ஓட்டைக் குடிசையினுள் இருந்து ஓர் ஓலம்
- by admin
- 17
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்தேன்
தூசி படாது காத்து வளர்த்தேன்
ஊசி போடுகையில் சேர்ந்து அழுதேன்
அழுக்கு முகத்திலும் முத்தம் கொடுத்தேன்
எனது ஒற்றைப் பிள்ளையை ஆசையாய் வளர்த்தேன்
அவனைக் காண ஏங்குது மனசு
கண்டா வரச் சொல்லுங்க!
தவழ முயன்று உருண்டு பிரண்டான்
நடக்க முயன்று விழுந்து போனான்
ஓட முயன்று தடுக்கி விழுந்தான்
தூக்கி விட்ட கை ஒருமுறையேனும்
தடவிப் பார்க்கத் துடிக்குது
அவனை கண்டா வரச் சொல்லுங்க!
பால்குடி வயதில் பசியெடுத்து
முகத்தைப் பார்த்தான்
மாரைக் கடித்தும்
அமைதியாய்ப் பாலைக் கொடுத்தேன்!
விளையாடும் வயதில்
அம்மா பசியென்றான்
ஊட்டச்சத்து நிறைந்த உணவை
அன்பு கலந்து ஊட்டி வளர்த்தேன்!
படிக்கும் வயதில் அவன் பசியறிந்து
கேட்கும் முன்னரே
ஓடிச் சென்று சாப்பாடு வைத்தேன்!
இன்றோ அவன்
தொழில் செய்து பசியுடன்
எங்காவது அலைந்து திரிவான்
மீண்டும் ஒருமுறை
ஊட்டி விடத் துடிக்குது மனசு
கண்டால் வரச் சொல்லுங்க!
கையைப் பிடித்து எழுதப் பழக்கினேன்
இனிப்புக் கொடுத்துப் பாடம் புகட்டினேன்
பசியுடன் இருந்து பாடசாலைக்கு அனுப்பினேன்
எச்சச் சோறை உண்டு பசி போக்கினேன்
சொத்துக்களை விற்று
அவனுக்குக் கட்டணங்கள் கட்டினேன்
ஊரே வியக்க அவனை ஆளாக்கினேன்!
ஆளான பின் ஆள் மாறிவிட்டான்
பார்க்க நாதியின்றி
பட்டினியில் கிடக்கிறேனே
கண்டால் வரச் சொல்லுங்க!
நோய் என்னை வாட்டி வதைக்குது
மருந்து என்னை துளைத்து எடுக்குது
பசி என்னைப் போட்டுத் தாக்குது
நாக்கில் ஈரம் பட்டு நாளாகுது!
ருசியாக உண்ண நா துடிக்குது
ஒருமுறை வந்து என்னை
ஆரத்தழுவி ஊட்டி விட்டுச் செல்ல
கண்டா வரச் சொல்லுங்க!
தொழில் தான் தெய்வம் என நினைத்து விட்டான்
மனைவி தான் உலகம் என மாறிவிட்டான்
தாயை மறந்தே போய் விட்டான்
பழையதை மறந்தவனாகி விட்டான்!
அனைத்தையும் மறக்கும் வயதிலும்
என்னால் அவனை மறக்க முடியவில்லை
கண்டால் வரச் சொல்லுங்க!
கணவனையிழந்து விதவையானேன்
சொத்துக்களையிழந்து அனாதையானேன்
ஊரார் செலவில் வாழும் அகதியானேன்
ஓட்டைக் குடிசையில் வாழும் கிழவியானேன்!
அனைத்தையும் இழந்தும்
விட்டுச்சென்ற மகனை
ஒருமுறையேனும் தொட்டுப் பார்க்க
மூச்சை இழக்காது பிடித்து வைத்திருக்கிறேன்!
தூரத்தில் இருந்தேனும் பார்த்துவிட்டு
இந்த மூச்சை விடுகிறேன்
கண்டால் வரச் சொல்லுங்க!
என் செல்ல மகனைக்
கண்டால் வரச் சொல்லுங்க!
Ifham Aslam {மஹ்பி(f)}
Beruwala
பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்தேன் தூசி படாது காத்து வளர்த்தேன் ஊசி போடுகையில் சேர்ந்து அழுதேன் அழுக்கு முகத்திலும் முத்தம் கொடுத்தேன் எனது ஒற்றைப் பிள்ளையை ஆசையாய் வளர்த்தேன் அவனைக் காண ஏங்குது மனசு…
பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்தேன் தூசி படாது காத்து வளர்த்தேன் ஊசி போடுகையில் சேர்ந்து அழுதேன் அழுக்கு முகத்திலும் முத்தம் கொடுத்தேன் எனது ஒற்றைப் பிள்ளையை ஆசையாய் வளர்த்தேன் அவனைக் காண ஏங்குது மனசு…