திருமண வாழ்வை அலங்கரிக்கும் மனைவி!
கணவன் மனைவி அமைவது இறவனின் அருட்கொடையாகும். தன் விலாப்புறம் சொந்தமானவளை தன்னவளாக உரிமை பாடும் உரிய வேளை கணவன் மனைவி உறவுக்கு உத்தரவாதம் இடப்படுகின்றது.
காலம் செல்ல முடிச்சுகள் அறுபட்ட கயிறாய் உறவுகள் அறுபட்டு விவாகரத்தில் முடிகினறன இவ் உன்னதமான உறவுகள்!
இவர்கள் திரைமறைவில் போலியான வாழ்வும் வெளியுலகில் வெற்றிகரமான வாழ்க்கையும் என்று இலவம் பஞ்சுக்காயாய் வெளியில் பச்சை போர்த்தி வாழ்கின்றனர்.
இப்போதய திருமணங்கள் அரங்கேறும் போதே அதற்கான முடிவுத் திகதியும் குறித்தாற் போல் பெரும்பாலும் ஒரு வருடத்துக்குள் கணவன், மனைவிக்கு இடையே வெறுமை ஏற்பட்டு அது விவாகரத்தில் முடிகின்றன. கணவன் மனைவிக்கு இடையில் இன்பத்தையோ துன்பத்தையோ முழுமையாக, உணர்வுபூர்வமாக அனுபவிக்கவிடாமல் அடுத்தடுத்து மனதை ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய விடயங்கள் உருவாகி விடுகின்றன.
சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் போன்ற விடயங்கள் கணவன் மனைவி உறவில் விரிசலை ஏற்படுத்தி நம் உணர்வை பிரித்து தூரமாக்கிக் விட்டன.
கணவனோ மனைவியோ தன் துணையின் மீதான எதிர்பார்ப்பு, மற்றும் தங்கி வாழும் தன்மை இன்று இல்லாமல் போய்விட்டது. ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளக்கூடிய விடயங்கள் வேறு நபர்களிடமிருந்து வெவ்வேறு வடிவத்தில் அவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது.
எனவே இறைவன் ஹலாலாக வழங்கிய இவ் உன்னதமான உறவை உயிர்ப்பித்து நேசத்தையும், நெருக்கத்தையும் பெற சில வழிமுறைகளை பெண் கையாள வேண்யே உள்ளது. இதன் மூலம் திருமண வாழ்வை மனைவியால் அலங்கரித்துக் கொள்ள முடியும். அதன்படி பெண்கள் தனது துணையுடன் நடந்து கொள்ள வேண்டிய விடயங்களை பின்வருமாறு அடையாளப் படுத்தலாம்.
கணவனை அழகிய முறையில் வரவேற்றேல்.
பயணமோ பணியோ முடிந்து கணவன் வீடு திரும்பினால் இல்லாள் இன் முகத்துடன் இனிய வார்த்தைகள் கூறி கணவனை வரவேற்க வேண்டும். வீட்டினுள் ஆயிரம் பிரச்சனைதான் நடந்திருந்தாலும் அடுக்கடுக்காய் சொல்லிவிடாமல் நற்செய்தியை முதலில் கூறி கணவனை அமைதி படுத்திய பிறகு பிரச்சினைகளை ஒப்புவிய்யுங்கள்.
ஏனெனில் நான்கு பேர் வாழும் வீட்டினுள்ளே பல பிரச்சினைகள் என்றால் வெளி இடத்தில் இருந்து வரும் அவன் அதை விட பல பிரச்சினைகளை சந்தித்து விட்டு வரலாம்.
அடுத்து ஒரு கவள உணவாயினும் அதனை அன்போடு கலந்து அக்கறையாய் பரிமாறுங்கள். உங்கள் கணவனுக்கு பிடித்தாற் போல் தம்மை அலங்கரித்து கண்குளிர்ச்சியாய் இருங்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: “எந்தப் பெண் (மனைவி) அனைவரையும் விடச் சிறந்தவள்?” நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: “எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச் சிறந்தவள்”. (ஆதாரம் : நஸயீ)
இல்லற வாழ்வில் கணவனுக்கு இசைந்து போதல்.
ஆணும் பெண்ணும் அனுமதிக்கப்பட்ட முறையில் அவர்களின் பாலுணர்வை பூர்த்தி செய்வது திருமணத்தின் நோக்கமாகும். இதன் முலம் ஹராமான உறவுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
ஆகவே மனைவி ஹலாலான முறையில் உறவு கொள்ளும் இல்லற வாழ்கைக்கு இசைந்து போவது அவசியமாகும். இதனை வலியுறுத்தி பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“கணவன் தாம்பத்தியத்திற்காக மனைவியை அழைத்து, அவள் தேவையின்றி மறுக்கிறாள். அதனால் கணவன் அவள் மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், விடியும் வரை வானவர்கள் அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள் என நபிகள் ஸல அவர்கள் எச்சரித்தார்கள்.” (ஆதாரம் : புகாரி,முஸ்லிம்.)
