தெற்கில் காலூன்றும் இனவாதம்
- by admin
- 15
ARA.Fareel
நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டினையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகள் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.
இது ஒரு பௌத்த நாடு. இந்த நாடு எமக்கு மாத்திரமே சொந்தம். நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், கலை, கலாசாரம் என்பனவற்றுக்கு நாமே சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்று இனவாதிகள் நினைக்கிறார்கள். குறிப்பிட்ட சில இனவாதக் குழுக்கள் இந்த இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள நாட்டின் பல பகுதிகளில் இன முரண்பாடுகளைத் தோற்றுவித்து குளிர்காய முயற்சிக்கிறார்கள்.
தென் மாகாணத்தில் கடந்த வாரம் இவ்வாறான இரு சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. முஸ்லிம்களின் வர்த்தகம் குறிவைக்கப்பட்டிருகிறது. அதேவேளை முஸ்லிம்களின் பழைமை வாய்ந்த மரபுரிமை தலமொன்று சிதைக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம், அவர்களது மத ஸ்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு முற்றுப் புள்ளி வைப்போம், முஸ்லிம்களின் வர்த்தகத்துக்கு பாதுகாப்பு வழங்குவோம் என்னும் வாக்குறுதிகளை வழங்கியே தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது.
நல்லாட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒவ்வோர் தேர்தல் மேடைகளிலும் இந்த உறுதிமொழிகளை முன்வைத்ததார்கள்.
ஆனால் பதவிகள் கிடைத்ததும் அனைத்தையும் மறந்து விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தான் உண்மையான அரசியல்வாதிகள்.
போர்வைநகர் முஸ்லிம் கடைகள் தாக்குதல்
தென் மாகாணத்தில் கொடப்பிட்டியவில் அதுரலிய பிரதேச செயலாளர் பிரிவிலேயே போர்வை நகர் அமைந்துள்ளது. வரலாற்றுப் புகழ்மிக்க போர்வை பள்ளிவாசலும் இங்கேயே அமைந்துள்ளது. இந்தப் பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கு மாத்திரம் பிரசித்தி பெற்றதல்ல. பெரும்பான்மை சமூகத்தினரும் பெருமளவில் பள்ளிவாசலில் நடைபெறும் கந்தூரி வைபவங்களில் கலந்து கொள்வார்கள்.
போர்வை பள்ளிவாசல் ஜமாஅத்தில் சுமார் 540 குடும்பங்கள் அங்கம் வகிக்கின்றன. போர்வை ஓர் சிறிய நகரமாகும். இந்நகரில் சுமார் 15 முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளும் சிங்களவர்களுக்கு சொந்தமான 4 கடைகளும் இயங்கி வருகின்றன.
கடந்த 16 ஆம் திகதி முழு நாடும் சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரமது. அன்று அதிகாலை 1.40 மணியளவில் போர்வை நகர் முஸ்லிம் கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அதிகாலை வேளை நிசப்தமான அந்தச் சந்தர்ப்பத்தில் அசாதாரணமான சப்தம் கேட்பதை அறிந்து கடைகளுக்கு பின்னால் உள்ள வீட்டிலுள்ள ஒருவர் எழுந்து ஓடி வந்து பார்த்தார். அங்கே கடைகள் எரிந்து கொண்டிருந்தன. உடனே அயலவர்களைக் கூட்டி தீ பரவாது தடுத்தார்.
சம்பவம் அக்குரஸ்ஸ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸார் உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்து தீ பரவாது தடுத்தனர். ஆனால் சந்தேக நபர்கள் அங்கிருந்தும் தப்பிச் சென்றிருந்தனர். பெற்றோல் குண்டுத் தாக்குதலால் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மூன்று கடைகள் தீயினால் எரிந்துள்ளதுடன் ஒரு கடை சேதங்களுக்குள்ளாகியிருந்தது. பொலிஸார் பெற்றோல் நிரப்பப்பட்ட வெடிக்காத நிலையில் போத்தலொன்றினையும் கைப்பற்றினார்கள்.
அக்குரஸ்ஸ பொலிஸாரினால் கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டதுடன் இரசாயன பகுப்பாய்வுப் பிரிவினரும் தடயங்களை பரிசீலனைக்கு உட்படுத்தினார்கள்.
அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் சம்பவம் அறிந்ததும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவைத் தொடர்பு கொண்டு போர்வையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்துமாறும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் படியும் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை தாமதமின்றி கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
என்றாலும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டும் பொலிஸாரினால் இதுவரை சந்தேக நபர்களை இனங்காண முடியாமல் போயுள்ளது.
அக்குரஸ்ஸ பொலிஸார் போர்வை நகரின் சில சி.சி.ரி.வி கமரா பதிவுகள் பெற்று விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர். போர்வை பள்ளிவாசலின் சி.சி.ரி.வி. கமரா பதிவுகள் தெளிவிள்ளாமல் இருப்பதனால் அருகிலுள்ள வர்த்தக நிலையங்களின் சி.சி.ரி.வி கமரா பதிவுகள் பொலிஸாரினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
மக்தப் பொறுப்பாளர் பௌசுல் கரீம்
வர்த்தக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் தொடர்பில் கொடப்பிட்டிய மத்ரஸா மற்றும் மக்தப் பொறுப்பாளர் பௌசுல் கரீம் தெரிவித்துள்ள கருத்துகள் இத்தாக்குதல் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு போர்வை பகுதிக்கு வெளியிடங்களிலிருந்து வருகை தந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
ஏனென்றால் பௌசுல் கரீம் போர்வை பகுதியில் முஸ்லிம்களும் பெரும்பான்மை இனத்தவர்களும் நீண்டகாலமாக எதுவித பிரச்சினைகளுமின்றி ஒற்றுமையாகவே வாழ்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார். கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.40 மணியளவிலே முஸ்லிம் கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் காரணமாக தொலைபேசி கடை, ஹோட்டல் ஒன்று மற்றும் பழங்கள் விற்பனை நிலையம் என்பன தீப்பற்றி சேதங்களுக்குள்ளாகியுள்ளன. மற்றொரு கடைக்கு எறியப்பட்ட பெற்றோல் குண்டு வெடித்துச் சிதறாத நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
போர்வை பகுதியில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் எதுவித பிரச்சினைகளுமின்றி ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். இப்பகுதியில் ஒற்றுமையுடன் வாழும் இரு சமூகத்துக்குமிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்ட சதியே இது. இத்தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டுமென இப்பகுதி பன்சலைகளின் தலைமை தேரர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
போர்வை பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.எம்.பாரூக்
போர்வை பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.எம்.பாரூக் பெற்றோல் குண்டுத் தாக்குதலையடுத்து தெரிவித்துள்ள கருத்துகள் போர்வை பகுதியில் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மையினத்தவர்களுக்குமிடையே உள்ள மிக நெருக்கமான உறவினை உறுதி செய்கின்றன. அவ்வாறாயின் இப்பகுதியில் முஸ்லிம் சிங்கள உறவினை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகள் இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம்களும் சிங்களவர்களும் இங்கு ஒரே குடும்பமாக சகோதரர்களாக வாழ்கிறோம். நோன்பு காலங்களில் பள்ளிவாசல் வழங்கும் கஞ்சியை அவர்கள் பெற்றுச்செல்வார்கள். அவர்களது நிகழ்வுகளில் நாங்கள் கலந்து கொள்வோம் எங்கள் நிகழ்வுகளில் அவர்கள் கலந்து கொள்வார்கள்.
இரத்ததான நிகழ்வுகளில் நாம் இரு தரப்பினரும் வேறுபாடுகளின்றி கலந்து கொள்வோம். அக்குரஸ்ஸயில் நடைபெற்ற புதுவருட நிகழ்வுகளில் நாமும் கலந்து கொண்டோம். சிங்கள புதுவருட நிகழ்வில் அல்மத்ரஸதுல் காதிரிய்யா மாணவிகளின் இஸ்லாமிய கலாசார நிகழ்ச்சியொன்றினையும் நடத்தினோம்.
எமது சிறுமிகள் பெரும் பாராட்டுகளையும் பெற்றனர். இவ்வாறு எங்களுக்கிடையே ஒற்றுமை நிலவுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் எங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த இந்த சம்பவத்தை யார் நிகழ்த்தினார்கள் என்று தெரியவில்லை என்று போர்வை பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.எம்.பாரூக் தெரிவிக்கிறார்.
