Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அடக்குமுறையின்றி அனுசரிப்பே என் திறமைகளுக்கு களம் அமைத்தது - இஸ்மத் பாத்திமா 

அடக்குமுறையின்றி அனுசரிப்பே என் திறமைகளுக்கு களம் அமைத்தது – இஸ்மத் பாத்திமா

  • 24

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நேர்கண்டவர் : அதிபர், கவிஞர் : ஸல்மானுல் ஹாரிஸ்

பானகமுவ ஓய்வு பெற்ற அதிபர், சமாதான நீதிவான் அல்ஹாஜ் ஏ.ஸீ. செய்யது அஹமது அவர்களினதும் மர்ஹூமா ஹாஜியானி கே.ரி. றஹிமா உம்மா ஆகியோரின் கனிஷ்ட புதல்வியும் பஸ்யாலயைச் சேர்ந்த தர்கா நகர் ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளரான ஜனாப் எம்.ஏ.எம். றிப்தி அவர்களது துணைவியாரும், எம்.ஆர். அகீல் அஹமதுவின் அன்புத் தாயாருமான எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்று அதிபர், சிறந்த ஆளுமை நிர்வாகத்திறமை, மும்மொழித் தேர்ச்சியும் மிக்கவர், கவிஞர், எழுத்தாளர், “இரண்டும் ஒன்று”, “புதையல் தேடி” என இரண்டு கவிதைத் தொகுதிகளை படைத்து தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர். எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் எடுத்த எடுப்பிலேயே கவி படைப்பவர். இவரது “புதையல் தேடி” கவிதை நூல் தேசிய சாகித்திய விருதுக்கு பரிந்துரைப்பு செய்யப்பட்ட மூன்று நூல்களில் ஒன்றாக இருக்கின்றது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இவர் கல்வித் துறையிலும் கலைத் துறையிலும் நிறைய விருதுகளைத் தனதாக்கியவர். அவருடனான நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன்.

01. உங்களுடைய ஆரம்ப கல்வி மற்றும் உயர் தரக் கல்வி பற்றி உங்களால் குறிப்பிட முடியுமா?

முதலில் நீங்கள் என்னை நேர்காண்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். முதற்கண் இறைவனுக்கும் அடுத்து உங்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னுடைய ஆரம்பக் கல்வியை எனது சொந்த ஊராகிய குருநாகல், பானகமுவ கு/இப்/அந்-நூர் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தரம் ஒன்று தொடக்கம் நான்காம் வகுப்பு வரை பயின்றேன். தரம் இரண்டில் double promotion பெற்று தரம் நான்கில் கல்வி கற்றேன்.

பின்னர் ஐந்தாம் தரத்திற்கு கம்பஹா மாவட்டத்திலுள்ள தற்போது நான் வசிக்குமிடமான பஸ்யால, நாம்புளுவ முஸ்லிம் வித்தியாலயம் தற்போது பாபுஸ்ஸலாம் முஸ்லிம் மஹா வித்தியாலயம் என்றழைக்கப்படும் பாடசாலையில் தரம் 5 தொடக்கம் ஏழு வரை கல்வி பயின்றேன். அதன் பின்னர் மீண்டும் சொந்த ஊராகிய பானகமுவயில் கல்விப் பொது தராதர சாதாரண தரம் வரை கல்வி பயின்றேன். க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் ஆங்கிலத்தில் அதிவிசேட சித்தியும் மற்றும் அனைத்து பாடங்களிலும் விஷேட சித்திகளையும் பெற்றேன். அதன் பின்னர் கல்விப் பொது தராதர உயர்தரப் படிப்பை மேற்கொள்வதற்காக மடவளை மதீனா தேசிய பாடசாலையில் வர்த்தகப் பிரிவில் என்னுடைய கல்வியினை மேற்கொண்டேன் அங்கு இரண்டு வருடங்கள் கல்வி கற்றேன். அப்போது உயர் தரத்தில் நான்கு பாடங்கள் கற்க வேண்டும். இஸ்லாம் பாடத்தில் அதி விஷேட சித்தியையும் மற்றும் மூன்று திறமைச் சித்திகளையும் பெற்றுக்கொண்டேன்.

02. உங்களது கல்வி மற்றும் தொழில் தகைமைகள் சேவை அனுபவங்கள் பற்றிக் கூற முடியுமா?

நான் என்னுடைய உயர்தரக் கல்வியைப் பூர்த்தி செய்ததன் பின்னர் பஸ்துண்ரட கல்வியியல் கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்தலுக்கான தேசிய டிப்ளோமா (Diploma in Teaching English as Second Language) மூன்று வருட பாடநெறியைச் சிறப்பாக பூர்த்தி செய்து அதிவிஷேட சித்தியைப் பெற்று ஆங்கில ஆசிரியராக குருனாகல் பரகஹதெனிய தேசிய பாடசாலைக்கு முதலாவதாக நியமனம் பெற்றுச் சென்றேன். அங்கே இரண்டரை வருடங்கள் மிகவும் சிறப்பாக சேவையாற்றினேன். அதனைத் தொடர்ந்து திருமணத்தின் பின் கணவருடைய ஊரான பஸ்யாலயிற்கு இடமாற்றம் பெற்றுக்கொண்டேன். அதனைத்தொடர்ந்து ஆங்கில ஆசிரிய ஆலோசகராக பின்னர் அதிபராக போட்டிப் பரீட்சைகளில் சித்தி எய்தி அந்தந்த பதவிகளை வகித்தேன். தற்பொழுது இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டு அதிபராக பஸ்யால எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமையாற்றுகின்றேன். இவ்வருடம் நவம்பர் 16ம் திகதி முதல் இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்று அதிபராக பதவியுயர்வு பெற(ற்று)வுள்ளேன் (2021)

கல்வி சம்பந்தமாகக் குறிப்பிடுவதென்றால் நான் பேராதெனிய பல்கலைக் கழகத்தில் ஆங்கில மொழியில் உள்வாரியாக என்னுடைய பட்டப் படிப்பைப் பூரணப் படுத்திக் கொண்டேன். அத்தோடு ஆங்கிலம் சம்பந்தமான பல பாடநெறிகளையும் “Diploma in Teaching English as Second Language” ஒரு வருடக் கற்கை நெறியையும் உள் வாரியாகச் சென்று கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் “Advanced Diploma in English for Academic and Administrative Purposes” எனும் ஒரு வருட கற்கை நெறியையும் மிக சிறப்பாக பூர்த்தி செய்து சிறந்த பெறுபேறும் பெற்றேன். இதுபோன்று இன்னும் “Certificate Course in Professional Skills Development ” -English (CCPSD) எனும் மூன்று மாத பாடக்கற்கை நெறியையும் சிறப்பாகக் கற்றேன்.

மேற்கூறப்பட்ட சகல கற்றல் விடயங்களிலும் எனது கணவர் தற்போது தர்கா நகரில் ஆசிரியர் வாய்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளராக விரிவுரையாளராகப் பணிபுரியும் ஜனாப் எம்.ஏ.எம்.றிப்தி அவர்களும் நானும் ஒன்றாகவே இருந்து கற்றல் விடயங்களைத் தொடரக்கிடைத்ததை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

அதுமட்டுமன்றி கணினித் துறையிலும் தற்கால உலகில் ஈடுகொடுத்து நிற்கக் கூடிய அளவிற்கு கணினி அறிவையும் கற்று எங்களை நாங்கள் இருவருமே வளப்படுத்திக் கொண்டோம். “International Computer Driving License” ICDL பாடநெறியை 2008 இல் மிகவும் சிறப்பாக கற்றுக் கொண்டோம்.

அடுத்ததாக நான் Post Graduate Diploma in Education Management ஐ முடித்து அதிலும் விஷேட சித்தியினைப் பெற்றுக் கொண்டேன்.

03. நீங்கள் பாடசாலையில் ஆரம்பத்தில் கற்றுக் கொண்டிருந்த பாடசாலைகளில் பெற்றுக்கொண்ட பாராட்டுக்கள் விருதுகள் சான்றுகள் பற்றியும் குறிப்பிட முடியுமா?

பாடசாலையில் கற்றுக் கொண்டிருக்கும் ஆரம்ப காலகட்டங்களில் ஆங்கிலத்தில் மிகவும் அக்கறையும் ஈடுபாடும் எனக்குள் இருந்தது. ஆங்கிலத்தைக் கற்றுத் தந்த ஆசிரியர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். ஆங்கில தினத்தில் பாடசாலை மட்டத்தில், கோட்ட மட்டத்தில், மாகாண மட்டத்தில் என கையெழுத்துப் பிரதிப் போட்டி, கவிதை பாடல் போட்டிகள் பேச்சுப்போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து நிறைய பாராட்டுகளும் விருதுகளும் பெற்றுள்ளேன்.

