் பேச்சாளராக வேண்டுமா?” என்ற விளம்பரத்தைப் பார்த்த என் அன்பு பெற்றோர்கள் என்னை அந்த நிகழ்விற்கு அழைத்துச் சென்றனர். சுவாரசியமான விடயம் என்னவென்றால் அந்த போட்டிக்கு வழங்கிய தலைப்பு சீர்வரிசை திருமணமா? சீர்திருத்த திருமணமா? என்பதாகும். அங்கு போட்டி நடுவர்கள் என் பெற்றோரை அழைத்து ‘உங்க பொண்ணுக்கு இப்பதான் 10 வயது. இந்த தலைப்புல எப்படி பேசப் போகுது?’ என்று கூறியதோடு ‘குழந்தைகளுக்கு ஏற்ற தலைப்பு வரும்போது கலந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது என் பெற்றோர்கள், ‘பொண்ணு பேசுவதை கொஞ்சம் கேளுங்க சார்’ என்றார்கள் ‘சரி பேசுமா’ என்றார்கள் நடுவர்கள். இந்தப் போட்டிக்காக சுமார் 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் வந்த அதே நேரத்தில் வயதில் மூத்தவர்களே அதிகமாக வந்திருந்தனர். நான் சீர்திருத்தத் திருமணம் என்ற தலைப்பில் ‘சீர்வரிசை சீர்வரிசைனு கேட்டு கேட்டு வாங்குபவர்கள் வீட்டுக்கு போகும்போது பொண்ணு பணத்தோடு அவ மனசுல பகையும் சேர்த்துக்கொண்டு போறா’ என்று பேசி முடித்ததும் அங்கிருந்த பொள்ளாச்சி பாலு என்பவர் என்னை அந்த நிகழ்வில் தொலைக்காட்சியில் பேசுவதற்கு தெரிவு செய்தார். இவ்வாறுதான் தனது முதல் தொலைக்காட்சி பேச்சாளர் அறிமுகம் பற்றி கூறுகிறார் தோழி அவர்கள்.
இங்கு ஒட்டு மொத்த உலக மக்களும் நோக்க வேண்டிய ஒரு விடயத்தை குறிப்பிட நினைக்கிறேன். 10 வயது குழந்தைக்கு என்ன தெரியும் என்று மட்டம் தட்டிய போது ‘சரிங்க ‘என்று கூறி திரும்பி வந்து இருந்தால் இப்படிப்பட்ட ஒரு பேச்பொசாளரை உலகம் கண்டிருக்காதோ என்னவோ, அன்று அந்தப் பெற்றோர்கள் தன் பிள்ளையின் திறமை அறிந்து, தன் பிள்ளைக்கு நம்பிக்கை ஊட்டி, ‘இல்ல பொண்ணு பேசுறத கேளுங்க’ என்று சொன்னதன் விளைவு இன்று முழு உலகமுமே ரசிகராக மாறியுள்ளது அந்தத் தோழிக்கு.
தோழியின் பட்டிமன்ற பேச்சாளர்கள் பற்றி பார்ப்போம்.
2014 ஆம் ஆண்டில் ஒன்பதாம் தரத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது கலைஞர் தொலைக்காட்சியில் பிரபல பட்டிமன்ற நடுவர் புன்னகை, அரசர் வாழ்ந்த பழமையா? வாழும் புதுமையா? என்ற தலைப்பில் வாழ்ந்த புதுமையே என்ற வாதத்தின் அடிப்படையில் பேச வாய்ப்பளித்த நடுவர் லியோனி அவர்களே தன்னை பட்டிமன்ற பேச்சாளர் அறிமுகம் செய்ததாக கூறுகிறார் தோழி.
இஸ்லாமிய தஃவா பேச்சாளராக
இவ்வாறு அல்லாஹ் தனக்கு வழங்கிய அருளை பல தொலைக்காட்சிகளில் பாவித்த தோழியை நான் கேட்ட விடயம் என்னவென்றால் தற்போது நீங்கள் இஸ்லாமிய தஃவா பேச்சாளராக கடமையாற்றிகிறீர்கள். கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயற்பாடுகிறீர்கள். இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என கேட்டேன்.
