மரணித்த உடல்களை ஏன் நல்லடக்கம் செய்ய வேண்டும்

  • 15

இறந்த உடல்களை அடக்கம் செய்வது பொதுவான உலக வழமை. குறிப்பிட்ட சில சமய வழக்காறுகளை தவிர அதிகளவாக இறந்த பிரேதங்களை புதைக்கும் வழக்கமே தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்கள் தொட்டு இறந்த உடலை புதைப்பதுதான் வழக்கமாக வந்துள்ளது.

மரணித்தவர்களின் உடலைப் புதைக்க வேண்டும் என்ற உள்ளுணர்வை மனிதனுக்கு கொடுத்தவன் அல்லாஹ் ஒருவனே. சூரா “அபஸ” வில் அவன் தான் மரணிக்கச் செய்தான். அவன் தான் மண்ணில் புதைக்க வேண்டும் என்ற உணர்வையும் கொடுத்தான்” என எல்லாம் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

புதைக்கும் வழக்காறு கூட இறை நியதிப்படியே நடைபெறுகிறது. மண்ணை தோன்றி புதைக்கும் முறையையும் ஒரு காகத்தின் மூலம் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். முதல் மனிதனான ஆதமின் புதல்வனுக்கு அவ்வாறு கற்றுக் கொடுத்ததாக அல்குர்ஆன் சூரா மாஇதாவின் 31ஆவது வசனம் தெளிவுபடுத்துகிறது.

உலகத்திற்கு ஓர் அருட்கொடையாக வந்த இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் சாதாரண நிலையில் வாழும் ஒரு முஸ்லிம் இறந்து விட்டால் அவனைக் குளிப்பாட்டி, கபனிட்டு (வெண்ணிற ஆடையால் மறைத்து), அவனுக்காக தொழுகை நடாத்திய பின்னர் புதைக்க வேண்டும் என வழிகாட்டியுள்ளார்கள்.

இந்த ஒழுங்கு முறையில் மரணித்த உடலை அடக்கம் செய்வது முஸ்லிம்கள் மீதுள்ள கூட்டுப் பொறுப்பாகும். அதனை ஒரு சிலர் செய்து விட்டால் ஏனையோர் மீதுள்ள பொறுப்பு நீங்கிவிடும்.

இறந்த உடலை புதைப்பது ஒரு மனிதனின் பிறப்புரிமை மட்டுமல்ல அது முஸ்லிம் சமூகத்தின் மீதுள்ள கூட்டுக் கடமையுமாகும். அவன் பிறக்கும் போதும் கண்ணியமானவன். இறக்கும் போதும் கண்ணியாமானவன். அதைப் பேணுவது இஸ்லாமியர்களின் கூட்டுப் பொறுப்பாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் மையித்தை எரிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்த சூழ்நிலை காணப்படவில்லை. எனவே பிரேதங்களை எரிப்பது சம்பந்தமாக எந்த மார்க்கத் தீர்ப்பையும் இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் கண்டு கொள்ள முடியாது.

1907ம் ஆண்டுகளில் எகிப்தில் பிணங்கள் எரிக்கும் உலைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக ஒரு பதிவு உண்டு. அங்குள்ள முஸ்லிம் அல்லாதவர்களின் பிரேதத்தை எரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அந்த அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் கூட சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.

இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பம் காலம் முதல் பல தடவைகள் தொற்று நோய் பரவல் வந்து போயுள்ளது. ஹிஜ்ரி 18ம் ஆண்டு உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் இருக்கும் போது ஷாம் தேசத்தில் நிலை கொண்ட கொள்ளை நோய் பரவல் மிகவும் பிரபல்யமானது. இதில் சுமார் இருபதாயிரம் பேர் மரணத்தை தழுவினார்கள். அன்றும் அக்காலத்திற்குரிய வைத்திய நிபுணர்கள் இருந்தார்கள். ஆனால் புதைப்பது தான் தீர்வாக அமைந்தது.

