உறங்க தவிக்கும் என் தெருவோர உறவுகள்
- by admin
- 7
தேவைகளும் மோகங்களும் அதிகரித்து விட்டதனால் இன்று மனித நேயமும் உணர்வுகளும் புதைக்கப்பட்டுவிட்டன. பாசத்திற்காக ஏங்கி உறவுகளுக்காக சண்டையிட்ட காலம் அம்புலி பார்த்து வயல் உழுத காலத்தோடு முற்றுப் பெற்றுவிட்டது. சக்கரம் போன்ற வாழ்வில் மனிதனின் நிலை என்னதான் மாறினாலும் இன்னும் மாறவில்லை சில வறுமையின் அடையாளங்கள் அதன் தொடர்கதையே இந்த தெருவோர உறவுகள்.
சில இரவுகளில் அந்தப்பாதையை கடந்து வரும் போது என் நெஞ்சின் மீது இரும்பு துளைத்த கனமும் வலியும் உணர்கின்றேன்.சட்டென நிகழும் நிகழ்வல்ல. அது பல பின்னனி நாட்களை கொண்டது, அதனால் தான் என்னவோ இன்று அதைப்பற்றி எழுதிவிட்டேன்.
இரவானால் பறவைகளுக்கு கூட ஒதுங்குவதற்கு இறைவன் இயற்கையை விரித்து கொடுத்துள்ளான் ஆனால் மடியில் கனமின்றி உறவுகளிருந்தும் அநாதை ஆகி, மரணமும் பசியும் என்ற உடைந்த பாலத்தில் உறங்க தவிக்கும் அந்த தெருவோர உறவுகள் இன்னும் அந்த வறாண்டாவில் துடிக்கிறது. ஈரம் ஊறிப் போன அந்த தரையில் விடியலுக்காய் போராடுகிறது அந்த உறவுகள். இவர்களின் நிலை தான் மாறுமா? அவர்கள் அநாதைகள் ஆனதற்கு நாமும் ஓர் காரணமே!
உறவுகளே இல்லாதவர்களிற்கே அதன் அருமை புரியும் இன்றைய சமுதாயத்தில் கைவிடப்பட்ட பெற்றோர்களின் நிலை இதுவாகத்தான் உள்ளது. எம் ஆடையில் பேசப்படும் இஸ்லாம் எம் உள்ளத்தில் இல்லாமல போனதாலா இத்தனை பெற்றோர்கள் வீதியில்? இதில் ஆதரவற்ற அப்பாக்களே அதிகம்.
உழைக்கும் போது மட்டும் தந்தையின் உறவு தேடப்படுகிறது. அவர் உழைப்பில் சிந்திய ஒவ்வொரு வியர்வை துளிகளும் எமக்கானது . அது சுயநலமற்ற உன்னத அன்பு அன்று தனக்காக உழைந்திருந்தால் இன்று அவர் தூங்கும் வீதியில் உனக்குமோர் இடம் இருந்திருக்கும்.
பெற்றோரும், பிள்ளைகளும் இன்றைய சமூகத்தில் கீரியும், பாம்பும் போல் இருக்கின்றனர். முதுமை அடைந்த பெற்றோரை புறக்கணிப்பதையே சிலர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். வயதான பெற்றோருக்கு உண்ண உணவு கொடுக்காமல், உடுத்துவதற்கு உடை கொடுக்காமல் சில பிள்ளைகள் அவர்களை அடித்து விரட்டி விடுகின்றனர். இதனாலேயே இந்த உறவுகள் வீதியில், பெற்றோரை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்தி மரியாதை செய்ய வேண்டும். என்பது குறித்து வல்ல இறைவன் தனது அருள்மறையான திருக்குர்ஆனில் கூறியிருப்பதாவது,
பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! அல்குர்ஆன் 17:23
மேலும் இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் பெற்றோரின் மகத்துவம் சிறப்பு, முக்கியத்துவம், அவர்களைப் பராமரிக்க வேண்டிய ஒழுங்குகள் என்பன தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறியுள்ளார்கள்.
அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! மக்கள் வினவினார்கள் “அல்லாஹ்வின் தூதரே (இழிவடையட்டும் என்றீர்களே) யார்?” முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்” என்று பதலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்.
எம்மதத்திலும் மனிதநேயம் உண்டு. வாழ்வில் சந்தோசம் ஏற்பட வேண்டுமென்றால் பொருளாதாரத்தைத் திரட்டவேண்டும்’ என நம்மில் பலர் நினைக்கின்றனர். பொருளாதாரமில்லாது வாழ்பவன் தன்னிடம் எதுவுமில்லை என்றுதான் நினைக்கின்றான். பொருளாதாரம் வாழ்க்கையில் அவசியம் என்பதற்காக பொருளாதாரம்தான் வாழ்க்கை என்றாகிவிட முடியாது. அவ்வாறானதொரு விதியை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. இவைகளைத் தாண்டி, ‘இவ்வுலகில் பெறுமதி மிக்கதும், விலைமதிப்பற்றதுமான ஒன்றிருக்குமாயின் ஒருவருக்கு இன்னொருவரிடமிருந்து கிடைக்கும் அன்புதான் எனக் கூறலாம். வசதி படைத்தவர் மீதும், தனக்கு உதவி செய்தவர் மீதும், கௌரவமாக இருக்கும் ஒருவர் மீதும் ஒருவருக்கு அன்பு ஏற்படலாம். இத்தகைய அன்பு இயல்பானதன்று, உள்நோக்கமுடையது, நோக்கம் நிறைவேறியதும் கானல் நீர் போன்று மறையக்கூடியது. வசதிபடைத்தவரைச் சுற்றி வட்டமிடும் சந்தர்ப்பவாத ரெயில் சினேகிதர்களைப் பார்க்கின்றோம். பணமும், பதவியும் அவரிடமிருந்து கரைந்து போகவே இவர்களும் மெல்ல மறைந்து விடுகின்றனர். ஆகவே இத்தகைய அன்பு எவ்வகையிலும் பெருமானமில்லாதது. ஆனால் ஒருவருக்கு பெற்றோரிடமிருந்து கிடைக்கும் அன்பு மிகப்பெறுமதிவாய்ந்ததாகும். அன்பு காட்டுங்கள் அதற்கு தகுதியான இடத்தில்.
றஹ்னா பின்த் மஹ்னதுர் ரஹ்மான்
(ஹுதாயிய்யா)
இலங்கை தென் கிழக்கு பல்கலைகழகம்
தேவைகளும் மோகங்களும் அதிகரித்து விட்டதனால் இன்று மனித நேயமும் உணர்வுகளும் புதைக்கப்பட்டுவிட்டன. பாசத்திற்காக ஏங்கி உறவுகளுக்காக சண்டையிட்ட காலம் அம்புலி பார்த்து வயல் உழுத காலத்தோடு முற்றுப் பெற்றுவிட்டது. சக்கரம் போன்ற வாழ்வில் மனிதனின்…
தேவைகளும் மோகங்களும் அதிகரித்து விட்டதனால் இன்று மனித நேயமும் உணர்வுகளும் புதைக்கப்பட்டுவிட்டன. பாசத்திற்காக ஏங்கி உறவுகளுக்காக சண்டையிட்ட காலம் அம்புலி பார்த்து வயல் உழுத காலத்தோடு முற்றுப் பெற்றுவிட்டது. சக்கரம் போன்ற வாழ்வில் மனிதனின்…