மன்னிப்பாயா?
- by admin
- 10
“எப்படியிருக்கிறாய்?”
வினாதொடுக்கும்
வேளையெல்லாம்
“நீ நலமாய் இருக்கணும்”
என்றெண்ணி என்
இதழ் மட்டும் மலருமே உம்மா!
‘சிரிச்சிக்கோ என்ன கேட்டாலும்’
என கோபிப்பாய் அடிக்கடி
‘பொய்ம்மையும் வாய்மை யிடத்த
புரை தீர்ந்த நன்மை பயக்குமென’
அறிந்தும் உன் வெறுப்பஞ்சி
முறுவலித்தே மறைப்பேன் எல்லாம்.
இத்தனை கோபம்
எதற்கு என்மேல்?
தண்டிப்பதற்காய் தானே
தவிக்கவிட்டுச் சென்றாய்?
“அவசரப்பட்டுட்டோமே” என
அங்கலாய்த்தாயே!
அவசரம் கூடாதென
அமைதி காத்ததெல்லாம்
உனக்காய் தானே உம்மா!
உன்னுதிரம் என்பதால்
உணர்ந்து அறிந்தாயோ
உண்மையெல்லாம்!
உதிர்ந்த மலரானாய் நீ!
உன்னை இழந்து
பட்டமரமானேன் நான்!
எல்லாம் கற்பித்தாயே!
நீயற்ற உலகில் வாழ்வதை தவிர
பூமா தேவி போன்றவளே!
உன்னிடத்தை நான் நிரப்ப
மெளலி சூட்டினாயோ
மரணம் தழுவி அன்று?
எரிமலை வெடித்தாலும்
இடி தலை வீழ்ந்தாலும்
சாயா குன்றெனவே நிமிர்ந்து
என் தீவகத்தில்
ராணியாகித் தான்
போனேன் இன்று!
நான் நலமாய்
வளமாய் இருப்பதாய்
வாப்பா வந்து
சொல்லியிருப்பாரே!
இனியேனும்
என்னை மன்னிப்பாயா?
உண்மையில்
இப்போது நான்
நலமாய் தானிருக்கிறேன்.
நஷீரா ஹஸன்
“எப்படியிருக்கிறாய்?” வினாதொடுக்கும் வேளையெல்லாம் “நீ நலமாய் இருக்கணும்” என்றெண்ணி என் இதழ் மட்டும் மலருமே உம்மா! ‘சிரிச்சிக்கோ என்ன கேட்டாலும்’ என கோபிப்பாய் அடிக்கடி ‘பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமென’…
“எப்படியிருக்கிறாய்?” வினாதொடுக்கும் வேளையெல்லாம் “நீ நலமாய் இருக்கணும்” என்றெண்ணி என் இதழ் மட்டும் மலருமே உம்மா! ‘சிரிச்சிக்கோ என்ன கேட்டாலும்’ என கோபிப்பாய் அடிக்கடி ‘பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமென’…