எத்தனை நாட்களுக்கு இந்த நாடகம் தொடரும்?
- by admin
- 22
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து சரியாக இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் அது தொடர்பான கைதுகளும் பரபரப்புகளும் அரசியல் நகர்வுகளும் முடிவுக்கு வரவில்லை.
இரண்டு வருடங்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படாத நிலையிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டறியப்படாத நிலையிலும் இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் நகர்வுகள் மாத்திரம் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக கர்தினால் மல்கம் ரஞ்சித் இது தொடர்பாக அடிக்கடி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அவரது கோரிக்கைகளுக்கு அமைய பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் கிறிஸ்தவ மக்களுக்கு மிக விரைவாக நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது தற்போதைய அரசாங்கத்தின் கடப்பாடாகும்.
எனினும் கர்தினால் பெயர் குறிப்பிட்டுவிட்டார் என்பதற்காகவோ அல்லது சில அரசியல் தரப்புகளையோ அல்லது பெரும்பான்மை மக்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தாம் விரும்பியவர்களைக் கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பது என்பது நியாயமற்றதாகும்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற வகையில் இதுவரை 700 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். இவர்களில் மாவனல்லை சிலை உடைப்பு மற்றும் வனாத்தவில்லு வெடி பொருட்கள் மீட்பு ஆகிய இரு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் மீது மாத்திரமே இதுவரை வழக்குத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் மீது வழக்குத் தொடர மேலும் பல மாதங்கள் எடுக்கும் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுவரை முஸ்லிம் சமூகத்தின் பல முக்கியஸ்தர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறுதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஏலவே கடந்த வருடமும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களாவர்.
அதேபோன்று இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் மீண்டும் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரும் முன்னர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவரே.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலியும் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஏலவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 2020 ஏப்ரல் முதலும், கவிஞரும் ஜாமிஆ நளீமியா மாணவருமான அஹ்னாப் ஜெஸீம் 2020 மே முதலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கப்பால் 11 அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஜனநாயக ரீதியாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த அமைப்புகளே அதிகமாகும். இவற்றில் சிலவற்றின் பிரதான வேலைத்திட்டம் சமூக நலன் நடவடிக்கைகளேயாகும். உரிய காரணங்கள் எதுவுமின்றி இந்த அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.
புர்காவுக்கு தடை விதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா பிரேரணைக்கு முன்னரே இந்த அறிவிப்பு வெளிவந்த போதிலும் முஸ்லிம் நாடுகளின் எதிர்ப்பு காரணமாக இந்த யோசனை கைவிடப்பட்டிருந்தது. எனினும் தற்போது மீண்டும் இதனை பேசுபொருளாக்கியிருப்பதும் அரசியல் உள்நோக்கங்களுக்காகவே அன்றி வேறில்லை எனலாம்.
கொவிட் 19 தொற்றிலிருந்து மக்கள் தம்மைப் பாதுகாப்பதற்காக முகக்கவசம் அணிந்து முகத்தை மறைப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் மக்களைக் குழப்பத்துக்குள்ளாக்கும் வகையில் புர்கா தடை குறித்த அறிவிப்பை வெளியிடுவது எந்தளவு தூரம் அறிவுபூர்வமானது என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இப்போது அதனை தமது அரசியல் நலன்களைப் பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவதானது வெட்கத்துக்குரியதாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் மிகப் பெரும் அநீதியுமாகும். அந்த வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தைப் பயன்படுத்தி நாடகமாடுவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதுடன் அப்பாவி முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் நெருக்கடிக்குள்ளாக்குவதையும் கைவிட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து சரியாக இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் அது தொடர்பான கைதுகளும் பரபரப்புகளும் அரசியல் நகர்வுகளும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு வருடங்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படாத நிலையிலும் உயிர்த்த…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து சரியாக இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் அது தொடர்பான கைதுகளும் பரபரப்புகளும் அரசியல் நகர்வுகளும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு வருடங்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படாத நிலையிலும் உயிர்த்த…