இஸ்லாமிய தஃவா பேச்சு பற்றி நான் கேட்டதற்கு தோழி தந்த பதிலானது என் உடலை பூரிப்படைய செய்து என்றுதான் கூற வேண்டும். அந்த பதிலை அவ்வாறே தருகிறேன். ‘உண்மையிலே நான் இஸ்லாமிய தாஃவா பேச்சில் களமிறங்க பிரதான காரணம் என்னை என்றும் ஊக்குவிக்கும் என் ரசிகர்களது வேண்டுகோள். உண்மையைச் சொன்னால் நான் ஆலிம் பட்டம் பெற்றவளோ. ஹாபிழ் பட்டம் பெற்றவளோ அல்ல. இன்னும் சொல்லப்போனால் அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆனை கூட அரபியில் ஓத எனக்கு இன்னமும் தெரியாது. ஆங்கிலத்திலும் தமிழிலும் நான் ஓதுவேன். அவ்வாறு படிப்பதன் மூலம் அதன் பண்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையிலேயே தான் எனது பயான் நிகழ்ச்சிகள் அமையும் என்கிறார் தோழி.
இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தை நான் என் வாசகர்களிடம் கேட்க விரும்புகிறேன். அரபு மொழியில் அல் குர்ஆன் ஓத சிரமப்படும் தோழி தமிழ், ஆங்கில மொழிகளில் ஓதி படித்து விளங்கி இன்று இஸ்லாமிய தஃவாவில் மிளிரும் பேச்சாளராக இருக்கிறார் என்றால் அரபு மொழியில், தமிழ் மொழியில், சிங்கள மொழியிலும் ஆங்கில மொழியிலும் வெளிவந்துள்ள அல் குர்ஆனை குறைந்தது ஓதுகின்றோமா? என்ற கேள்வியை கேட்க விரும்புகிறேன்.
அடுத்து நான் தோழியிடம் கேட்ட முக்கியமான கேள்விதான் உங்களது வெற்றியின் ரகசியம் என்ன?
‘வெற்றியின் இரகசியம் அல்லாஹ்விடம் தான் உள்ளது. என்னை பொருத்தவரை அறிவையும் நேரத்தையும் சரியாக பயன் படுத்துகிறேன். அதுதான் எனது வெற்றியின் இரகசியம் என்று சொல்லலாம்’. தோழியின் வெற்றிக்குத் துணை நிற்பவர்கள் பற்றி நான் கேட்டபோது ‘அல்லாஹ் தான் துணை நிற்கிறான். நபர்கள் என்று கூறும் போது ஒரு வாய்ப்பை கூட நழுவ விடாது என்னோடு பயணிக்கும் பெற்றோர்கள் என்று கூறுகிறார் தோழி சுல்தானா பர்வீன் அவர்கள். அத்தோடு அல்லாஹ் உலகில் தனக்கு வழங்கிய மிகப்பெரிய அருட்கொடை தனது பெற்றோர்கள் என்றும் உலக மக்கள் தன்னை ஊக்குவிப்பதும் தனது உரைகளுக்கு பாராட்டுக்கள், ஆக்கபூர்வமான விமர்சனங்களை வழங்கி தான் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என துஆச் செய்யும் ரசிகர்களே தன்னுடைய துணை என்றும் கூறுகிறார் இவர்.
அதேபோன்று இவர் இதுவரை சன் டிவியில் 4 முறையும் ராஜ் டிவியில் ஐந்து முறையும் கலைஞர் டிவியில் 7 முறையும் கே டிவியில் இரண்டு முறையும் வேந்தர் டிவியில் மூன்று முறையும் ஜெயா டிவியில் இரண்டு முறையும் புதுயுகம் டிவியில் இரண்டு முறையும் கலைஞர் செய்திகளில் இரண்டு முறையும் உரையாற்றி உள்ளதோடு கல்லூரி, பள்ளிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பிரபல மேடைகளில் சிறப்பு பேச்சாளராக பேசியுள்ளார். அத்தோடு கலைஞர் டிவி நடத்திய லியோனி ஐயாவின் நல்லா பேசுங்க நல்லதையே பேசுங்க என்ற பேச்சு அரங்கில் பங்குகொண்டு மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்று இந்திய முத்தமிழறிஞர் கலைஞர் ஐயாவின் கைகளால் 2013 பத்தாம் மாதம் 12ஆம் திகதியன்று பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார் தோழி..இது தவிர TNMEET BEST SPEAKER AWARD, குவைத்தில் இளந்தமிழ் இன்பப்பாவை விருது, Excellence in Motivation விருது,Award of excellence விருது, தாய் டிரஸ்டினால் வழங்கிய இளம் சாதனையாளர் விருது,2018 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கிய இளம் பாரதி விருது, சமூக வாழ்நாள் சேவகர் விருது, சிங்கப்பூரில் சிறந்த பேச்சாளருக்கான விருது மற்றும் நினைவு விருதுகள் என பல விருதுகளை இதுவரை சொந்தமாக்கி கொண்டுள்ளார். கல்லூரிகள், பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள், பள்ளிவாசல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல மேடைகளில் உரையாற்றிய தோழி இதுவரை சிங்கப்பூர், மலேசியா, துபாய் என பல நாடுகளிலும் சென்று தனது பேச்சாற்றல் மூலம் தடம்பதித்து வந்துள்ளார்.
