மென்மையான பஞ்சையும்
தோற்கடிக்கும்
பிஞ்சுக் கரங்களே
குழந்தையின் விரல்கள்.
எனது உள்ளங்கைக்குள்
அடங்கிப் போகும்
இந்த மழலையின் கரங்களை
இன்னும் இதமாக
பற்றிக் கொண்டிருக்கிறேன்.
அவனது இளம் விரல்களை
நோட்டமிட்டு பார்க்கும்போது
இறை அருள் மிகைக்கிறது.
இது ஓர் இணை பிரியா பந்தம்
என் வாழ்வின் நிலையான சொந்தம்
பற்றிப் பிடித்த கையை
விட்டு விட மனமில்லை
ஆனால் விட்டு விட்ட கையை
மீண்டும் பற்றிக் கொள்ள
கருணையும் இல்லை
என்றாலும் இந்த கையை மட்டும்
அது நழுவிப் போனாலும்
மீண்டும் மீண்டும்
பற்றிக் கொள்ளவே
துடிக்குது பேதை மனது.
காரணம் குழந்தைகளிடம்
நானும் குழந்தையாகவே
என்னை எனக்குள்
புதைத்துக் கொள்வதால்!