மேலும் தமிழிலும் பேச்சுப் போட்டிகளில் பங்கு கொண்டதுண்டு. ஆரம்ப காலத்தில் அதிக அக்கறையுடன் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், இலக்கணம், இலக்கியம் போன்ற சகல விடயங்களையும் நிறைய வாசிப்பதுண்டு இதற்கு என்னுடைய தந்தை நிறைய பங்களிப்புச் செய்துள்ளார். என்னுடைய தந்தை நிறைய இலக்கண இலக்கிய புத்தகங்கள் வாங்கித் தருவார். பாடசாலை விடுமுறை காலங்களிலும் பாடசாலை வாசிகசாலையிலிருந்து புத்தகங்களைப் பெற்று வந்து வாசிப்போம். இன்னும் அந்த ஞாபகங்கள் மனதில் பசுமையாக உள்ளன. அத்தோடு வீட்டிலும் ஒரு வாசிகசாலை போன்று ஒரு பெரிய அலுமாரி நிறையப் புத்தகங்கள் உள்ளன. அதனை வாசிப்பதுவும் மிகவும் சுவை தரக்கூடியதாக இருந்தது. இன்னும் அந்த இனிமையான ஞாபகங்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன. அதுமட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் பங்கேற்று இல்ல மட்டத்தில் கோட்ட மட்டத்தில் நிறைய சான்றிதழ்களும் பெற்றுள்ளேன்.

04. முதலாவது படைப்பு பத்திரிகையில் வெளிவந்த போது எவ்வாறான ஒரு தாக்கத்தையும் உணர்வுகளையும் ஏற்படுத்தியது? அது பற்றி குறிப்பிட முடியுமா?

இளமைப்பராயம் தொட்டு ஆசிரிய பயிலுனராக இருக்கும் வரைக்கும் எத்தனையோ கவிதைகள் எழுதியுள்ளேன். ஆனால் அவற்றை எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பியதில்லை. காரணம் அது பற்றிய எந்த வழிகாட்டுதல்களும் கிடைத்ததுமில்லை. பாடசாலை மாணவியாக பின்னர் பயிலுனராக, ஆங்கில ஆசிரியராக, ஆங்கில ஆசிரிய ஆலோசகராக அதன் பின்னர் அதிபர் எனும் பொறுப்பை சுமந்த பின்னர் தான் என்று முதல் கவிதை பத்திரிகையில் பிரசுமானது.

நான் அப்போது கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய சந்தர்ப்பம் அது. பாடசாலை மாணவர்களுடைய அடைவுகளை வெற்றி வாகை சூடும் நிகழ்வுகளை நவமணி பத்திரிகைக்கு அனுப்புவது வழக்கம். அந்த சந்தர்ப்பத்தில் தான் என்னுடைய முதலாம் கவிதைப் படைப்பான “இடம் கொடுங்கள் இலை மறைகாய்களுக்கு” எனும் கவிதை நவமணி பத்திரிகையில் வெளியானது. அந்த சந்தர்ப்பத்தில் வெளியான மகிழ்ச்சியின் இன்பம் இன்னும் என் உள்ளத்தில் வழிந்தோடுகிறது.

எனது எழுத்துக்களை அதன் கருத்துக்களை கவிதை வடிவில் எழுத்துக்களாக நவமணியில் கண்டபொழுது இனம்புரியாத மகிழ்ச்சியை நான் உணர்ந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மீண்டும் பிறந்தது போன்ற ஒர் உணர்வும் இன்னும் நிறைய எழுதி சாதனைகள் பல படைக்க வேண்டும் எனும் எண்ணமும் எனக்குள் வேர்விட்டது. அது அழகான உணர்வின் அனுபவ அதிர்வு. அதே அந்த அனுபவம் மென்மேலும் என்னை எழுதத் தூண்டியது. ஒவ்வொரு வாரமும் எழுதினேன். எழுதி அவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். அந்த பத்திரிகையில் வரும் என்னுடைய கவிதைகளை வெட்டி எடுத்து நேர்த்தியான முறையில் ஒட்டி எடுத்து சேர்த்து வைப்பேன்.

எனது முதல் ஆக்கம் நவமணிப் பத்திரிகையில் வருவதற்கு நவமணியின் பிரதம செய்தி ஆசிரியர் அல்ஹாஜ் எம். எஸ்.எம் ஷாஜஹான் அவர்கள் தான் காரணம். எனவே அவர்களுக்கு நான் எனது நன்றியினைத் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

அவர் மாத்திரம் எனது கவிதையை பத்திரிகையில் பிரசுரிக்காதிருந்தால் எனது இனிய கவிதைகள் அகிலத்தில் மணம் பரப்பியிருக்காது. இரண்டு கவிதை நூல்கள் வெளிவந்திருக்காது. எனவே அந்த சகோதரர் அவர்களுக்கு எனது நன்றியினை மிகவும் அன்புடன் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

என்னுடைய கவிதை பத்திரிகையில் வெளிவந்த பொழுது உடலுக்கும் உள்ளத்துக்கும் தெம்பை அளித்தது. மிகுந்த சக்தியையும் தைரியத்தையும் அது கொடுத்தது. அதிபர் எனும் நிர்வாகியாக இருந்து நிறைய வேலைகளை செய்வதற்கு சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தைரியத்தையும் மென்மேலும் எனக்கு ஈட்டிக் கொடுத்தது. மேலும் சமூக அவலங்களை சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய கருத்திக்களை கவிதையாக வடித்து பத்திரிகையில் பிரசுரமானதுமே என்னுடைய மனபாரம் குறைந்ததாக உணர்வேன்.

மேலும் நான் கவிதை எழுதுவது போல் என்னுடைய மாணவச் செல்வங்களும் என்னுடைய கவிதைகளை வாசிப்பதற்கும் அது போன்று எழுதவும் முயற்சித்தார்கள். தற்பொழுதும் முயற்சிக்கிறார்கள். எனவே எனக்கு அவர்களுக்கு வழிகாட்டவும் வாய்ப்பாகவுள்ளது. அது போன்ற கவிதைகளை அவர்கள் படிப்பதற்கு ஏதுவாக அமைந்தது. மாணவர்கள் மாத்திரமன்றி ஆசிரியர்களும் கவிதைகளை எழுதி என்னிடம் கொண்டு வந்து காட்டுவார்கள்.

எனவே அவர்களையும் ஊக்கப்படுத்தும் முகமாக ஆசிரியர்களுடைய கவிதைகளையும் மாணவர்களுடைய கவிதைகளையும் நானே பத்திரிகைக்கு அனுப்பி அவை பிரசுரமான பின்னர், அவர்களுக்கு அந்த பத்திரிகைப் பிரதி ஒன்றையும் அன்பளிப்பு செய்து வைப்பேன். அதன் விளைவாகவே எனக்குள் மென்மேலும் கவிதை ஊற்று பெருக்கெடுத்தது. அதன் விளைவாக இன்று இரண்டு கவிதைப் புத்தகங்களை தொகுத்து சமூகத்தின் கரங்களில் ஒப்படைத்த மனத்திருப்தி எனக்குள். இதற்கு அருளாய் வரம் தந்த இறைவனையும் புகழ்ந்து என்னுடைய நன்றியை என்னுடைய ஊக்குவிப்பாளர்கள் ரசிகர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

ஆரம்பத்தில் நவமணியில் பூத்த என்னுடைய கவிதைகள் பின்னர் விடிவெள்ளி, தினகரன், மெட்ரோ நியுஸ், சுடர் ஒளி, எங்கள் தேசம், மித்திரன் வார மலர், சஞ்சிகைகளான அல்ஹஸனாத், பூங்காவனம், உதயம் (இந்தியா), ஞானம், நீங்களும் எழுதலாம் போன்ற மாதாந்த, மற்றும் காலாண்டு சஞ்சிகைகளிலும் வியூகம் இணையதளத்திலும் (www.youthceylon.com) என்னுடைய முக நூலிலும் (Fathima Ahamed) பிரசுரமானது. எனவே என்னுடைய கவிதைகளை பிரசுரித்த அந்த செய்தி ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

யூத் ஸிலோன் இணையதளத்தில் வௌியாகியுள்ள கவிதாயினி இஸ்மத் பாத்திமாவின் அனைத்து கவிதைகளையும் பார்க்க

இன்றும் எனது முதல் படைப்பு பத்திரிகையில் வெளியானது ஒரு பேரானந்தமாக இருந்து கொண்டிருக்கின்றது. அதன் இன்பத்தின் நுகர்ச்சியை இன்னும் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

05. உங்களது நூல் வெளியீட்டு முயற்சிகள் பற்றி அறியத் தாருங்களேன்?