பள்ளிவாசல் நிர்வாகம் உடனடி நடவடிக்கை
போர்வை நகரில் முஸ்லிம் கடைகள் பெற்றோல் குண்டுத் தாக்குதல்களுக்குள்ளானதையடுத்து போர்வை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் ஜமாஅத்தார்களை அழைத்து அறிவுரைகளை வழங்கியது. விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது.
மக்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாமெனவும் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை பொலிஸார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இப்பகுதி மக்கள் பெரும்பான்மை இனத்தவருடன் எவ்வித பேதங்களுமின்றி ஒற்றுமையாக இருப்பதால் வேறு பிரச்சினைகள் உருவாகுவதற்கு இடமில்லை என போர்வை முகைதீன் பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.எம்.பாரூக் தெரிவித்தார்.
பள்ளிவாசல் நிர்வாகம் முஸ்லிம்களுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு அக்குரஸ்ஸ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைக் கோரியதையடுத்து இரண்டு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விசேட பொலிஸ் பாதுகாப்பு
போர்வை நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதையடுத்து வர்த்தக நிலையங்களுக்கும் போர்வை நகருக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
போர்வை பள்ளிவாசலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமரா வீதியை நோக்கி பொருத்தப்படாமையினால் அதன் பதிவுகள் தெளிவற்றதாயுள்ளன.
எனவே சி.சி.ரி.வி. கமராவை வீதியை நோக்கி பொருத்துமாறு பொலிஸார் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலிஸார் அனைவரதும் ஒத்துழைப்புகளைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
திணைக்களம் தகவல் திரட்டு
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் முஸ்லிம் வர்த்தக நிலைய தாக்குதல் தொடர்பில் தகவல்களைத் திரட்டியுள்ளது. திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர் எச்.ஏ.வாசில் அஹமட் கருத்து தெரிவிக்கையில்;
போர்வை நகரில் 90 வீதமான கடைகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவைகளாகும். 4 கடைகளே சிங்களவர்களுக்கு உரியதாகும். இந்நகரைச் சூழ சிங்கள கிராமங்களே இருக்கின்றன என்றார். போர்வை பள்ளிவாசலின் முன்னால் 2009 ஆம் ஆண்டு தேசிய மீலாத் விழா ஊர்வலத்தின் மீது தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலையும் அவர் நினைவு கூர்ந்தார்.
தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டமிட்ட சதியா?
போர்வையில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் அப்பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் முஸ்லிம் – சிங்கள நல்லுறவை சீர்குலைப்பதற்கான ஒரு சதித்திட்டம் என்றே பலராலும் தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டம் மிக இரகசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமையினாலே பொலிஸாரினால் இதுவரை சந்தேக நபர்களைக் கைது செய்வதில் தாமதமேற்படுகின்றது எனலாம்.
இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என மாத்தறை பொலிஸ் அத்தியட்சகர் கினிகே தெரிவித்துள்ள கருத்து கவனத்திற்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். பொலிஸார் கருத்துகளைத் தெரிவிப்பதுடன் மாத்திரம் ஸ்தம்பித்து விடாது சந்தேக நபர்களை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும் என்றே சமூகம் எதிர்பார்க்கிறது.
காலி ஸியாரம் உடைப்பு
கடந்தவாரம் தென் மாகாணத்தில் போர்வை நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களைத் தாக்குவதுடன் மாத்திரம் இனவாதிகள் அமைதியடையவில்லை. காலியில் முஸ்லிம்களின் மரபுரிமைச் சொத்தான ஸியாரம் ஒன்றினையும் சேதத்துக்குள்ளாக்கியுள்ளனர்.
முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் நிகழ்ச்சி நிரல்களை அரங்கேற்றி மீண்டும் ஓர் இனக்கலவரத்தை, வன்செயல்களை ஏற்படுத்துவதே இனவாதிகளின் நோக்காக இருக்கின்றமை இதிலிருந்தும் தெளிவாகிறது.
காலிக்கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்கரையில் அமைந்துள்ள ஷெய்ஹ் ஸாலிஹ் வலியுல்லாஹ் ஸியாரத்தின் பாதுகாப்பு மதில் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளது. காலி ஒல்லாந்தர் கோட்டை நிர்மாணிக்கப்படுவதற்கு முன்பிருந்தே குறிப்பிட்ட பகுதியில் ஷெய்ஹ் ஸாலிஹ் வலியுல்லாஹ்வின் அடக்கஸ்தலமும் அதற்கு அருகில் சுத்தமான குடிநீர் கிணறும் காணப்படுகின்றன.