ஈராக், மேற்கு ஆபிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகள், சீனா, அறேபிய தீபகற்பம், மேற்கத்திய நாடுகள் என பல பாகங்கிலும் தொற்று நோய்பரவல் பாரிய உயிர்ச் சேதங்களைம் சமூகத்தில் அழியாத வடுக்களையும் ஏற்படுத்தியுள்ளன.

அந்த வரிசையில் நவீக காலத்தில் எபோலா, சார்ஸ், மேர்ஸ், பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் என பல தொற்று நோய்கள் மத்திய கிழக்கு நாடுகளையும் சீனாவையும் பதம் பார்த்துள்ளன.

2019 டிசம்பரில் சீனாவின் வுஹான் பகுதியில் ஆரம்பித்த கொரோனா தொற்று இதுவரை பாரிய உயிர்ச் சேதங்களையும் பொருளாதார சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. கோவிட் 19 என்பது கொரோனா குடும்பத்தின் புதிய வைரஸ் என்பதால் அதன் விளைவுகள் விட்டுச் செல்லும் தாக்கங்கள் மதிப்பிட முடியாதுள்ளது. அதன் பிடியில் இருந்து விடுதலை பெறுவதற்காக உலகம் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது.

காலத்திற்கு காலம் வந்த தொற்று நோய் வரலாற்றில், முஸ்லிம்களின் மரணித்த உடல்களை புதைப்பதே மரபு வழியாக இருந்து வந்துள்ளது.

தற்போது பரவியுள்ள கொரோனோ கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக மரணித்தவர்களையும் சுட்டெரிக்கலாம் அல்லது அடக்கம் செய்யலாம் என்றே உலக சுகாதார அமைப்பு வழிகாட்டியுள்ளது.

இலங்கையிலும் அதே ஒழுங்குதான் சட்டத்தில் இருந்தாலும் முஸ்லிம் புத்திஜீவிகளின் முயற்சியால் ஜனாஸாக்களை புதைப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் அந்த சுற்றுநிருபம் மாற்றப்பட்டுள்ளதாகவே கடைசியாக வந்த செய்திகள் அன்று உறுதி செய்தன.

இறந்த மனிதனின் பிரதேத்திற்கு உயிருள்ள மனிதனுக்கு உள்ள அதே கண்ணியமும் கௌரவும் கொடுக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். மனிதன் என்பவன் உலக படைப்பினங்களில் சிரேஷ்டமானவன். அவன் உயிருள்ள நிலையிலும் இறந்த நிலையிலும் கண்ணியமாகவே நடத்தப்பட வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டுகிறது.

‘மரணித்த ஒரு மனிதனின் எலும்பை முறிப்பது, அவன் உயிருடன் இருக்கும் நிலையில் அவனது எலும்பை முறிப்பதற்கு சமனாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பிரேதத்தை பாதையில் சுமந்து செல்லும் போது கூட குழுங்காமல் அதிராமல் சுமந்து செல்ல வேண்டும் என நபிகாளார் வழிகாட்டியுள்ளார்கள்.

ஒரு யூதனின் மையித் போகும் போது கூட எழுந்து மரியாதை செய்த நபியவர்கள் அதுவும் ஒரு ஆத்மா தானே என்றார்கள்.

எனவே மையித்தை எரிப்பது அதற்கு செய்யும் இழிவாகும். மனிதன் மரணித்த பிறகும் கூட அவனது பிரேதம் காயப்படவோ, நோய்வினை செய்யப்படவோ அல்லது அவமானப்படுத்தப்படவோ கூடாது என இஸ்லாம் போதிக்கிறது.

மரணித்த உடலை அடக்கம் செய்ய வேண்டும் எனவ இஸ்லாம் கூறுவதற்கான பிரதான நோக்கம் இறந்த உடம்புக்குக் கூட கௌரவம் வழங்க வேண்டும் என்பதனால் தான்.