எனக்கு இதுவரை “இரண்டும் ஒன்று”, “புதையல் தேடி” என இரண்டு தமிழ் கவிதைத் தொகுப்புக்களை வெளியிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இந்த இரு நூல்கள் வெளியிடும் சந்தர்ப்பங்களிலும் எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்து உறுதுணை வழங்கியவர் எனது அன்புக் கணவரும், ஆசிரிய வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளருமான ஜனாப் எம்.ஏ. எம்.றிப்தி அவர்களும் என்னுடைய அன்பு மகன் எம்.ஆர்.அகீல் அஹமத் மற்றும் என்னுடைய குடும்ப உறுப்பினர்களும் ஆவர். எனவே நான் அவர்களுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

அடுத்ததாக எனது முதல் நூலை தயாரிக்கும் சந்தர்ப்பத்தில் கிண்ணியாவைச் சேர்ந்த கலாபூஷணம் பீ.ரீ.அஸீஸ் அவர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள். இதில் ISBN இலக்கம் எடுப்பது முதல் இறுதி வரை சகல வழிகாட்டல்களையும் தந்தார்கள். இச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்கும் நான் எனது நன்றியைத் தெரியப்படுத்திக் கொள்கின்றேன். முதல் நூலை தயாரிப்பதற்கு பெற்ற அனுபவத்தைக் கொண்டு இரண்டாவது நூலை எனக்கே ஓரளவு இலகுவாக சுயமாக செய்து கொள்ள முடிந்தது. இருப்பினும் இந்த நூல் வெளியீட்டின் போது மேலும் சிலர் எனக்கு பக்கபலமாக இருந்து பங்களிப்புச் செய்தார்கள். எனவே அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நூல் வெளியீடு என்பது காலத்தால் மறக்க முடியாத ஒரு அனுபவப் பகிர்வு. அது ஒரு பெரிய அனுபவப் பதிவாக உள்ளத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. என்னுடைய முதல் நூல் வெளியீட்டு விழாவின்போது 300-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்தார்கள். அது ஒரு ஆனந்தமான ஒரு சிறிய இலக்கிய விழாவாக இருந்தது. அது பற்றி முன்னாள் தர்கா நகர் கல்வியியல் கல்லூரியின் உப பீடாதிபதி கலைவாதி கலீல் ஆசிரியர் அவர்கள் “கல்- எலியவில்… ஒரு குட்டி இலக்கிய விழாவாக நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா” எனும் தலைப்பில் 2018.01.10 ஆம் திகதி தனது அனுபவப் பகிர்வை நவமணியில் அழகியதொரு கட்டுரையாக வடித்திருந்தார்.

பல கல்விமான்களும் பல கலைமான்களும் பல ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்த இனியதொரு வைபவமாக அது இருந்தது.
அதே போன்று இரண்டாவது நூலுக்கும் அநேகமானோர் வந்து கலந்து கொண்டார்கள். இதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் இரண்டு நூல் வெளியீடுகளிலும் என்னுடைய தந்தை, முன்னாள் அதிபர், சமாதான நீதிவானான அல் ஹாஜ் ஏ.சீ.செய்யது அஹ்மது அவர்கள் கலந்துகொண்டமை வாழ்வில் இனிய நிகழ்வாகும். என்னுடைய இரண்டாவது நூலில் என்னுடைய அன்புக் கணவரும் தர்கா நகர் ஆசிரியர்கள் வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளர் ஜனாப். எம்.ஏ.எம்.றிப்தி அவர்கள் தலைமை தாங்க என்னுடைய தந்தை, முன்னாள் அதிபர், சமாதான நீதிவானுமான அல் ஹாஜ் ஏ.சீ.செய்யது அஹ்மது அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அவரை பொன்னாடை போர்த்தி மகிழ்வித்தமை என் உள்ளத்துக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கின்றது.

எனது தாயின் திடீர் மறைவையொட்டியே நான் இத்தனை வேகத்தில் தந்தை முன்னிலையில் இந்த நூல் வெளியீட்டை செய்வதற்கு எண்ணங் கொண்டேன். என் எண்ணம் அல்லாஹ்வின் அருள் கொண்டு நிறைவேறியது.

அதே சந்தர்ப்பத்தில் கிண்ணியாவைச் சேர்ந்த கலாபூஷணம் பீ.ரீ.அஸீஸ் அவர்கள் கிண்ணியா முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தினால் எனக்கு “கவியரசி” என பட்டம் தந்து பொன்னாடை போர்த்தி விருதும் கேடயமும் வழங்கி எனக்காக காவியம் பாடி என்னை கௌரவித்தமை வாழ்வில் எனக்கு எல்லையில்லா ஆனந்தத்தைத் தருகின்றது.

இந்த இரு நூல் வெளியீடுகளிலும் கல்வியியலாளர்கள், இலக்கியவார்வளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் எனப் பல்வேறுபட்ட தரப்பினரும் வந்து கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்வுகளுக்கு சில நண்பர்கள் எனக்கு உதவி புரிந்தமை எனது உள்ளச் சுமையை இலகுபடுத்தியது.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் அந்த நல்லுள்ளம் கொண்டு உதவி புரிந்த மற்றும் வந்து கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

06. படைப்பிலக்கியப் பணிகளுக்காக நீங்கள் சமூக மட்டத்தில் பெற்ற விருதுகள் பாராட்டுகள் ஏதும் உண்டா? நீங்கள் எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கு நிகழ்வுகளில் கலந்து கொண்டதுண்டா? அது பற்றிய விவரங்கள்?

படைப்பிலக்கியப் பணிகளுக்காக சமூக மட்டத்தில் பல விருதுகளும் பாராட்டுக்களும் பெற்றுள்ளேன். 2018 ஆம் ஆண்டில் மிரிகம பிரதேச மட்டத்தில் திறந்த இலக்கிய மட்டப் போட்டிகளில் சிறுவர் கதை, பாட்டு என ஆங்கிலம் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் மொத்தமாக நான்கு முதலிடங்களை பெற்றுக்கொண்டேன். அடுத்து மாவட்ட மட்டத்திலும் மூன்று முதல் இடங்களையும் ஒரு இரண்டாம் இடத்தையும் பெற்றேன். அத்தோடு தேசிய மட்டத்தில் சிறுவர் கதை எழுதுதல் போட்டியில் இரண்டாமிடம் கிடைக்கப்பெற்றது. இதற்கு வெள்ளிப்பதக்கம், ரூபாய் 7500/= காசோலை, சான்றிதழ் என்பன கிடைத்தன. இந்த நிகழ்வு 2019 மார்ச் மாதம் 05 ஆம் திகதி BMICH இல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அடுத்ததாக 2019 ஆம் ஆண்டில் மீரிகம பிரதேச மட்டத்தில் ஆங்கிலம், தமிழ் போன்ற இரு மொழிகளிலுமாக கவிதை, சிறுவர் கதை, சிறுகதை, நூல் விமர்சனம், பாட்டு, போன்ற ஒன்பது போட்டிகளிலும் பங்குபற்றி ஒன்பது முதலிடங்களைப் பெற்றுக்கொண்டேன். அடுத்து மாவட்ட மட்டத்தில் எட்டு முதலிடங்களையும் ஒரு இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டேன். இதற்கான தேசிய விருது வழங்கும் கொரோனா காரணமாக இன்னும் நடைபெறவில்லை.

மேலும் சிறந்த அதிபருக்கான விருதாக “விதுகல்பதி அபிநன்தன -2018″ (විදුහල්පති අහිනන්දන – 2018”) கேடயம், வெண்கலப்பதக்கம், சான்றிதழ் என்பன கிடைக்கப்பெற்றன. இவையே நான் பெற்றுக்கொண்ட விருதுகளும் பாராட்டுகளுமாக இருக்கின்றன. மேலும் இன்னும் பல விருதுகளும் பாராட்டுக்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

நாட்டில் கொரோனா காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இன்னும் பல நிகழ்வுகள் நடக்காமல் உள்ளன. எனவே கூடிய சீக்கிரம் அவை நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இவை தவிர இளம்பராயத்தில் ஆங்கில மட்டப் போட்டிகளிலும் தமிழ் தினப் போட்டிகளிலும் நிறைய விருதுகள் பாடசாலை மட்டத்தில், கோட்ட மட்டத்தில் மற்றும் மாவட்ட மட்டத்திலும் பெற்றுள்ளேன்.