கணவனுக்கு நம்பிக்கையாளராய் இருத்தல்.
குறிப்பாக கணவனின் சொத்தை மனைவி பாதுகாப்பது அவளின் முக்கிய பணியாக உள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: “நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்)” (4:34 )
கணவனின் ரகசியங்களையும் கணவனின் குடம்பத்தின ரகசியங்களையும் பாதுகாத்தல், தன் குழந்தைகளை நல்முறையில் வளர்த்தெடுத்தல், கணவனின் அனுமதி இன்றி வீட்டை விட்டு வெளியேறாமல் இருத்தல், ஏனைய ஆண்ளிடத்தில் அஜ்னபி மஹ்ரமி அறிந்து இஸ்லாமிய வரையறையில் தம் உறவை அமைத்துக் கொள்ளல் போன்றனவற்றில் மனைவி தன் கணவனுக்கு நம்பிக்கை உள்ளவளாக இருத்தல் வேண்டும்.
கணவனுக்கு கட்டுப்படுதல்.
கணவனின் கட்டளைகள் இறைவனுக்கு மாற்றமில்லாத போது கட்டுப்படுவது அவசியமாகும். ஒரு பெண் ஐவேளைத் தொழுகையை (செம்மையாக ) தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால, “நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்” என அவளிடம் (மறுமையில்) கூறப்படும் என நபிகள் (ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் :அஹ்மத்)
குடும்பத்தின் தலைவன் கணவனே! பெண்களை நிர்வாகிப்பவர்கள் ஆண்களே! சாதாரணமான சூழலை அசாதாரணமாக்குவது சில பெண்களின் கணவனுக்கு கீழ்படியா தன்மையே ஆகும்! இதனால் பொருத்தமே இல்லாத வெறும் சொல்லாடல்கள் நாளை தலாக் எனும் அர்ங்கிற்கு கூட்டிச்செல்கின்றன. கோபத்தை அடக்கி பொறுமையை கையாண்டு கணவனுக்கு கட்டுப்பட்டு தீர்க்கமான முடிவுகளை எடுத்தல் வேண்டும் .
கணவனுக்காக உறுதுணையாக இருத்தல்.
தன்னம்பிக்கையும், மனைவி தன் கணவருக்கு அளிக்கும் ஊக்கமும் தன் துணையின் முன்னேற்றத்திற்கு பெரும் உந்துசக்தி என்பதை மறந்துவிடாதீர்கள். ஆக கணவரின் செயற்பாடுகளில் உறுதுணையாக இருத்தல் வேண்டும்.
அத்துடன் இவ்வுலக வாழ்வில் மூழ்கிவிடுவதில் இருந்து விடுபடல் வேண்டும். ஏனெனில் எம் துணையுடனான பயணம் சுவனம் வரை செல்வதே எம் கனாவாக இருக்கிறது. ஆகவே அவரை இறைவனுக்கு கட்டுப்படும் விடயத்திலும் நல்லறம் புரிவதிலும் ஆர்வம் ஊட்டல் வேண்டும். கணவனை தர்மம் செய்பவராக அவரை மாற்றுவதுடன் அவரின் உழைப்பை வீண்விரையம் செய்யாமல் இருப்பது அவசியாகும.
கணவனின் வசதிக்கேற்ப தம்மையும் தம் தேவையையும் மாற்றிக் கொள்ளல், தம் துணையின் சுக துக்கங்களின் போது ஒத்தாசையாக இருத்தல் போன்ற விடையஙகளை மனைவி கையாள வேண்டும்.
கணவன் சுகவீனம் உற்றால் அவரை விட்டும் விலகாமல் அவருக்கு தோள் கொடுத்து துணையை கண்ணாக பார்க்க வேண்டும்.
கணவனின் உதவிக்கு நன்றி செலுத்துபவர்களாக இருத்தல் வேண்டும். நபி ஸல் அவர்கள் கூறினார்கள் பெரும்பான்மையான பெண்கள் கணவனின் உதவியை நிராகரித்ததன் காரணமாக அவர்களை நரகத்தில் பார்த்தேன் என்பதாக. எனவே கணவன் செய்யும் உதவியை மறந்து விட வேண்டாம். உதாசீனமான பேச்சுக்களாள் மனதை உடைத்து விட கூடாது.
இளவயதில் அழகாக தெரியும் திருமண வாழ்க்கை அதனுள் காலடி வைத்ததன் பின் கானல் நீராய் போவதற்கு சில சமயத்தில் பெண்களின் செயற்பாடுகளும் காரணமாய் அமைகின்றன. அவற்றை களைந்து மேற்கூறிய பண்புகளை கடைப்பிடிக்க வேண்டும்.
எனவே பல கனவோடு எம்மை கைபிடித்த கணவனை மகிழ்வித்து ஸாலிஹான மனைவியாக வாழ்வது பெண்ணின் கடமையே! திருமண வாழ்வை அலங்கரிப்பதில் பெண்ணின் பங்கு அளப்பரியது.