பத்திரிமலை என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட ஸியாரம் சம்பந்தமாக காலி நகர பூர்வீக வரலாறு தொடர்பில் பேராசிரியர் பந்துசேன குணசேகர எழுதியுள்ள ஆய்வுநூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. யேமன் நாட்டிலிருந்து ஆன்மீக நோக்கமாக இலங்கை வந்த முஸ்லிம் பெரியார் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த ஸியாரம் அமைந்துள்ள இடத்தை சேதப்படுத்தியுள்ள இனவாதிகள் முஸ்லிம்களின் மரபுரிமை சின்னங்களை அழிப்பதற்கு முயற்சித்து வருகிறார்கள் என்பதனை உறுதி செய்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான்
காலி ஸியாரம் உடைக்கப்பட்டுள்ளமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் அரசாங்கம் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
காலி கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்கரையில் அமைந்துள்ள ஸியாரத்தின் பாதுகாப்பு மதில் சேதமாக்கப்பட்டுள்ளது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது இனவாதிகளின் செயலெனவும், இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் முறுகல் நிலை தோற்றுவிப்பதற்கான சதித்திட்டம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆய்வு
காலி ஸியாரம் சேதமாக்கப்பட்டது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆய்வுகளை மேற்கொண்டுவருவதுடன் இது தொடர்பான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர் ஸ்தலத்துக்கு விஜயம் செய்து சேத விபரங்களைப் பார்வையிட்டுள்ளார்.
திணைக்கள உத்தியோகத்தர் ஹனூனைத் தொடர்பு கொண்டு வினவிய போது அவர் பின்வரும் விபரங்களைத் தெரிவித்தார்.
காலி கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்த ஸியாரத்துக்கு செல்வதற்கு ஒரே வழியே உள்ளது. கடற்கரை வழியாக செல்வதென்றால் அது சிரமம் நிறைந்ததாகும். இந்த ஸியாரத்தை நிர்வகிப்பதை ஒரு தனிப்பட்ட குழுவே மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதத்துக்கு முன்பு இங்கு கந்தூரி வைபவம் நடாத்தப்படுகின்றது. கந்தூரி நடாத்துவதற்கு இராணுவத்திடம் அனுமதி பெற்றுக் கொள்ளப்படுகிறது.
யுத்தம் நிலவிய காலத்தில் இந்த ஸியாரத்துக்கு இரு இராணுவ வீரரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. யுத்தம் முடிந்த பின்பு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்த ஸியாரம் கோட்டை பள்ளிவாசலின் நிர்வாகத்தின் கீழ் இல்லை. தனிப்பட்ட ஒரு குழுவினரே நிர்வகிக்கின்றனர். சம்பந்தப்பட்ட குழுவினருடன் பேச்சுவார்ததை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் மௌனம்
தென் மாகாணத்தில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கெதிரான இவ்விரு சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் எதிர்ப்புகளை வெளியிடாது மௌனமாக இருக்கின்றமை கவலைக்குரியதாகும்.
முன்னாள் அமைச்சரும், முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம்.அஸ்வரே இச்சம்பவங்கள் தொடர்பில் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
ஸியாரம் உடைப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.ஸல்மான் விசாரணையொன்றினைக் கோரியுள்ளார். அமைச்சர் ரிசாத் பதியுதீன் போர்வை வர்த்தக நிலைய தாக்குதலை எதிர்த்துள்ளார்.
அரசியல் தலைமைகள் தனித்தனியே எதிர்ப்புகள் வெளியிடுவதாலும், அறிக்கைகள் வெளியிடுவதாலும் ஆக்கபூர்வமாக எந்த ஏற்பாடும் நடைபெறப்போவதில்லை. அவை அவர்களை பிரபல்யப்படுத்துவதாகவே அமையும்.
எனவே சமூகம் சார்ந்த விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகளைப் புறம்தள்ளி ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டுமென்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
ARA.Fareel நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டினையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகள் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. இது ஒரு பௌத்த நாடு. இந்த…
ARA.Fareel நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டினையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகள் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. இது ஒரு பௌத்த நாடு. இந்த…