அம்மாவிற்கு
- by admin
- 10
நொந்தென்னைப் பிரசவித்த
தொப்புள்கொடி பந்தமே- உன்
களங்கமற்ற கருவறைக்குள்
கருவாயிருந்ததை எண்ணி
கர்வமுற்று காரிகையாகி
கவியுனக்காய் வடிக்கிறேன்
கருத்தரித்த நாள்முதலாய்
உருப்பெற்று நான்வளர
இரவு பகல் போசித்து
கருமத்தில் கண்ணாக
கண்துஞ்சாது காத்திருந்து
விழிகளை மூடி வலிகளைத் தாங்கி
இப்பூமிக்கு என்னைத் தந்தாய் அம்மா
உதிரத்தை பாலாக்கி
பசியாறச் செய்து
பாசத்தோடு பேணி வளர்த்து
அன்பிற்கே வரைவிலக்கணமானாய்
புண்ணொன்று எனக்கு வர
புலம்பிக் கண்ணீர் வடிப்பாய்
நொடி நேரம் நான் பிரிந்தால்
துடிதுடித்துப் போவாயே!
நீ நடப்பதற்காகக் கூட
செருப்புகளை வாங்காமல்
நான் பறப்பதற்காக
சிறகுகளை சேமித்தவள் நீ
உன் பிள்ளை சான்றோனாய்
ஊரவரும் மெச்சிடவே
உச்சி குளிர்ந்து நிற்க
இச்சைகள் பல கொண்டாய்
பட்டங்கள் நான் பெற்று
பல்கலைக்கழகம் வந்தடைய
பசியோடு பல நாட்கள்
பட்டினியாய் கிடந்தாயே!
விடுமுறைக்கு வீடு வந்து
விடுதிக்குத் திரும்புகையில்
கட்டியணைத்து
கண்ணீர்விட்டு
கனமுத்தமிட்டு
வாடிய உருவத்தோடு
வழியனுப்பி வைத்தாயே!
ஒத்த உசுரையும்
என்மேலே வைத்தவளே
நானுந்தன் பிள்ளையென
நானிலத்தில் பிறப்பதற்கு
நான் செய்த தவமென்ன?
நான் செய்த தவம்தான் என்ன?
நிலாக்கவி நதீரா முபீன்,
புத்தளம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
நொந்தென்னைப் பிரசவித்த தொப்புள்கொடி பந்தமே- உன் களங்கமற்ற கருவறைக்குள் கருவாயிருந்ததை எண்ணி கர்வமுற்று காரிகையாகி கவியுனக்காய் வடிக்கிறேன் கருத்தரித்த நாள்முதலாய் உருப்பெற்று நான்வளர இரவு பகல் போசித்து கருமத்தில் கண்ணாக கண்துஞ்சாது காத்திருந்து விழிகளை…
நொந்தென்னைப் பிரசவித்த தொப்புள்கொடி பந்தமே- உன் களங்கமற்ற கருவறைக்குள் கருவாயிருந்ததை எண்ணி கர்வமுற்று காரிகையாகி கவியுனக்காய் வடிக்கிறேன் கருத்தரித்த நாள்முதலாய் உருப்பெற்று நான்வளர இரவு பகல் போசித்து கருமத்தில் கண்ணாக கண்துஞ்சாது காத்திருந்து விழிகளை…