மனிதத்தோடு மரணித்திடுங்கள்
- by admin
- 14
சமூகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஒரு மனிதனை வாழவைப்பதும் சமூகமே , அதே மனிதனை அடையாளம் தெரியாமல் அழிப்பதும் சமூகமே. மனிதன் தவறுக்கும், மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டவன் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், அவன் செய்த தவறை சொல்லிச் சொல்லியே இந்த சமூகம் அவனை தாழ்த்தி விடுகிறது.
தான் செய்யும் தவறை, தப்பை மறைப்பதும் அடுத்தவர் செய்வதை பகிரங்கப்படுத்துவதுமே இங்கே இருக்கும் சிலரின் கீழ்த்தரமான பண்பாகும். ஒரு மனிதன் செய்யும் குற்றத்தை தடுத்து அவனை அதிலிருந்து வெளியேற்றவே சட்டம் தண்டனை கொடுக்கிறது. சட்டம் அவனை திருந்தி வாழ்வதற்கு வழி காட்டுகிறதே தவிர வழி கேட்டில் விடுவதற்காக அல்ல. ஆனால் இதை சரியாக விளங்காத சிலர் அந்தக்குற்றத்தை சொல்லிக்காட்டியே அந்த மனிதனை சமூகத்தை விட்டும் தூரப்படுத்தி துரத்திவிடுகின்றனர்.
இங்கே ஒருவரின் வளர்ச்சியைப் பார்த்து யாரும் பாராட்டுவதில்லை. மாறாக அவனை எப்படியாவது கீழே விழச்செய்யவே சதி செய்கிறார்கள். நீங்கள் ஒருவரை தட்டிக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை தட்டிவிடாதீர்கள். ஏனெனில், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அது நன்மையோ தீமையோ அதற்கான கூலியை நிச்சயம் பெற்றுக்கொள்வீர்கள் என்பதை எந்த சந்தர்ப்பத்திலும் மறந்து விடாதீர்கள்.
இங்கு யாரும் மற்றவரின் மனதையும், செயற்பாடுகளையும் புரிந்துகொள்வதில்லை. ஒருவருடைய கவலை இன்னொருவருக்கு செய்தியாகவோ, கதையாகவோ தான் தெரிகிறது. நாம் தெரிந்து கொள்ளும் ஒரு விடயம் உண்மையோ, பொய்யோ, அது எந்த சந்தர்ப்பத்தில், எப்போது, எப்படி நடந்தது என அலசி ஆராயாமல் அடுத்தவர்களிடம் பரப்பி விடுகிறோம். அதனால், குறிப்பிட்ட அந்த சம்பவத்துக்கோ, விடயத்துக்கோ சொந்தமானவர்களின் உண்மையான நிலையை அறியாமல் நடந்து கொள்ளகிறோம். இதனால் அவர்கள் எவ்வாறான மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள் என்பதை இந்த சமூகத்தில் வாழும் நாம் யாருமே உணர்ந்து கொள்வதில்லை. காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது நிதர்சனமான உண்மை.
மனிதன் என்பவன் இன்னொரு மனிதனை புரிந்துகொள்ள வேண்டும். தான் மட்டுமே எல்லா விடயத்திலும் சரியானவன் என்ற எண்ணத்தைக் களைய வேண்டும். பதவிக்கும், அதிகாரத்துக்கும் மட்டுமே இன்று முதல் இடம் கொடுக்கப்படுகிறது . உண்மையும் நேர்மையும் மூடி மறைக்கப்படுகிறது. இதனை விட்டு நாம் வெளியே வர வேண்டும்.
எந்தவொரு விடயத்தையும் சரியான முறையில் அறிந்து கொள்ளாமல் அடுத்தவர்களிடம் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும். தான் உண்டு தன் வேலை உண்டு என வாழவும் கூடாது , அடுத்தவரின் அந்தரங்கங்களை அலசி ஆராயும் கூடாது. எதிலும் ஒரு நடுநிலையைப் பேண வேண்டும். தேவையானதை, சரியானதை தக்க சந்தர்ப்பத்தில் கதைக்க வேண்டுமே தவிர வீணான கதைகளையும், விவாதங்களையும் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு இலக்கோடும், நோக்கத்தோடும் தான் இங்கே படைக்கப்பட்டுள்ளான். எனவே, அடுத்தவர் வழியை மறிக்காமல் தன் வழியில் பயணிக்க வேண்டும். மனித உள்ளங்களில் கரைந்து போகும் கசப்பான நினைவுகளாக இல்லாமல் கலந்து கொள்ளும் நிஜங்களாக வாழந்து விட்டுச் செல்லுங்கள். இருக்கும் போது மட்டும் அல்ல இல்லாத போதும் அடுத்த மனிதனுக்கு ஆறுதலாக இருங்கள். மகிழ்ச்சியுடன் நினைவுக் கூறும் மனிதத்தன்மையோடு மரணித்திடுங்கள். ஒவ்வொரு மனிதனும் மாறும் போது சமூகம் தானாகவே மாறி விடும்.
Rushdha Faris
சமூகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஒரு மனிதனை வாழவைப்பதும் சமூகமே , அதே மனிதனை அடையாளம் தெரியாமல் அழிப்பதும் சமூகமே. மனிதன் தவறுக்கும், மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டவன் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால்,…
சமூகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஒரு மனிதனை வாழவைப்பதும் சமூகமே , அதே மனிதனை அடையாளம் தெரியாமல் அழிப்பதும் சமூகமே. மனிதன் தவறுக்கும், மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டவன் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால்,…