அடுத்து எழுத்தாளர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்கான அழைப்பு ஒன்று எனக்குக் கிடைத்தது. அது கடந்த 2018.09.04 ஆம் திகதி நடைபெற்றது. இது உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய மற்றும் வெளியீட்டு பிரிவினால் நூலாக்கத்தில் ஈடுபாடுள்ள எழுத்தாளர்களுக்காக நடைபெற்றது. இதன் போது இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தும் எழுத்தாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள். இதன் போது எழுத்தாளர்களுக்கிடையேயான நிறைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

07. இலக்கியத் துறைக்கு மேலதிகமாக நீங்கள் அதிபர் சேவையைச் சேர்ந்த ஒரு தரம் பெற்ற பெண் அதிபராக கடமையாற்றி வருகின்றீர்கள். வேலைப்பளுவான இயந்திர மயமான இந்த காலத்தில் இரண்டு துறைகளையும் உங்களால் செய்வதற்கு உங்களுக்கு நேர காலங்கள் உண்டா? இது குறித்த அனுபவங்களை பகிருங்களேன்.

இது சிறந்ததொரு கேள்வி. நீங்களும் ஒரு அதிபர் என்ற வகையில் ஒரு அதிபரின் வேலைப்பளு பற்றி நன்றாகவே உங்களுக்கு தெரியும்.

இலக்கியத் துறைக்கு மேலதிகமாக அதிபர் சேவையைச் சேர்ந்த ஒரு தரம் பெற்ற அதிபராக கடமையாற்றி வருவதோடு என்னால் இயன்ற அளவு இலக்கியம் வளர்க்க பாடுபடுகின்றேன். வேலைப்பளுவான இயந்திரமயமான இந்த காலத்தில் இரண்டு துறைகளையும் சரிசமமாக செய்வதற்கு முயற்சிகள் செய்கிறேன். இந்த இரண்டிலும் முதலில் அதிபர் பொறுப்பை உடனுக்குடனே சகல காரியங்களையும் செவ்வனே நிறைவேற்றிவிடுவேன். எப்போதெல்லாம் இலக்கிய ஊற்று எனக்குள் ஊருகிறதோ அப்போதெல்லாம் அவற்றை வடித்து கைப்பேசியிலே வைத்துக்கொள்வேன். சில வேளை அவற்றைக் குறித்துக் கொள்ள முடியாமல் போவதுமுண்டு. பிறகு அந்த எண்ண ஊற்று மனதைவிட்டு நீங்கிவிடும்.

ஒரு பெண் என்ற வகையில் இலங்கை அதிபர் சேவையில் இயங்கும் ஒரு அதிபராக, பாடசாலை நிர்வாகத்தையும் வீட்டு நிர்வாகத்தையும் சிறப்பாக வேறு நபர்களின் உதவியின்றி கவனித்துக் கொண்டு இலக்கியம் படைப்பது என்பது என்னைப் பொறுத்த மட்டில் பெரிய சாதனை தான். இந்த சாதனையை நிலை நாட்ட எனது கணவர் எனக்கு பக்கபலமாக உள்ளார். அதே நேரம் சில பெண் எழுத்தாளர்களுக்கு இலக்கியம் படைப்பதற்கு அவர்களது கணவன்மார்களே முட்டுக்கட்டையாக உள்ளார்கள். அந்த விதத்தில் எனது கணவர் என்னை ஊக்குவிப்பார். கவிதைகள் பத்திரிகையில் பிரசுரமானால் அதனை வாங்கிக் கொண்டு வந்து தருவார்.

அவரும் ஒரு அதிபராக இருந்ததனால் அந்த பொறுப்பை நன்கு உணர்ந்தவர். அந்த வகையில் அவர் எனக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குகிறார். அதே நேரம் இலக்கியம் படைப்பது பற்றிய எதிர் மறையான எண்ணங்கள் அவரிடம் இல்லை. இது எனக்கு முற்றிலும் வரப்பிரசாதம்.

அதே நேரம் இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடைகளுள் என்னைப் பொறுத்தவரை நேரம் என்பது எல்லோருக்கும் பொதுவான சமமான ஒன்று. ஒவ்வொருவரும் தத்தமக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தை சரியாக பயன்படுத்த முடியும் என்றால் அதுவே அவர்களது வாழ்வில் வெற்றியாகத் திகழும். நாம் எந்த வேலையையும் திட்டமிட்டு உடனுக்குடன் செய்ய வேண்டும். எந்த வேலையை நாம் நாளைக்கு செய்வோம், பிறகு செய்வோம் என்று பிற்போடுகின்றோமோ அந்த வேலை ஒரு போதும் நடைபெறுவதில்லை. இதனால் எங்களுக்குத் தான் இழப்புகள். இதனால் எப்போதும் எமது முன்னேற்றம் தடைப்படுகின்றது. அந்த வகையில் ஒரு பொறுப்பு மிக்க அதிபராக இருந்து கொண்டு நம் மாணவச் செல்வங்களுக்கு முன்மாதிரியாக நான் எனது சகல காரியங்களையும் நானே முயன்று செய்து கொள்வேன்.

மேலும் ஒரு விடயம் சொல்லியாக வேண்டும். அதாவது ஆண்களை விட பெண்கள் திறமைசாலிகள். எப்படியென்றால் ஒரு நேரத்தில் பல விடயங்களை அவதானித்து செய்யும் வல்லமை படைத்தவர்கள். இயற்கையின் அமைப்பிலும் வலிகளைக் தாங்கும் வல்லமை உடையவர்கள் பெண்கள். அந்த வகையில் அதிகாரிகளாக பெண்கள் இயங்குவது மிக இலகுவான காரியம். வீடுகளில் ஆண்களின் அடக்கு முறையினால் தான் பெண்களின் திறமை வெளியாவதில்லை. ஆனால் என்னுடைய வீட்டில் அப்படியில்லை.

என்னுடைய தந்தை ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர், சமாதான நீதிவானுமான அல்ஹாஜ் ஏ.ஸீ.செய்யது அஹ்மது மற்றும் எனது அன்புக் கணவர் முன்னாள் அதிபரும் இந்நாள் தர்கா நகர் ஆசிரியர்கள் வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளருமான ஜனாப் எம்.ஏ.எம்.றிப்தி அவர்களும் இரு தலைமை பதவி வகித்து சமூகத்திற்காக சிறந்த சேவை செய்தவர்கள். அந்த வகையில் நானும் அவர்களை விடவும் தற்காலத்திற்கு ஏற்ப திறம்பட சேவைகள் செய்ய வேண்டும் என எனக்கு எப்போதும் ஊக்கம் தருபவர்கள். ஆதலால் எனக்கு மிகவும் தைரியமாக சேவை செய்யும் மனப்பக்குவம் எனக்குள் வேரூன்றிவிட்டது.

பாடசாலையில் அதிபராகவும் கடமையாற்றி வீட்டில் எஜமானியாகவும் பொறுப்போடு கடமை புரிந்தாலும் எந்த வேலையையும் நான் பிற்படுத்துவதில்லை. பாடசாலை மேற்பார்வை மற்றும் வேலைகளை பாடசாலையில் செய்துகொள்வேன். பெரும்பான்மையான நேரங்களில் பாடசாலை வேலைகளையும் வீட்டுக்கு கொண்டு வந்து செய்வதுண்டு. ஆனால் வீட்டு வேலைகளை பாடசாலைக்கு கொண்டு சென்று செய்வது இயலாத ஒன்று. அதே நேரம் கவிதை எனும் பொழுது கவிதை ஊற்று வரும் பொழுது எழுதி வைத்துக் கொண்டால் தான் உண்டு. எழுத உட்கார்ந்து கொண்டு கவிதை எழுதப் போகிறேன் என்று இருந்தால் ஒரு நாளும் எனக்கு கவிதை எழுத முடிவதில்லை. ஆதலால் தன்னுடைய ஓய்வு நேரங்களில் அல்லது பின்னேரங்களில் அல்லது அழகிய இயற்கையோடு தனித்து இருக்கும் நேரங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் கவிதை எண்ணங்கள் சிறகடிக்கும். கவிதை ஊற்றுகள் ஊற்றெடுக்கும்.

எனவே அந்த சந்தர்ப்பங்களில் உடனே கையடக்கத் தொலைபேசியில் டைப் (type) செய்து கொள்வேன். அதன் பின்னர் ஓய்வான நேரங்களில் அதனை மெருகூட்டி சீர்செய்து சரிப்படுத்திக் கொள்வதுண்டு. அதே நேரம் அந்தக் கவிதைகளைச் சீர் செய்து கொண்ட பின்னர் ஈமெயிலில் பத்திரிகைகளுக்கு உடனே அனுப்பி வைப்பேன். பின்னர் பத்திரிகைகளில் அந்த கவிதை தாங்கி வரும் பொழுது அதை காணும் இன்பத்தில் சகல கவலைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் கூட மறந்து போவேன். ஏனெனில் தன்னுடைய எழுத்தினை அது தாங்கி வந்த கருத்தினை பத்திரிகையில் தான் படிக்கும் பொழுது அலாதி இன்பம். மற்றவர்களும் படித்துவிட்டு பாராட்டும் பொழுது, மீண்டும் பிறந்து விடுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். அந்த சந்தர்ப்பத்தில் மென்மேலும் உத்வேகத்தோடு அதிபராக வேலை புரியவும், வீட்டு வேலைகளை தானே செய்து கொள்வதற்கும் சக்தியும் தைரியமும் ஏற்படுகின்றது. ஆதலால், பெண் ஆகிய நான் அதிபராக இருந்து கொண்டு இலக்கியம் படைப்பது என்பது எனக்கு ஒரு பொழுதும் சிக்கலாக இல்லை.

சில சமயங்களில் பாடசாலை அனுபவங்களே எனக்கு கவிதையின் கருவாக அமைந்ததுண்டு. அதே நேரம் மாணவ சமூகத்திற்கு மற்றும் ஆசிரியர்களுக்கு இன்னும் சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கருத்துக்களை மிகவும் குறைந்த சொற்களில் மிக இலகுவாக, அழகிய உரைநடையில், கவிதை வரிகளுக்குள் அடக்கி நல்ல கருத்துக்களை சமூகத்திற்கு எடுத்தியம்பலாம். இதனால் தனது பாடசாலை மாணவர்கள் மாத்திரமன்று யார் யாரெல்லாம் அந்த கவிதைகளை படிப்பார்களோ அவர்களுக்கெல்லாம் அதில் படிப்பினையும், புத்திமதியும், அனுபவமும், அறிவும், ஆற்றலும், போய்ச் சேர்கின்றது. இது ஒரு நன்மையான காரியமாக இருக்கின்றது. ஆதலால் நான் இதனை மிகவும் ஈடுபாட்டுடன் விருப்புடனே இரு துறைகளிலும் ஈடுபடுகின்றேன். இந்த இரு துறைகளிலும் ஒன்றித்து பயணிக்க இலகுவாக இருக்கின்றது.

மேலும் அதிபராக இருந்து நேர்மையாக பாரபட்சமின்றி மிகவும் பாடுபட்டு கடமைப் பொறுப்புக்களை செய்வதனால் இறைவனால் வழங்கப்பட்ட ஓர் அருளாக எனக்குள் இருக்கும் இந்த கவித்திறமையைக் கருதுகிறேன். அத்தோடு தாம் வாழும் நாட்களில் உச்சபயன் பெற வேண்டும். ஆண்டுகள் எத்தனை வாழ்கிறோம் என்பதை விட வாழ்ந்த ஆண்டுகளில் எவ்வளவு நல்லது செய்தோம் என்பதே முக்கியமாகும். அதாவது, சொற்ப காலத்தில் கூடுதலான வேலைகளைத் திட்டங்களை செய்து அமுல்படுத்தி பயன்பெற வேண்டும் என்பதே என்னுடைய பேரவா.

அப்பொழுது தான் அது ஒரு சாதனையாக இருக்கும். ஏனெனில் கரைந்து கொண்டு செல்லும் வாழ்நாளை மிகவும் களிப்போடு, பிறர் பயன் பெற, கவிதைத் துறையில் காலூன்றி, கல்வித்துறையில் வேரூன்றி பயணிப்பதே என்னுடைய ஒரே ஆசையாக இருக்கின்றது. ஆதலால் கலைத்துறையிலும் கல்வித்துறையிலும் வீட்டுப் பொறுப்புக்களிலும் உன்னத அக்கறையோடு சகல காரியங்களையும் செவ்வனே செய்து கொண்டு செல்வது இயலுமாக இருக்கின்றது. அதே நேரம், நேரத்தைப் பூரணமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அதே 24 மணி நேரம் தான் ஒரு நாளைக்கு இருக்கிறது. கிடைக்கின்றது. அவரவர் பயன்படுத்தும் விதத்தில் தான் அது குறுகியதாகவும் நீண்டதாகவும் பயனுள்ளதாகவும் பயனற்றதாகும் இருக்கின்றது. அதனால் ஒவ்வொருவரும் மனது வைத்தால் பல விடயங்களையும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தும் தன்மையை ஏற்படுத்திக் கொள்ளலாம். வாழ்வை வெற்றி பெறலாம்.

08. முஸ்லிம் பெண்கள் நிறுவனங்களை கட்டியால்வதென்பது சம்பிரதாய ரீதியாக இல்லாத நிலையில் தான் தொடர்ந்து வந்திருக்கின்றது. நீங்கள் ஒரு பெண் ஆளுமையாக பாடசாலையை நடாத்தி வருகிறீர்கள். உங்கள் பாடசாலையை நடத்த முடியுமான அனுபவங்கள் நீங்கள் பெற்றுக்கொண்ட சவால்கள், அதனை முறியடித்த விதங்கள் பற்றி கொஞ்சம் அனுபவ வாயிலாக குறிப்பிடுங்கள்.

முஸ்லிம் பெண்கள் நிறுவனங்களை கட்டியால்வதென்பது சம்பிரதாய ரீதியாக இல்லாத நிலையில் தான் தொடர்ந்து வந்திருக்கின்றது. ஒரு முஸ்லிம் பெண்ணாக ஆளுமை மிக்க அதிபராக கடமை புரிவது மிகுந்த சவாலாகவே உள்ளது. பெண் ஆசிரியர்கள் நிறையப் பேர் இருந்தாலும் முஸ்லிம் பெண் அதிபர் எனும் போது மிகவும் குறைவு. சவால்கள் எனும் போது எண்ணிலடங்கா சவால்கள் உள்ளன. அன்றாடம் சவால்கள் எங்களுக்காகவே முளைவிடும். ஒரு பெண் அதிபர் யாருடைய உதவியும் இன்றி தனது வீட்டையும் நிர்வகித்துக் கொண்டு பாடசாலையையும் நிர்வகிப்பது என்பதுவே ஒரு சவால் தான்.

அதே நேரம் அதிபர் எனும் ஆசனத்தில் அமர்ந்தால் எண்ணிலடங்காத பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அதற்கான ஆளுமையும், அனுபவமும், அறிவும், திறமையும், சந்தர்ப்ப ஞானமும், முடிவெடுக்கும் தீர்மானமெடுக்கும் திறமையும் வேண்டும். சில வேளை காலை உணவை உண்பதற்குக் கூட நேரம் இருக்காது. பாடசாலை நிர்வாகம் செய்யும் போது பல்வேறுபட்ட மனிதர்கள்; படித்தவர்கள், படிக்காதவர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள், விஷயம் விளங்குபவர்கள், விளங்காதவர்கள், வயோதிபர்கள், இளவயதினர் எனப் பல்வேறுபட்ட மனிதர்களுடன் பழக வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

எனவே ஒவ்வொரு நபரையும் இணங்கண்டு அவர்களுடைய போக்கை அடையாளங் கண்டு அதற்கு ஏற்ற அமைப்பில் பிரச்சினைகளைத் தீர்வு செய்து தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

வரும் ஒவ்வொரு நபரது தேவைகளையும் தகவல் அறிதல் சட்டத்திற்கு அமைய அவர்கள் கேட்கும் விடயங்களையும் கொடுத்தாக வேண்டும் அல்லது பதில் சொல்லியாக வேண்டும். பாடசாலை நேரத்தில் ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுடைய ஆசிரியர்களுடைய பாடசாலை வளங்களுடைய பாதுகாப்புக்கும் பொறுப்புக்கும் அதிபர் என்பவர் பொறுப்புதாரி. அதே நேரம் மாணவர்களுடைய கல்வி ஒழுக்க நடவடிக்கைகள் யாவற்றிற்கும் அதிபரே பதில் சொல்ல வேண்டும்.

மேலும் பெண் அதிபர்கள் பாடசாலையை அழகான முறையில் நிர்வாகத்தைச் செய்து முன்னேற்றிச் செல்லும் போது குறிப்பாக சதிகாரர்களினது சூழ்ச்சியில் இருந்தும் தப்ப வேண்டும். இப்படியான நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலைகளை நிர்வகிக்கும் பாரிய பொறுப்பு மிகப்பெரிய சவாலே. அது மட்டுமல்லாமல் நவீன உலகில் தகவல் தொழில்நுட்பம் அறிவு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். சில நேரங்களில் E-mail or Google forms என்பன வரும். இதனை தற்போதே நிறைத்து அனுப்புங்கள் என்று. எனவே அவை பற்றிய அறிவும் தெளிவும் எமக்கு இருந்தேயாக வேண்டும்.