இந்த வகையில் முஸ்லிம்கள், ஜனாஸாக்களை முறையாக அடக்குவதையே விரும்புகிறார்கள். இஸ்லாமிய வழிகாட்டலை பின்பற்றி அடக்குவது முஸ்லிம்கள் மீதுள்ள கூட்டுப் பொறுப்பும் கூட. மரணித்த பின்பும் உடலை நோய்வினை செய்வதை அவர்களது மார்க்கம் தடுக்கிறது. எந்த நியாயமுமின்றி சுட்டெரிப்பதை மார்க்கம் அங்கீரிப்பதில்லை. எனவே இறைவனின் ஆன்மா வாழ்ந்த கூட்டை மரியாதையாக கையாள்வதையே முஸ்லிம்கள் விரும்புகிறார்கள்.

தொற்று நோயுள்ள காலத்தில் இறந்த சடலங்களை ஒன்றோ எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் அல்லது ரசாயன கலவைகள் கொண்டு கரைக்கலாம். இதில் புதைப்பதே முஸ்லிம்களின் தேர்வாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதல்லாத ஒரு முடிவை தெரிவு செய்வதற்கு அவர்களது மார்க்கம் வழிகாட்ட வில்லை.

இருப்பினும் துறை சர்ந்தோர் தொற்று நோயின் வகையை பொருத்து இதனை எரிக்க வேண்டும் என திட்டவட்டமாக கூறினால் அதற்கு இஸ்லாமிய சட்டப்பரப்பு நெகிழ்ந்து கொடுக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இப்படியான அசாதாரண சூழ்நிலையில் சட்டப்பரப்பில் உள்ள சலுகைக்கான அடிப்படைகள் காலத்திற்கு பொருத்தமான தீர்வுகளைப் பெறுவதில் வழிகாட்டுகின்றன.

அவ்வாறே மரணித்த உடம்பை அடக்கம் செய்வதால் உயிருள்ள ஒருவருக்கு ஆபத்து நேரலாம் என்றிருந்தால் உயிர்களை பாதுகாப்பது முதன்மைப்படுத்தப்படும். அதனால் அடக்கம் செய்தல் என்ற சமூகக் கடமை முஸ்லிம்களின் பொறுப்பிலிருந்து நீங்கிவிடும்.

எனவே நவீன காலத்தில் பயங்கர தொற்று நோய் காரணமாக மரணித்த உடல்களை எரிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தால் இஸ்லாமிய சட்டம் நெகிழ்ந்து கொடுக்கும். அதற்கு அல்குர்ஆன் சட்ட வசனங்களும், ஹதீஸ்களும், இஸ்லாமிய சட்டவிதிகளும் மிகத் தெளிவாகவே துணை நிற்கின்றன.

மேலே குறிப்பிட்ட வடிவத்தில் பிரேதத்தை எரிப்பதற்கு சட்டம் விரிந்து கொடுக்கும் என்ற புரிதலையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.

காரணம் அனைத்து இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களும் மனித நலன்களை பெற்றுக் கொடுப்பதற்கும் தீமைகளை தடுப்பதற்காகவுமே இயற்றப்பட்டுள்ளன.

நலன்கள் மீது எழுந்துள்ள இஸ்லாமிய சட்டங்கள் நீதியானதும் அருள் நிறைந்ததுமாகும்.

கொரோனா வைரஸ் காரணமாக இப்படி ஒரு நிர்ப்பந்தம் காணப்படவில்லை. மரணித்தவரை புதைக்கவும் முடியும் என்றே உலக சுகாதார அமைப்பு வழிகாட்டியுள்ளது.

கொரோனா காரணமாக இறந்தவரின் உடலை எரிப்பது தான் பாதுகாப்பானது என நாட்டின் துறை சார்ந்த அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானம் முஸ்லிம்களை ஒரு நிர்ப்பந்த சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. உண்மையில் உலக சுகாதார நிறுவனத்தின் தீர்மானம் அப்படியல்ல. இந்த நிலையில் முடியுமான எல்லா வழிகளிலும் முஸ்லிம்களின் மரணித்த உடலை அடக்குவதற்காக அனுமதியை தரும் வரை ஓயாமல் உழைக்க வேண்டும்.