ஒரு கல்லூரியில் படிக்கும் போது இன்னொரு கல்லூரியில் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்படுகிறார் என்றால் தற்போது தமிழ்நாட்டில் வாழும் தோழியின் ஆற்றலுக்கு இதைவிட சான்று தேவைப்படாது. இன்னும் அல்லாஹ்வின் பேரருள் தனது பயணத்தில் இதுவரை வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான் என்று கூறும் தோழி கசப்பான அனுபவங்கள் என ஏதாவது எனக் கேட்டபோது தனிப்பட்ட வகையில் இருக்கின்றன அவற்றை சொல்ல விரும்பவில்லை என்றார்.
தங்களது எதிர்கால கணவர் எவ்வாறு அமைய வேண்டும் என வினவியபோது ‘என் திறமைக்கு மதிப்பளித்து என் பெற்றோர்களை போல இருக்க வேண்டும்’ என எதிர்பார்ப்பதாக கூறினார்.
இறுதியாக சமூகப் பொறுப்பு வாய்ந்த இளைஞர் என்ற அடிப்படையில் சில கேள்விகளைக் கேட்டேன். அதற்கு அவர்கள் தந்த பதிலை கீழே தருகிறேன். ஒட்டுமொத்த உலக முஸ்லிம் சமூகத்திற்கும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தோழி சொல்ல விரும்புவது என்னவென்றால் ‘இஸ்லாமிய சகோதரத்துவம் என்பது இரத்த உறவுகளை விட மேலானது. ஒரு முஸ்லிமுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களை தன்னுடைய துன்பம் என உணர்ந்து அக்கறை காட்டி கவலைப்பட வேண்டும் எனக் கூறியதோடு இலங்கை முஸ்லீம் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தான் வழங்கும் ஆலோசனை என்னவென்றால் கல்வி இந்த பருவத்திற்குறியது என்ற வரையறை கிடையாது. மரணம் வரை கல்வியின் பயணம் தொடர வேண்டும் என எண்ணம் இருந்தால் விழிப்புணர்வுடன் இருப்பதோடு அநீதியை தட்டிக்கேட்ட அறிவு முக்கியம் என உணர்ந்து தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்வதோடு, இறுதியாக இறைவன் செய்த மாபெரும் அருள் இப்படிப்பட்ட இளம் பெண் ஆளுமை தொடர்பான ஆக்கத்தை தொகுப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தியதற்கு.. சுமார் கிட்டத்தட்ட பத்து வருட காலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் பேசி முழு உலகையே தன் பால் ஈர்த்ருதிருக்கும் இப்படிப்பட்ட ஒரு ஆளுமை இன்றைய உலக சகல சாதிக்கத் துடிக்கும் முஸ்லீம் யுவதிகளுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரி எனகூறி இந்த ஆக்கத்திற்கு முற்றுப்புள்ளி இடுகிறேன்.பஸீம் இப்னு ரஸூல்
நிகவெரட்டிய.
அன்பாளன் அருளாளன் எல்லாம் வல்ல இறைவன் பெயரால் ஆரம்பிக்கிறேன். புகழ் அனைத்தும் ஏக வல்லோன் அல்லாஹ்வுக்கே உரியது. எனது ஆக்கங்களை பலர் வாசித்து வருவது அல்லாஹ் தந்த மாபெரும் அருள். நானும் எனது அறிவிற்கும்…
அன்பாளன் அருளாளன் எல்லாம் வல்ல இறைவன் பெயரால் ஆரம்பிக்கிறேன். புகழ் அனைத்தும் ஏக வல்லோன் அல்லாஹ்வுக்கே உரியது. எனது ஆக்கங்களை பலர் வாசித்து வருவது அல்லாஹ் தந்த மாபெரும் அருள். நானும் எனது அறிவிற்கும்…