மேலும் பாடசாலையில் சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டும் என்றால் மும்மொழிகளிலும் ஆற்றல் உள்ளவராக இருக்க வேண்டும். இல்லையேல் நிறைய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும். மேலும் இன்றைய காலகட்டத்தைப் பொருத்தவரையில் பாடசாலைகளை பார்த்தால் மாணவர்களில் நூற்றுக்கு 20 வீதமான ஆண் மாணவர்களே கல்வி கற்கின்றனர். ஆனால் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் மாணவியர்கள். அவர்களே உயர் கல்வி கற்று பெரும்பாலும் ஆசிரியர்களாக எல்லா இடங்களிலும் பதவி வகிக்கின்றனர். இந்த மாணவ மாணவர்களில் அந்த 20 வீதமான மாணவர்கள் தான் இன்று ஆசிரியர்களாகவோ அல்லது நிர்வாகிகளாகவோ விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்களாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.

உண்மையில் முஸ்லிம் பெண்கள் நிறுவனங்களை நிர்வாகிகளாக கையாள்வது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. காரணம் அவர்கள் அலுவலக ரீதியாக நிறைய சந்தர்ப்பங்களில் வெளியே செல்ல வேண்டி ஏற்படுதல், ஆண்களோடு சரிசமமாக பழக வேண்டிய சூழ்நிலை ஏற்படுதல், அத்தோடு அடிக்கடி வெளியே சென்று பாடசாலை தேவைகளை நிறைவு செய்வதற்கு கஷ்டப்பட வேண்டிய நிலைமை, போன்ற நிலைமைகளை தடுக்கும் முகமாக பெண்கள் ஆளுமைப் பொறுப்புக்களை அதிபராகவோ அல்லது வேறு வடிவிலோ ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற சூழ்நிலையை இன்று காணக்கூடியதாக இருக்கின்றது.

என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய தந்தையார் அதிபராக சேவை செய்தவர். அதே நேரம் என்னுடைய கணவரும் ஒரு அதிபராக என்னுடனேயே பதவி வகித்தவர். எனவே தந்தையையும் கணவரையும் அதிபராக கண்ட எனக்கு அதிபராக பணிபுரிவது ஒன்றும் பெரிய காரியமாக கருதவில்லை.

உண்மையில் அதிபராகக் கடமை புரிவதற்கு ஆளுமை பண்பு ஆற்றல் அதிகாரம் திறமை மும்மொழி வளம் இன்முகத்தோடு வேலை செய்யக்கூடிய மனப்பக்குவம் வசீகரமான தோற்றம் சகல காரியங்களிலும் மக்களுடைய மனதை வெல்லும் திறன் போன்ற அனைத்தையும் ஒருமித்து பயன்படுத்தக்கூடியதாக இருப்பின் சிறந்த நிர்வாகியாக இருப்பது சிக்கலானதாக ஒரு பொழுதும் இருக்காது. அதனை கலையாகக் கொண்டு செயல்பட்டு வந்தால் எதுவும் பெரிய துன்பமாக இருக்காது என்பது எனது கருத்து.

அந்த வகையில் நானும் இலங்கை அதிபர் சேவையில் 2009ஆம் ஆண்டிலிருந்து சேவை செய்து வருகின்றேன். என்னுடைய இந்த அதிபராகக் கடமை புரிந்த காலகட்டங்களில் பல நெருக்கடிகளையும் சில சிக்கல்களையும் எதிர்நோக்கிய சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. ஆயினும் அவற்றில் துவண்டு போகாமல் மீண்டும் தன்னைத் தானே தைரியமூட்டிக் கொண்டு இன்னும் பயணிக்கிறேன்.

நான் அதிபராக கடமை புரிந்த பாடசாலைகள் இறைவனருளால் மிகவும் துரிதமான வளர்ச்சியை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு நல்ல பல உள்ளங்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகவும் இருக்கின்றது. மேலும் நான் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நம்பகத்தன்மையுடையதாகவும் செயற்படுவதனால் பொதுமக்களிடமிருந்து பெற்றோரிடமிருந்து மாணவர்களிடமிருந்து ஆசிரியர்களிடமிருந்து உயர் அதிகாரிகளிடமிருந்து மற்றும் அனைவரிடமிருந்தும் நன்மதிப்பையும் சிறந்த நிர்வாகி என்ற பெயரையும் பெறக்கூடியதாக இருக்கின்றது.

09. இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலையில் நீங்கள் அதிபராக கடமையாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். தற்பொழுது கடமையாற்றும் பாடசாலைக்கு நீங்கள் என்ன செய்ய உத்தேசிக்கிறீர்கள்?

நான் தற்போது பஸ்யால எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராக கடமை புரிகிறேன். இந்த பாடசாலை தரம் 11 வரையுள்ள Type 2 பாடசாலையாகும். இந்த பாடசாலை 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இன்னும் க.பொ.த (சா/த) வகுப்பு வரையே உள்ளது. மொத்தமாக மாணவர்கள் 250 பிள்ளைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கிறார்கள். சில மாணவர்கள் உயர் தரம் கற்பதற்கு பிற பாடசாலைகளுக்கு செல்கிறார்கள். சில மாணவர்கள் வெளியே சென்று கற்கும் வாய்ப்புகள் குறைவு என்பதால் சாதாரண தரத்துடனேயே வீட்டிலே இருந்து விடுகிறார்கள். ஆதலால்; பிள்ளைகளது கல்வி, கலை, கலாச்சார, ஒழுக்க விழுமியங்களை வளர்ப்பதோடு மாணவர்களுக்கு க.பொ.த (உ/த) ஐ இந்த பாடசாலையிலே கற்பதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும் இலங்கையில் சிறந்த ஒரு பாடசாலையாக உருவாக்க வேண்டும் என எண்ணம் கொண்டுள்ளேன்.

10. உங்கள் பாடசாலைக்கு சமூகப் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?

எனது பாடசாலை சகல இன மதத்தவர்களும் வாழும் ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கே சில தனிப்பட்ட நிறுவனங்களும் உள்ளன. பாடசாலைத் தேவைகளின் போது வசதிபடைத்த பெற்றோர்கள் சில தனி நபர்கள் உதவிகள் செய்துள்ளார்கள். அதே போன்று ஒரு சில தனியார் நிறுவனங்களும், சில NGO’s உம் பங்களிப்புச் செய்துள்ளன.

வசதி வாய்ப்புள்ளவர்கள், தனவந்தர்கள், யாவருடைய உதவி ஒத்தாசைகளையும் எடுத்துக் கொண்டு தான் பாடசாலை அபிவிருத்தித் திட்டங்களை செய்துகொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் அரசினால் கிடைக்கும் உதவிகள் மாணவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப குறைவாகவே கிடைப்பதனால் அவற்றைக் கொண்டு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளது.

அந்த வகையில் சில பெற்றோர்களும் தனவந்தர்களும் பாடசாலைக்குத் தொண்டாற்றி வருகின்றனர். பாடசாலைக்கு உதவுவதானது ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்ப உதவுவதாகும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் அந்த நன்நோக்குடைய மனிதர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

11. உங்கள் பாடசாலையில் மாணவர் நலன்புரி விஷயங்கள் எந்த நிலையில் உள்ளது? எதிர்காலத்தில் என்னென்ன நுட்ப முறைகளை நீங்கள் பாடசாலையைக் கட்டிக் காப்பதற்காக ஆலோசனைகளை நீங்கள் வைத்திருக்கின்றீர்கள்? இது பற்றி சொல்லுங்களேன்.

எனது பாடசாலையில் மாணவர்களுடைய நலன்புரி விஷயங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. தரம் 01 தொடக்கம் 05 வரையான சகல மாணவர்களுக்கும் காலையுணவு வழங்கப்படுகிறது. மேல் வகுப்புகளில் யாராவது உணவு கொண்டு வரவில்லை என்றாலும் அவர்களுக்கும் உணவு வழங்கி வைக்கப்படும். மாணவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு முதலுதவி வழங்கப்படும். அதற்கென ஒரு பொருத்தமான முதலுதவி அறை, கட்டில், மருந்துப் பொருட்கள், முதலுதவி வழங்க ஆசிரியர் வசதிகளும் உள்ளன. தேவையேற்படின் பெற்றோருக்கு தகவல் சொல்லி அனுப்பப்படும்.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கு வருடாவருடம் தனவந்தர் ஒருவர் மூலமாக சகல மாணவர்களுக்கும் கற்றலுக்கு தேவையான பயிற்சிக் கொப்பிகள், எழுதுகருவிகள் என்பன கொடுக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு தேவையான மூக்குக்கண்ணாடி வசதிகளும் ஒரு தனவந்தர் மூலமாக செய்து கொடுக்கிறோம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான உடல் உளவளஆரோக்கியம் சம்பந்தமான கருத்தரங்கு நிகழ்வுகளையும் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுக்கின்றோம். மற்றும் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல், Motivational program ஆகிய கருத்தரங்குகளைச் செய்கிறோம். இதற்கு ஊரில் உள்ள NGO’s உதவி செய்கின்றன.