மதங்களின் புனிதங்களை மீறி சுட்டெரிப்பது முடிந்த முடிவாக மாறினால் பொறுமையை கடைப்பிடிப்பதே எமக்கு முன்னால் உள்ள ஒரே வழியாகும்.

எனவே இஸ்லாத்தின் தீர்க்கமான நிலைப்பாடு மரணித்த உடலை எரிக்கக்க கூடாது என்பதே. எனவே நாம் மரணித்த உடலை எரிக்கும் தீர்மானத்திற்கு உடந்தையாகவும் இருந்து விடக் கூடாது.

ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ற வகையிலும் மத ரீதியான கடப்பாடு என்ற வகையிலும் கொரோனோ தொற்றியதன் காரணமாக இறந்த உடலை அடக்கம் செய்வதால் நோய் தொற்றாது என சர்வதேச சட்டம் கூறுவதாலும் முஸ்லிம்களின் இறந்த உடலை அடக்கம் செய்ய அனுமதி பெறுவதற்கான முழுமையன முயற்சியை தொடர்வது நமது கடமையாகும்.

ஒரு நாட்டில் நிலவும் சுதந்திரம், சட்ட ஒழுங்கு, கொள்கைகளுக்கு ஏற்ப மக்கள் அபிப்பிராயங்களை வெளிப்படுத்தும் வழிமுறைகளும் வித்தியாசப்படும். குடிமக்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் செவிமடுப்பதற்கான பல பொறிமுறைகள் நவீன கால அரச ஒழுங்கில் காணப்படுகின்றன. அதனை மக்கள் ஜனநாயக விழுமியங்களைப் பேணி பயன்படுத்துவது தவறானது என யாரும் கருதுவதில்லை.

இத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்ட பின்னரும் அடக்கம் செய்வது கைகூட வில்லையாயின் ஜனாஸாவிற்குரிய சமூகப் பொறுப்பு நீங்கிவிடுகிறது. மனிதனின் இயலுமை, சக்திக்கு அப்பால் அல்லாஹ் எந்தப் பொறுப்பையும் அவன் மீது சுமத்துவதில்லை.

பலவீனர்களுக்கு அவர்களின் எஜமான் அல்லாஹ் இருக்கின்றான். நடப்பது யாவும் இறை நாட்டத்தோடு தான் நடைபெறுகின்றது. நிச்சயமாக கஷ்டத்துடன் இலகு இருக்கின்றது.

அந்தச் சிறுவன் தாய்க்கு கூறியது போல “தயங்காதீர்கள் நெருப்பில் எரிந்தவர்கள் சத்தியத்தில் இருக்கின்றார்கள். எனவே பொறுமை காத்துக் கொள்ளுங்கள்” என்பதே எமது சுலோகமாக அமைய வேண்டும். கொரோனாவால் கெட்டுவிடும் மேனியை சுட்டுவிடும் நெருப்பு ஒரு அவமானம் அல்ல. அது ஈமானின் வெற்றிக்கான அடையாளமாகும்.

யா அல்லாஹ்! எரிக்கப்பட்ட அடியார்களின் பாவங்களை மன்னிதருள் வாயாக! அவர்களுக்கு ஷஹீதுடைய அந்தஸ்தை கொடுத்து உயர்ந்த சுவனத்தில் குடியிருத்தாட்டுவாயாக! ஆமீன்.

முஹம்மத் பகீஹுத்தீன்

இறந்த உடல்களை அடக்கம் செய்வது பொதுவான உலக வழமை. குறிப்பிட்ட சில சமய வழக்காறுகளை தவிர அதிகளவாக இறந்த பிரேதங்களை புதைக்கும் வழக்கமே தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இஸ்லாமிய வரலாறு நெடுகிலும்…

இறந்த உடல்களை அடக்கம் செய்வது பொதுவான உலக வழமை. குறிப்பிட்ட சில சமய வழக்காறுகளை தவிர அதிகளவாக இறந்த பிரேதங்களை புதைக்கும் வழக்கமே தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இஸ்லாமிய வரலாறு நெடுகிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *