29 பேருக்கு ​கொரோனா தொற்று – குருணாகலில் பிரதேசமொன்றுக்கு பயணத்தடை

கொரோனா தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குருணாகல், கனேவத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட தித்தவெல்கல பிரதேசத்திற்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தித்தவெல்கல பிரதேசத்தில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 29 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனேவத்த சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் நாரத ரணசிங்க தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் வெளிநபர்கள் 4 பேர் உள்ளிட்ட 33 பேருக் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

தித்தவெல்கல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடைய 72 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் ஏனையோர் இவ்வாறு கொவிட்-19 தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தற்போது 64 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கனேவத்த சுகாதார வைத்திய அதிகாரி நாரத ரணசிங்க தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதோடு, சுமார் 200 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

எதிர்வரும் இரு தினங்களுக்குள் ஏனையோருக்கும் PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது வரை இலங்கையில் 96796 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 93113  பேர் சுகமடைந்ததுடன் 618 பேர் மரணித்துள்ளனர்.