தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைக்குமா?

  • 7

இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்திய குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத்தரம், அடிப்படை வசதிகள் குறித்து அறிய பல்வேறு அகதிகள் முகாம்களிலும் ஜெசிந்தா லாசரஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமை ஜெசிந்தா இன்று பார்வையிட்டார். பின்னர் இலங்கை அகதிகள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

தங்களுக்கு இந்திய குடியரிமை வழங்க வேண்டும், வசிப்பிட பகுதிகளில் போதுமான குடிநீர், மின் விளக்கு, சாலை வசதி, வீடு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பெரும்பாலனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த ஆய்வின் போது மனு அளிக்க வந்த இலங்கை அகதி ஜெகன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “நான் 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது கடல் வழியாக ராமேஸ்வரம் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ளேன்.

எனக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்துள்ளேன். ஆனால் சட்டவிரோதமாக கடல் வழியாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என தெரிவித்து விட்டனர்,” என்றார்.

அகதிகள் கோரிக்கை என்ன?

அகதிகள் முகாம்

“விமானம் மூலம் உரிய ஆவணங்களுடன் இலங்கையில் இருந்து வந்து இந்தியாவில் தங்கி உள்ளவர்களுக்கும் இதுவரை இந்திய குடியுரிமை அளிக்கப்படவில்லை. எனவே மத்திய மாநில அரசுகள் இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“அகதிகள் முகாம்களுக்குள் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், சாலை, கழிப்பிட வசதி உள்ளிட்டவை மோசமாக உள்ளன. இது குறித்து ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முறையிட்டார் ஜெகன்.

“எங்களது பிள்ளைகள் கல்லூரி படிப்பிற்காக வெளி மாவட்டங்களுக்கு செல்கின்றனர். அப்படி செல்பவர்களுக்கு தணிக்கை செய்வதில் இருந்து 3 முதல் 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

பட்டப்படிப்பு முடித்த பிள்ளைகளுக்கு இலங்கை அகதி என்பதால் பல இடங்களில் வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் அவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க மாநில அரசு உதவ வேண்டும் என்றும் ஜெகன் வலியுறுத்தினார்.

இந்திய மருத்துவ கல்வி பயில நீட் தேர்வு நடைபெறுகிறது. அதில் இந்திய மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அவர்களை போல் இலங்கை அகதி மாணவர்களும் தேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஜெகன் கேட்டுக் கொண்டார்.

தமிழக அரசு என்ன செய்கிறது?

இலங்கை அகதிகள்

முன்னதாக, இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஜெசிந்தா லாசரஸ், “தமிழகம் முழுவதும் பல இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட ஆய்வில், 80 சதவீதம் பேர் இந்தியாவிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உதவும்படியும் அவர்கள் கேட்டுள்ளனர்,” என்று கூறினார்.

“தாயகத்துக்கே திரும்பிச் செல்ல விரும்புவோர், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் பட்சத்தில் அவர்களை கணகெடுத்து மத்திய அரசு அனுமதி பெற்று இலங்கைக்கு திருப்பி அனுப்ப மாநில அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

“தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதி கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை. வரும் காலங்களில் மத்திய அரசு அனுமதி வழங்கினால் இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் இலங்கை அகதிகள் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு செல்வது அதிகரித்துள்ளதால் அதை தடுக்க கடல் பாதுகாப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அகதிகள் நல மறுவாழ்வு துறை அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்திய குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் உறுதி…

இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்திய குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் உறுதி…