மீண்டு வர இதாே ஓர் கரம்!
- by admin
- 17
தத்தளிக்கும் தோல்விகள், தள்ளாட வைக்கும் பிரச்சினைகள், மூச்சுத் திணரும் அழுத்தங்கள், மூழ்க வைக்கும் கவலைகள், விருப்பமில்லாத வாழ்க்கை, விரக்தியை தரும் உறவுகள்.. இவைகளிலிருந்து மீண்டு வர இதோ! ஓர் கரம்
மனதிற்கொள்க மாற்றம் ஒன்றே மாறாதது. முதலில் ”இது தான் என் நிலை” , “இது தான் என் விதி” என்று ஆழமாக கூறுவதை, நம்புவதை நிறுத்துங்கள். இது நேரான மாற்றத்துற்கான வழிகளை அடைக்கும் ஓர் கற்சுவர். நீங்கள் ஒன்றும் மரம் அல்ல. நகர்வதற்கு உங்களால் முடியும். நகருங்கள் மாற்றத்தை நோக்கி.
கவலைப்படுவதை நிறுத்துங்கள். அனுதாபம் தேடுவதை நிறுத்துங்கள். நடந்ததை மீண்டும் மீண்டும் மீட்டி துன்பத்தை நீட்டாதீர்கள். நேர்கொண்ட பார்வையால் மாத்திரமே மகிழ்ச்சி வசப்படும். இருளை அகற்ற இருளால் முடியாது. வெளிச்சத்தின் வருகை அங்கு அவசியப்படுகிறது.
கவலைகளைப் புலம்பித் திரியாதீர்கள். தரமற்றமவர்களிடம் பகிரப்படும் கவலைகள் வதந்திகளாக மாறி உங்களுக்கு எதிரான நீதிபதிகளை உருவாக்கிவிடும்.
மனதில் ஆழமாக பதிந்து கொள்க! விழும் போது தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. எழாத போதே தோல்வி அறிவிக்கப்படும். மீண்டெழுங்கள்! தோல்வி கற்றுத் தந்த பாடம் உங்கள் ஆளுமையை மென்மேலும் வலுப்படுத்தும். வாழ்க்கை உங்களுக்கு பல பரிசில்களை வழங்க காத்திருக்கின்றது.
இழப்புக்களால் இழந்து போகாதீர்கள். இறைவனின் அருள் இதில் மறைந்திருக்கிறது. இழப்பின் வலி பழகாதவரை வாழ்வு எம்மை பயமுறுத்திக் கொண்டுதான் இருக்கும்.
உங்கள் திறமையை வெளிக்காட்டுங்கள். உங்களால் பிறர் பயனடைவதை உறுதிப்படுத்துங்கள். உங்கள் குறைகளை சரிப்படுத்துங்கள். தவறுகளை இல்லாதொழியுங்கள். இல்லையெனின் அதை சரி செய்வதற்கான மாற்றீட்டை செய்யுங்கள். உங்கள் கோடுகளை நீங்கள் தான் ஓவியமாக்க வேண்டும்.
உங்கள் தேடல்கள் தொடரட்டும். அது உங்கள் ஆன்மா பற்றிய தேடல்களாக வெற்றிக்கான தேடல்களாக ஆளுமை விருத்திக்கான உன்னை அறிதலுக்கான தேடல்களாக இருக்கட்டும்! சலிப்பற்ற வாழ்விற்கு சுவையூட்டப்பட்ட சுவாரஷ்யங்களை வழங்குவதில் தேடல்கள் பெரும்பங்காற்றுகின்றன.
உங்களின் தனித்தன்மையை அறிந்துகொள்ளுங்கள். உங்களுக்கான பாதைகளை நீங்களே வகுத்துக்கொள்ளுங்கள். உங்களின் மகிழ்ச்சி, விருப்பங்கள், இலட்சியங்கள், ரசனைகளில் பிறர் ஆதிக்கம் ஊடுருவ அனுமதிக்காதீர்கள். தானாக பழுத்த பழங்களுக்கே சுவை அதிகம்.
வாழ்வின் வெற்றி தானும் மகிழ்ச்சியாக இருந்து தன்னை சுற்றியிருபப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைப்பவர்களுக்கே.
புலம்புபவர்களை விட புன்னகைப்பவர்கள் சிறந்தவர்கள். பயமுறுத்துபவர்களை விட நம்பிக்கையூட்டுபவர்கள் சிறந்தவர்கள். மூழ்குபவர்களை விட எதிர்நீச்சல் அடிப்பவர்கள் சிறந்தவர்கள். கோழைகளை விட தைரியசாலிகள் சிறந்தவர்கள். வீழ்ந்து கிடப்பவர்களை விட தூக்கி விடுபவர்கள் சிறந்தவர்கள்.
அன்பை, சக்தியை பரப்புபவர்கள் சிறந்தவர்கள். சவால்கள், பிரச்சினைகளை தைரியமாக கையாள்பவர்கள் சிறந்தவர்கள். மாறிவிடுங்கள் சிறந்தவர்களாக..! புன்னகைக்கும் உதடுகள்.. சிரிக்கும் கண்கள்… வாழ்த்தும் இதயம்.. தூக்கிவிடும் கரம் எப்போதும் தனி அழகு தான்.
றிப்னா ஷாஹிப்
உளவளத்துணையாளர்
வியூகம் வெளியீட்டு மையம்
தத்தளிக்கும் தோல்விகள், தள்ளாட வைக்கும் பிரச்சினைகள், மூச்சுத் திணரும் அழுத்தங்கள், மூழ்க வைக்கும் கவலைகள், விருப்பமில்லாத வாழ்க்கை, விரக்தியை தரும் உறவுகள்.. இவைகளிலிருந்து மீண்டு வர இதோ! ஓர் கரம் மனதிற்கொள்க மாற்றம் ஒன்றே…
தத்தளிக்கும் தோல்விகள், தள்ளாட வைக்கும் பிரச்சினைகள், மூச்சுத் திணரும் அழுத்தங்கள், மூழ்க வைக்கும் கவலைகள், விருப்பமில்லாத வாழ்க்கை, விரக்தியை தரும் உறவுகள்.. இவைகளிலிருந்து மீண்டு வர இதோ! ஓர் கரம் மனதிற்கொள்க மாற்றம் ஒன்றே…