அச்சுறுத்தும் இனவாத சக்திகள்
- by admin
- 24
vidivelli Administrator
தென் மாகாணத்தைச் சேர்ந்த கொடபிட்டிய, போர்வை நகரிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந் தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலினால் மூன்று கடைகள் தீப்பற்றி எரிந்துள்ளதுடன் மற்றுமொரு கடை சேதத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் கவலைக்குரியதாகும்.
இச் சம்பவம் தொடர்பாக அக்குரஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
போர்வை பகுதியில் முஸ்லிம்களும் பெரும்பான்மை இன சிங்களவர்களும் நீண்ட காலமாக எதுவித பிரச்சினையுமின்றி ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். எனினும் இப்பகுதியில் ஒற்றுமையுடன் வாழும் இரு சமூகத்துக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கான திட்டமிட்ட சதியே இது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களைத் தேடிப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்றே இப்பகுதி பௌத்த விகாரைகளின் தலைமை பிக்குகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் காலி கோட்டையில் இராணுவ முகாம் வளாகத்திலுள்ள ஸியாரத்தின் மதில்களும் இனவாதிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் திட்டமிட்ட இனவாத நடவடிக்கையே என அப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றன.
இவ்வாறு தென் மாகாணத்தில் முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
இதற்கிடையில் அண்மைக் காலமாக முஸ்லிம்களின் பொருளாதாரத்தைக் குறி வைத்து இனவாத சக்திகள் திட்டமிட்ட பிரசாரங்களை முன்கொண்டு செல்கின்றன.
குறிப்பாக சித்திரைப் பண்டிகைக் காலத்தில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக மத்திய மாகாணத்தில் இம் முறை முஸ்லிம்களின் வியாபாரத்தில் சரிவு ஏற்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே தெற்கிலும் முஸ்லிம்களின் வியாபாரத்தை முடக்குவதற்காகவும் அச்சுறுத்தும் நோக்கிலும் இவ்வாறானதொரு தாக்குதல் போர்வை நகரில் முன்னெடுக்கப்பட்டிருக்கக் கூடும்.
எனவேதான் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் இதன் பின்னாலுள்ள சக்திகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இன்றேல் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெறக் கூடும். அது இந்த நாட்டின் இன நல்லுறவுக்கு பெரும் குந்தகத்தையே ஏற்படுத்தும்.
இறக்காமம் மாணிக்கமடுவில் பௌத்த பிக்குகள் முஸ்லிம்களின் காணியில் விகாரை அமைப்பதற்கு நேற்றைய தினம் மேற்கொண்ட முயற்சி மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலாகும்.
ஏற்கனவே சிலை வைத்த விவகார வழக்கு முடிவதற்குள் இன்று விகாரையையே நிர்மாணிப்பதற்கு பிக்குகள் முனைகிறார்கள் என்றால் அவர்களுக்குப் பின்னாலுள்ள சக்தி எது எனும் கேள்வி எழுகிறது. நிச்சயமாக இவர்களின் பின்னணியில் அரசியல் சக்திகள் இருக்கின்றன என்பது தெளிவானதாகும்.
இவ்வாறான ஆக்கிரமிப்பு மற்றும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனமாக இருக்கும் வரை இனவாதிகளின் கை ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.
vidivelli Administrator தென் மாகாணத்தைச் சேர்ந்த கொடபிட்டிய, போர்வை நகரிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந் தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலினால் மூன்று கடைகள் தீப்பற்றி எரிந்துள்ளதுடன்…
vidivelli Administrator தென் மாகாணத்தைச் சேர்ந்த கொடபிட்டிய, போர்வை நகரிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந் தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலினால் மூன்று கடைகள் தீப்பற்றி எரிந்துள்ளதுடன்…