அபலையின் உள்ளம்

  • 15

பிறப்பு முதல்
இறப்பு வரை
வேலிக்குள்ளேயே
வெதும்புகின்ற
அபலை உள்ளங்கள்
பல

வேலி தாண்டி
வெளியேற வழி
தேடும் அந்த
அபலை உள்ளங்களில்
ஒன்று இது

ஏவல்கள் இல்லாத
அடக்குமுறைகள் இல்லாத
அதிகாரம் இல்லாத
வரையறைகள் இல்லாத
குற்றம் காணாத
குறை பிடிக்காத
புதிய உலகு வேண்டும்
அங்கே நான் மட்டுமே
இருக்க வேண்டும்
எனக்கான
சுதந்திரக் காற்றை
சுவாசித்துக் கொண்டு

காற்றில் கூட
அங்கே கலப்படம்
இருக்க கூடாது

பாரம்பரியம்
பண்பாடு
பழக்க வழக்கம்
என இவளை
சுற்றி கட்டப்பட்ட
முள் வேலிகள் பல
அதை எல்லாம்
தாண்டி தன்
உணர்வுகளை
உலகுக்கு உணர்த்த
இவளுக்கு இல்லை
இடைவெளி

சூழ்நிலைக்கும்
சந்தர்ப்பத்துக்கும்
தன்னை சுற்றி
உள்ளவர்களுக்காகவும்
பல பாத்திரங்கள்
ஏற்று தனக்கான
அடையாளத்தை
இழக்கிறாள் இவள்

அபலை இவள்
பேசினால் குற்றம்
பார்த்தால் குற்றம்
சிரித்தால் குற்றம்
அடம்பிடித்தால் குற்றம்
அலங்கரித்தால் குற்றம்
மெளனித்தால் குற்றம் என
குற்றம் சாட்டப்படாத
குணங்களே இல்லை
இவளிடம்

ஆட்டக்காரி
அடங்காபிடரி
வாயாடி
சிங்காரி
மாயக்காரி
பிடிவாதகாரி
சண்டைக்காரி
என உணர்வுகளை
வதைக்கும் பெயர்கள்
இவளுக்கு முத்திரை
இடப்பட்டவை

பிடித்தவைகளை
செய்ய முடியாமல்
பிடிக்காதவைகளை விட்டு
விலக முடியாமல்
அடுத்தவர்களுக்காகவே
இவள் அத்தனை
நிமிடங்களையும்
விட்டுக் கொடுக்கிறாள்
எல்லாவற்றையும் விட்டு
விலகி நிற்கிறாள்

எல்லோரையும் புரிந்து
கொண்டால் இவள்
இவளைப் புரிந்து
கொள்ள எவரும் இல்லை
எல்லாவற்றையும் விட்டு
கொடுத்தால் இவள்
இவளுக்காக
விட்டுக் கொடுக்க
எவரும் இல்லை
அத்தனையும்
அர்ப்பணித்தால் இவள்
இவளுக்காக அர்ப்பணிக்க
எவரும் இல்லை
எதுவும் இல்லை

இவளின்
சுய சிந்தனைகளையும்
சொந்த முடிவுகளையும்
புறந்தள்ளி
சுற்றத்தாரின்
முடிவுகளை தன்
வாழ்வாக காெள்கிறாள்

இவை எல்லாவற்றையும்
விட்டு இவள்
வெளியேற எத்தனிக்கிறாள்
அவளுக்கான உலகில்
அவள் ஆசைகளும்
அவள் விருப்பங்களும்
மாத்திரமே கொண்ட
நிம்மதியும்
சந்தோஷமும் மட்டுமே
சுற்றி இருக்க
சுதந்திர காற்றை
சுவாசிக்க விரும்பும்
அபலையின் உள்ளம் இது

இது எல்லாம்
மாற வேண்டும்
இதை எல்லாம்
மாற்ற வேண்டும்

இவள் மாறுவாள்
எல்லாவற்றையும் மாற்றுவாள்
அப்போது தேடும்
இவளை எல்லாமே
ஆனால் இவள்
தனக்கு மட்டுமே
சொந்தமான சுதந்திரமான
உலகில் உலாவிக்
கொண்டிருப்பாள்
உள்ளத்தில் நிரம்பிய
உற்சாக துள்ளலோடு!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

பிறப்பு முதல் இறப்பு வரை வேலிக்குள்ளேயே வெதும்புகின்ற அபலை உள்ளங்கள் பல வேலி தாண்டி வெளியேற வழி தேடும் அந்த அபலை உள்ளங்களில் ஒன்று இது ஏவல்கள் இல்லாத அடக்குமுறைகள் இல்லாத அதிகாரம் இல்லாத…

பிறப்பு முதல் இறப்பு வரை வேலிக்குள்ளேயே வெதும்புகின்ற அபலை உள்ளங்கள் பல வேலி தாண்டி வெளியேற வழி தேடும் அந்த அபலை உள்ளங்களில் ஒன்று இது ஏவல்கள் இல்லாத அடக்குமுறைகள் இல்லாத அதிகாரம் இல்லாத…