பரா ஒலிம்பிக் உலக சாதனையுடன் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கம்

  • 19

இலங்கையைச் சேர்ந்த தினேஷ் பிரியந்த ஹேரத், டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (F46) புதிய உலக சாதனையுடன் (67.79m) இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை பதிவு செய்துள்ளார்.

கடந்த 2016 இல் பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோவில் இடம்பெற்ற போட்டியில் தினேஷ் பிரியந்த ஹேரத் வெண்கல பதக்கத்தை வெற்றி கொண்டிருந்தார்.

அந்த வகையில் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கும் பிரியந்தவிற்கும் கிடைக்கும் முதலாவது தங்கப் பதக்கம் இது என்பதோடு, இதற்கு முன்னர் 2 வெண்கல பதக்கங்களை இலங்கை பெற்றுள்ளது.

2012 இலண்டனில் இடம்பெற்ற பரா ஒலிம்பிக் போட்டிகளின் 400m (T46) ஓட்டப் போட்டியில் பிரதீப் சஞ்சய வெண்கல பதக்கத்தை வெற்றி கொண்டிருந்தார்.

இராணுவ கோப்ரலான தினேஷ் பிரியந்த, இறுதி யுத்தத்தின் போது கிளிநொச்சியில் வைத்து கடந்த 2008 டிசம்பர் 16இல் காயமுற்று, இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் இடம்பெற வேண்டிய 2020 பரா ஒலிம்பிக் போட்டிகள், இவ்வருடம் ஜப்பானின் டோக்கியோவில் ஓகஸ்ட் 24 முதல் செப்டெம்பர் 05 வரை இடம்பெறுகின்றது.

இம்முறை பரா ஒலிம்பிக் போட்டிகளில் 163 நாடுகளைச் சேர்ந்த 4,537 வீர, வீராங்கனைகள் 22 விளையாட்டுகளில், 539 போட்டிகளில் பங்குபற்றுகின்றனர்.

அந்த வகையில் இம்முறை இலங்கை சார்பில் ஒரு வீராங்கனை (குமுது பிரியங்க) உள்ளிட்ட 6 பேர் 2020 டோக்கியொ பரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்குபற்றுகின்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் விளையாட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் போட்டிகளில் ஆறாவது நாளான இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F46 இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் தினேஷ் பிரயன்த ஹேரன் பங்குகொண்டார்.

ஆறு சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியின் முதல் முயற்சியில் 62.58 மீட்டர் தூரம் வீசி, தனது அதிசிறந்த தூரத்தைப் பதிவுசெய்த தினேஷ், அதன்பின்னர் இரண்டாவது முயற்சியில் 62.19 மீட்டர் தூரத்தை வீசினார். இதனையடுத்து மூன்றாவது முயற்சியில் 67.79 மீட்டர் தூரத்தை வீசிய அவர், புதிய உலக சாதனை படைத்தார்.

முன்னதாக இந்தியாவின் தேவேந்திர 2016 ரியோ ஒலிம்பிக்கில் நிகழ்த்திய உலக சாதனையை (63.97 மீட்டர்) நான்கு மீட்டரால் தினேஷ் முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இது இவ்வாறிருக்க, நான்காவது முயற்சியில் 62.06 மீட்டர் தூரத்தை தினேஷ் பதிவுசெய்தாலும் ஐந்தாவது முயற்சியில் ஏமாற்றம் அளித்தார். இறுதியில் தன்னுடைய அதிகபட்சமான 67.79 மீட்டர் தூரத்துடன் இலங்கை வீரர் தினேஷ் பிரியன்த தங்கப் பதக்கத்தை வென்றார்.

இறுதியாக 2016 ரியோ பாராலிம்பிக்கில் தினேஷ் பிரியன்த வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், பாராலிம்பிக் வரலாற்றில் இலங்கை தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்தது. முன்னதாக,  2012 லண்டன் பாராலிம்பிக்கில் பிரதீப் சஞ்சன, ஆண்களுக்கான T46 பிரிவு 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், 2016 ரியோ பாராலிம்பிக்கில் ஆண்களுக்கான F46 பிரிவு ஈட்டி எறிதலில் தினேஷ் பிரியன்த வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதனிடையே, டோக்கியோ பாராலிம்பிக்கில் தினேஷ் பிரியன்த தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் பதக்கப் பட்டியலில் இலங்கை 42ஆவது இடத்துக்கு முன்னேறியது.

இதுஇவ்வாறிருக்க, தினேஷுடன் குறித்த போட்டியில் பங்குகொண்ட நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சம்பியனான இந்தியாவின் தேவேந்திர 64.35 மீட்டர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், மற்றுமொரு இந்திய வீரரான குர்ஜார் சுந்தர் சிங் 64.01 மீட்டர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

 

இலங்கையைச் சேர்ந்த தினேஷ் பிரியந்த ஹேரத், டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (F46) புதிய உலக சாதனையுடன் (67.79m) இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை பதிவு செய்துள்ளார். கடந்த 2016…

இலங்கையைச் சேர்ந்த தினேஷ் பிரியந்த ஹேரத், டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (F46) புதிய உலக சாதனையுடன் (67.79m) இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை பதிவு செய்துள்ளார். கடந்த 2016…