எதிர்காலத்தில் மாணவர்களுக்கு முகக்கவசம், பாதணிகள் வழங்கவும் உத்தேசித்துள்ளோம். மேலும் தற்போது இருக்கும் குடிநீர் வசதிகள் மற்றும் மலசல கூட வசதிகள், வகுப்பறை வசதிகளை இன்னும் சிறப்பாக அபிவிருத்தி செய்ய உத்தேசித்துள்ளோம்.

12. பாடசாலை ஒன்றின் வெற்றிக்கு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெரிதும் பங்காற்றுகின்றது. நீங்கள் பாடசாலையை பொறுப்பெடுத்த காலத்திலிருந்து இன்று வரைக்கும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் நிலை எந்த நிலையில் உள்ளது பற்றிக் குறிப்பிடுங்கள்.

நான் தற்பொழுது மினுவங்கொடை வலயத்தில் பஸ்யால, எல்லமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன். இந்த பாடசாலைக்கு 2020 பெப்ரவரி 20ஆம் திகதி அதிபராக கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டேன்.

நாம் ஒரு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியானவர்களல்ல. சில மாணவர்கள் கல்வியில் அதிவிஷேட திறமை காட்டுவார்கள். சில மாணவர்கள் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அதிக அக்கறை காட்டுவார்கள். உண்மையில் மாணவர்களை இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் தான் சிறந்த ஆளுமையுள்ள எதிர்கால சந்ததிகளை உருவாக்கலாம். அந்த வகையில் நான் பாடசாலையைப் பொறுப்பேற்ற நாளிலிருந்தே தரம் 06 உம் அதற்கு மேற்பட்ட வகுப்புகளும் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் வகுப்பாசிரியரின் வழிகாட்டுதலோடு காலைக் கூட்டத்தை நடாத்துவார்கள்.

இந்தக் களம் மாணவர்களது தற்துணிவை ஆளுமையை, தைரியத்தை, திறமைகளை, தன்னம்பிக்கையை வளர்க்கும் தளமாக, தலைமை தாங்கும் இடமாக இருக்கின்றது. அதே நேரம் மாணவர்களது உடல் உள விருத்திக்காக காலயில் உடற்பயிற்சியும் நடைபெறும். இதில் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்வார்கள். மேலும் மாணவ தலைவர்கள் தெரிவினை நடாத்தி சின்னம் சூட்டி அவர்களது கடமைப் பொறுப்புகளை செய்ய பயிற்சியையும் வழங்கினோம். மாணவர் மன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் மும்மொழிகளிலும் மாணவர்களது நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

அத்தோடு இசை வாத்தியக் கருவிகள் சில பாடசாலையில் இருக்கின்றன. இதுவரை காலமும் அவை எந்த பாவனைக்கும் உட்படுத்தாமல் இருந்தன. சில வாத்தியக் கருவிகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய நிலைமையும் இருந்தது. மாணவர்களுடைய ஆளுமைகளை மேலும் விருத்தி செய்ய நடவடிக்கைகளை எடுத்தேன். இதற்கு மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களை சிறந்த முறையில் பயிற்றுவிக்க எத்தனிக்கும் வேளையில் தான் கொரோனாவின் ஆட்டம் நாட்டை உலுக்கியது. கடந்த 2020.03.17 தொடக்கம் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அதாவது கோவிட் -19 கொரோனாவின் தாக்கத்தின் காரணத்தால் பாடசாலை மூடுவதும் திறப்பதுமாய் உள்ளது.

இந்த கால கட்டத்தில் மாணவர்களது உள்ளம் பாதிக்காதிருப்பதற்காக மாணவர்களை கூடுதலான இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுத்தினோம். கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட “ரடக் வடின பொத” (රටක් වටින පොත) எனும் திட்டத்தின் கீழ் எமது பாடசாலையில் 54 மாணவர்கள் சுயமாக சிறுகதை, சிறுவர் கதை, கட்டுரை, சித்திரம், சுயசரிதை, வரலாற்று நிகழ்வுகள், இலங்கையின் முக்கிய இடங்கள் போன்ற இன்னோரன்ன விடயங்களை மாணவர்கள் புத்தகங்களாக மும்மொழிகளிலும் தயாரித்தார்கள்.

எனவே அவற்றைத் தயாரிக்க மாணவர்களுக்கு ஊக்கமூட்டி, வழிகாட்டி, ஆசிரியர்களூடாக திருத்தி, அவற்றை மீண்டும் சரி செய்து கோட்டக்கல்விப் பணிமனையூடாக அவற்றை வலயக்கல்வி பணிமனைக்கு கிடைக்கச் செய்தோம். இந்த சந்தர்ப்பத்தில் மாணவர்களை மிகுந்த அக்கறையுடன் இந்த செயலில் ஈடுபடச்செய்தது அவர்களது கலை இலக்கியத்தை வளர்த்தது ஒரு பாரிய வெற்றியாக கருதுகிறேன். இருப்பினும் இது பற்றி இந்த மாணவர்களுக்கு ஒரு பதிலும் இல்லாமல் எந்த ஒரு சான்றிதழேனும் மாணவர்களுக்கு வழங்காது இருப்பது மாணவர்களுக்கும் எனக்கும் மிகுந்த கவலையைத் தருகின்றது. இந்த திட்டத்தை அறிமுகம் செய்த அதிகாரிகள் இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

மேலும் மீரிகம பிரதேச சபையூடாக கலாச்சார பண்பாட்டு அலுவலக திணைக்களத்தினால் நடாத்தும் இலக்கியப் போட்டி நிகழ்வுகளில் நிறைய மாணவர்களை சகல பிரிவுகளிலும் கலந்து கொள்ளச்செய்தேன். நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அவற்றின் பெறுபேறுகள் இன்னும் வெளிவரவில்லை. கொரோனாவின் கொடுமை காரணமாக விளையாட்டுப் போட்டிகள் செய்ய முடியவில்லை. எதிர்காலத்தில் நிலமை சீரான பின்னர் அந்த தேவையின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து அதனையும் நடாத்துவோம். இன்னும் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ரெட் க்ரொஸ் (Red Cross) போன்ற முதலுதவி சம்பந்தமான பயிற்சிகள் அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனும் தீர்மானத்தில் இருக்கின்றேன்.

13. கொவிட் -19 அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் விடுமுறை வழங்கப்பட்டன. அந்தக் காலத்தில் மாணவர்களின் நலனை பாதுகாப்பதற்காக வீட்டில் இருந்த மாணவர்களுக்காக நீங்கள் பாடசாலையில் மாணவர்களின் கல்வி நலனைப் பாதுகாப்பதற்காக நீங்கள் முன் வைத்த வேலைத் திட்டங்கள் என்ன? மேலும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசு அறிவித்த நிலையில் ஒரு பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார நடைமுறைகள் அது பற்றிய பாதுகாப்பு பற்றிக் குறிப்பிடுங்களேன்.

கொரோனா மூலம் முழு உலகமும் பாதிக்கப்பட்டதில் இலங்கையும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் இலங்கையின் எதிர்கால சந்ததிகளைப் பாதுகாக்கும் முகமாக சகல பாடசாலைகளுக்கும் காலவரையறையின்றி விடுமுறை வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளை பாதிக்காதிருப்பதற்காக அதிபராக நான் பல முயற்சிகளை கையாண்டேன்.

அந்த வகையில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் மாணவர்கள், வகுப்பாசிரியர், பாட ஆசிரியர்களை, பகுதித் தலைவர் ஆகியோரை சேர்த்து இணைத்து வாட்ஸ்அப் குழுமங்களை அமைத்தேன். இதன் போது ஆசிரியர்கள் பெற்றோர்கள் யாவரும் பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள். அந்த குழுமங்களில் சகல ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் பணியை நடாத்துமாறு கேட்டுக் கொண்டேன். சில ஆசிரியர்கள் WhatsApp Video, Audio & Photos மூலமும் சில ஆசிரியர்கள் Zoom ஊடாக, Google Meet ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். பரீட்சையை Google Forms ஊடாக செய்வித்தார்கள். இது மிகவும் வெற்றிகரமான செயற்பாடாக இருந்தது.

மேலும் அவற்றை நானும் அவ்வப்போது மேற்பார்வையும் செய்தேன். மேலும் மாணவர்களிடமிருந்து feedback இனையும் பெற்றேன். பிறகு அவற்றை குறிப்பிட்ட ஆசிரியர்களுக்குத் தெரியப்படுத்தி கற்பித்தல் நடவடிக்கைகளை சீர்செய்து கொண்டோம்.

