நிகழ்நிலைக் கல்வி முறையில் சமகால மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள்.
- by admin
- 23
நிகழ்நிலைக் (Online கல்வி முறையானது இன்றைய நாட்களில் மாணவச் சமூகத்தை ஆட்டிப்படைக்கின்றது என்றால் அது மிகையில்லை. கொரோனா எனும் கொடிய நோயின் அவதாரம் உலகினை முடங்கச் செய்துவிட்ட இக்காலகட்டத்தில் பல அசாத்தியங்களைச் சாத்தியங்களாக்கிவிடும் நோக்கோடு நிகழ்நிலைக் கல்வி முறை மிக வேகமாகப் பாவனையில் அறிமுகப்படுத்தப் பட்டது.
ஒரு தொடர்புச் சாதனமே கதி என்றாகிவிட்ட மாணவர்கள் தங்களின் வகுப்பறைக் கற்றலின் அத்துணை இன்பங்களையும் சுவாரசியங்களையும் தொலைத்துவிட்டு ஜடம் போல ஒரு தொடர்புச் சாதனத்தின் முன்னே அமர்ந்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இடர்காலக் கற்கைக்கு கை கொடுத்திட்டாலும் நிகழ்நிலைக் கல்வியின் மறுபக்கமானது கசப்பான உண்மைகளையே படம் பிடித்துக் காட்டுகின்றது. “தாமரை இலைத் தண்ணீர் போல” எனுங் கூற்றுக்கொப்ப ஒட்டி ஒட்டாத நிலையில் நிகழ்நிலைக் கல்வி மாணவர்களைச் சென்றடைகின்றது. வகுப்பறைக் கற்றலின் தூண்டலை ஒருபோதும் நிகழ்த்திட முடியாத நிலையில் நிகழ்நிலைக் கல்வி காணப்படுகின்றது.
தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இத்தகைய நிகழ்நிலைக் கல்வி முறையானது மாணவர்களின் பார்வைப்புலன், செவிப்புலன் என்பவற்றில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென்பதை யதார்த்தமாய்க் காண்கின்றோம்.
இது தவிரவும் வறுமைக் கோட்டில் வாழும் மாணவர்கள் நிகழ்நிலைக் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்குரிய வளமின்மையால் மன உளைச்சலுக்கும் தாழ்வுமனப்பான்மைக்கும் ஆளாகின்றார்கள். இவர்களுக்கு கல்வி “எட்டாக்கனி “யாகிவிடுமோ என்ற அச்சம் நீடிக்கின்றது.
அத்தோடு நிகழ்நிலைக் கல்வியானது இன்று அதிக போட்டித்தன்மையுடன் காணப்படுவதனால் எதைத் தெரிவு செய்வது என்பதில் மாணவர்கள் திக்குமுக்காடிப் போகின்றார்கள். அதிகூடிய பணஅறவீடுகள், போலி நிறுவனங்களின் வரவு என்பன மாணவர் சமூகத்திற்கு மிகப் பெரும் சவால்களாகவே இருக்கின்றன.
தன் கரங்களில் தவழும் சாதனங்களின் பிற வெளி நடவடிக்கைகளின் விளைவுகளை உணராத மாணவச் சமுதாயம் அவற்றின் பாவனைகளில் சிக்கி சீர்கேடுகளுக்கு ஆளாகக் கூடிய நிலைமை காணப்படுகின்றதென்பது “வெள்ளிடைமலையாகும்.”
எனவே நிகழ்நிலைக் கல்வி மூலம் இவ்வருமையான மாணவப் பருவத்தை தம்முடைய கற்றல் செயற்பாடுகளுக்காக சாதகமான முறையில் பயன்படுத்தும் அதே வேளையில் தாங்களது ஆரோக்கியம் சார்பாகவும் அதிக சிரத்தையெடுக்க வேண்டியவர்களாயிருக்கின்றனர்.
அத்துடன் வீட்டில் பெற்றோர் பெரியோர் வழங்கும் அறிவுரைகளுக்குச் செவிதாழ்த்தி அவற்றைச் சிரமேற்கொண்டு இவ்விடர் கால நிலையிலும் கல்வியைக் கைவிடாது சிறந்ததோர் எதிர்காலத்திற்காய் தாங்களைத் தாங்களே மெருகேற்றிக் கொள்ள வேண்டியவர்களாயிருக்கின்றோம் என்பதை உணர்ந்து செயற்படுவதன் மூலம் எத்தகைய சவால்களையும் முறியடித்து வெற்றி கொள்ளலாம் என்பது திண்ணம்.
மக்கொனையூராள்
நிகழ்நிலைக் (Online கல்வி முறையானது இன்றைய நாட்களில் மாணவச் சமூகத்தை ஆட்டிப்படைக்கின்றது என்றால் அது மிகையில்லை. கொரோனா எனும் கொடிய நோயின் அவதாரம் உலகினை முடங்கச் செய்துவிட்ட இக்காலகட்டத்தில் பல அசாத்தியங்களைச் சாத்தியங்களாக்கிவிடும் நோக்கோடு…
நிகழ்நிலைக் (Online கல்வி முறையானது இன்றைய நாட்களில் மாணவச் சமூகத்தை ஆட்டிப்படைக்கின்றது என்றால் அது மிகையில்லை. கொரோனா எனும் கொடிய நோயின் அவதாரம் உலகினை முடங்கச் செய்துவிட்ட இக்காலகட்டத்தில் பல அசாத்தியங்களைச் சாத்தியங்களாக்கிவிடும் நோக்கோடு…