மேலும் மாணவர்களுக்கு அவர்களுடைய ஆக்கங்களை சிறிய வீடியோக்கள் மூலம் பாட்டு, கதை, பேச்சு, நடனம், விடுகதை உரையாடல் போன்ற ஏதேனும் ஒரு ஆக்கத்தினை வீடியோ செய்து அனுப்பும் படியும் கேட்டுக்கொண்டேன். இதனை நிறைய மாணவர்கள் அனுப்பினார்கள். இதனை பெற்றோர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் செய்வித்தார்கள். இதற்கு ஆசிரியர்களது ஒத்துழைப்பும் கூடவே இருந்தது. அந்த வீடியோக்களை என்னுடைய முகநூல் பக்கத்தில் upload செய்து அந்த டink ஐ அம்மாணவர்களுக்கு அனுப்ப ஏனைய மாணவர்களும் அதனைப் பார்த்துவிட்டு மிகவும் அக்கறையுடன் ஈடுபட்டார்கள். மேலும் மாணவர்கள் உளரீதியாகப் பாதிக்காதிருப்பதற்காக மாணவர்களோடு ஆசிரியர்களும் நானும் வாரத்திற்கு ஒரு முறையேனும் தொலைபேசியூடே உறையாடினோம்.

அத்தோடு தரம் ஒன்று மாணவர்களது பெற்றோர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைத்தோம். அவற்றை பெற்றோர்கள் பிள்ளைகளைக் கொண்டு நட்டு அவற்றின் புகைப்படங்கள் காணொளிகளை அனுப்பி வைத்தார்கள். மேலும் சகல மாணவர்களுக்கும் பல்வேறுபட்ட சித்திரங்களையும் வரைய வைத்து அவற்றின் புகைப்படங்களைப் பெற்று அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவற்றை என்னுடைய முகப்புத்தகத்தில் upload செய்தேன். இது மற்றைய மாணவர்களை மேலும் தூண்டும் நிகழ்வாக இருந்தது.

மேலும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசு வழங்கிய சுற்றுநிருபத்திற்கு அமைய அரசு அறிவித்த அமைப்புக்கேற்ப கை கழுவுகதற்கான ஏற்பாடுகள், உடம்பின் உஷ்ணத்தை அறிந்து கொள்ள தேவையான உபகரணம் வாங்கி, Banner ஐ காட்சிப்படுத்தி மற்றும் இதர கை கழுவுதல், பாதணிகள் கழுவுதல் போன்ற தேவைப்பாடுகளையும் செய்வித்து மேலதிகமாக நீரருந்தும் வசதிகள், மேலதிக மலசலகூட வசதிகள், வகுப்பைக் கழுவி, சுத்தப்படுத்தி, தொற்று நீக்கி, ஆசனங்களை ஒரு மீட்டர் தூரப்படுத்தி மாணவர்களது இருக்கைகளை அமைத்து மாணவர்களது ஆசிரியர்களது பூரண பாதுகாப்புக்களையும் கருதி ஒரு பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கான சகலவிதமான சுகாதார நடைமுறைகளையும் செய்ய வேண்டி இருந்தது.

மேலும் முதலுதவி சம்பந்தமான அறை, அதற்கு தேவையான ஆண், பெண் மாணவர்களுக்கு தேவையான கட்டில் வசதிகள் முதலுதவிப் பெட்டிக்கு தேவையான மருந்துப் பொருட்கள் போன்ற சகலவிதமான ஏற்பாடுகளையும் செய்து சிரமதானப் பணிகளையும் மேற்கொண்டு பாடசாலையை மீள ஆரம்பம் செய்தோம். இதன் போது ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் யாவரும் பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

14. ஒரு ஆங்கில ஆசிரியராக, ஆங்கில ஆசிரிய ஆலோசகராக பின்னர் அதிபராக கடமையாற்றிய நீங்கள் இரண்டு தமிழ் மொழி மூலமான கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளீர்கள். அவை பற்றிய உங்கள் பகிர்வு என்ன? நீங்கள் அடுத்து என்ன நூலை வெளியிட உத்தேசித்துள்ளீர்கள்?

நான் இதுவரை 2017 இல் “இரண்டும் ஒன்று”, 2019 இல் “புதையல் தேடி” என இரண்டு தமிழ் மொழி மூலமான கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளேன். அவை சிறந்த புத்தகங்களாக இருக்கின்றன. இந்த இரண்டு புத்தகங்களும் தேசிய ஆவணவாக்கல் திணைக்களத்தினால் மற்றும் கொழும்பு தேசிய நூலகத்தினாலும் ஒரு தொகைப் புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு எனது இரண்டாவது நூல் “புதையல் தேடி” கவிதை நூல் தேசிய சாகித்திய விருதுக்கு முதல் மூன்று நிலைகளுக்குள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

மேலும் என்னுடைய இரண்டு புத்தகங்களையும் முஸ்லிம் கலாச்சார பண்பாட்டு அலுவலகத் திணைக்களத்திற்கு கொள்வனவுத் தேர்விற்கு அனுப்பியுள்ளேன். கூடிய சீக்கிரம் நாடு இயல்பு நிலைக்கு வந்த பின்னர் அந்த கொள்வனவும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன். இறைவனுக்கே எல்லாப் புகழும். இனிவரும் காலங்களில் அடுத்ததாக ஆங்கில மொழியில் பெண்ணின் பெருமை பற்றிய ஒரு நூலை மற்றும் சிறுவர் இலக்கியம் சம்பந்தமான நூல்களையும் வெளியிட உத்தேசித்துள்ளேன். இதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும்.

15. நீங்கள் ஒரு அதிபராக கவிஞராக எழுத்தாளராக சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஒவ்வொரு நபரையும் இறைவன் ஒரு நோக்கத்திற்காகத் தான் படைத்தான். எனவே அந்த நோக்கத்தை நாம் உணர்ந்து கொண்டு எம்மை நாம் சமூகத்தில் சிறந்த மனிதர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் பாடுபட்டு உழைக்க வேண்டும். முயற்சி செய்யாமல் கிடைக்கும் எதுவும் அதிஷ்டமாகத் தான் கருதப்படும். மிகுந்த முயற்சியின் விளைவாக கிடைப்பது தான் வெற்றியாக கருதப்படும். எனவே நாம் அதிஷ்டத்தில் ஆசை வைக்காமல் வெற்றியில் ஆசை வைக்க வேண்டும். அப்போது தான் வெற்றியைக் கொண்டாட முடியும். மேலும் ஒவ்வொருவரும் தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் நல்ல சந்தர்ப்பம் என்பது எப்போதும் எம்மை எட்டிப்பார்ப்பதில்லை.

அதே நேரம், வாழ்க்கையில் யாரும் யாருடைய நிம்மதியையோ சந்தோஷத்தையோ சீர்குலைக்க முயலாதீர்கள்! அவ்வாறு நீங்கள் மற்றவருடைய வாழ்க்கையை சீர்குலைக்க முயலும் போது அதற்கு தண்டனை இயற்கையாகவே உங்களுக்கு வந்து சேரும். எப்போதும் மற்றவர்களுக்கு நல்லவற்றையே விரும்புங்கள். அப்போது உங்களுக்கும் எல்லாம் நல்லதாகவே அமையும். எப்போதும் மற்றவரைத் தாழ்த்தியோ தாக்கியோ பேசாதீர்கள். அவ்வாறு நீங்கள் நடந்து கொண்டால் யாரை நீங்கள் தாக்கியோ தாழ்த்தியோ வீழ்த்தப் பேசினீர்களோ அவர்களிடமே தாழ்ந்து வீழ்ந்து கிடக்க வேண்டி ஏற்படும். இறைவன் தண்டனைகளை உடனுக்குடனே கொடுத்து விடுவான். அரசன் அன்று ஆள்வான். தெய்வம் நின்று கொல்லும். மேலும் இயற்கையை இரசியுங்கள். நேசியுங்கள். அன்பு காட்டுங்கள். உங்களுக்கு எப்போதும் இளமையாக இயல்பாக சந்தோஷமாக இருக்கலாம்.

என்னை சமூகம் சார்பாக நேர்கண்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி.

 

நேர்கண்டவர் : அதிபர், கவிஞர் : ஸல்மானுல் ஹாரிஸ் பானகமுவ ஓய்வு பெற்ற அதிபர், சமாதான நீதிவான் அல்ஹாஜ் ஏ.ஸீ. செய்யது அஹமது அவர்களினதும் மர்ஹூமா ஹாஜியானி கே.ரி. றஹிமா உம்மா ஆகியோரின் கனிஷ்ட…

நேர்கண்டவர் : அதிபர், கவிஞர் : ஸல்மானுல் ஹாரிஸ் பானகமுவ ஓய்வு பெற்ற அதிபர், சமாதான நீதிவான் அல்ஹாஜ் ஏ.ஸீ. செய்யது அஹமது அவர்களினதும் மர்ஹூமா ஹாஜியானி கே.ரி. றஹிமா உம்மா ஆகியோரின் கனிஷ்ட…