மனிதனின் பணி
- by admin
- 7
ரமழான் அல்குர்ஆனின் மாதம் என்ற வகையில் அல் குர்ஆனுக்கும் அது யாருக்கு வழிகாட்டியாக இருக்கின்றதோ அந்த மனிதனுக்கும் இடையில் உள்ள நெருக்கமான தொடர்பை பற்றி அறிந்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.
மனிதனுக்கும் அல் குர்ஆனுக்குமிடையிலுள்ள அந்த உறவையும் தொடர்பையும் மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்வதாயின் இரண்டினதும் இயல்புகள் மற்றும் பணிகள் பற்றி ஒரு சுருக்கமான பார்வை அவசியப்படுகிறது.
மனிதனின் பணியை அல்குர்ஆன் மிகத் தெளிவாக இவ்வாறு எடுத்துக் காட்டுகின்றது. “உமது இறைவன் மலக்குமார்களிடம் நான் ஒரு பிரதிநிதியை பூமியில் உருவாக்க போகிறேன் என்று கூறியபோது,” (அல்பகரா 30)
ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) படைக்கப்பட முன்னரே அவருக்கான பணியும் அவர் பணி செய்ய வேண்டிய இடமும் தீர்மானிக்கப்பட்டு விட்டன. அவை சகலவற்றையும் அறிந்த அல்லாஹ்வின் நுணுக்கமான ஏற்பாடாகும். அந்தப் பணி அல்லாஹ்வின் பிரதிநிதி என்ற பணி அந்தப் பணியை நிறைவேற்றும் தளம் பூமி. இவை மனித உருவாக்கத்திற்கு முன்னேறி அல்லாஹ்வால் தீர்மானிக்கப்பட்ட வையாகும்.
அந்தப் பிரதிநிதித்துவம் வெறுமனே மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாற்றமாக அது வாரிசுரிமையாக அவரைத் தொடர்ந்து வந்த அத்தனை சந்ததிகளுக்கும் கிடைக்கும் வகையில் கொடுக்கப்பட்டது. “அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு உங்களை வேறு மக்களின் சந்ததிகளிலிருந்து உற்பத்தி செய்தது போன்றே உங்களுக்கு பிறகு தான் நாடியவரை உங்களுக்குப் பதிலாக ஆக்கிவிடுவான். (அல் அன்ஆம் 133)
பிரதிநிதி என்று சொல்கின்ற போது அவனை நியமித்தவரின் இருப்பும் பிரதிநித்துவமான ஒப்பந்தமும் கட்டாயமாகின்றது. மனிதனை தனது பிரதிநிதியாக நியமித்த அல்லாஹுத்தஆலா அவனுக்கு அதில் வழங்கிய பணிகளில் தன்னை இபாதத் செய்வதாகும்.
“மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி வேறு எதற்காகவும் நான் படைக்கவில்லை” (அத்தாரியாத் 56) என்று அல்லாஹுத்தஆலா கூறுகிறான்.
அவன் தன்னை வணங்குவதன் மூலமாகவும் அதனை நோக்கி அடுத்தவர்களை அழைப்பதன் மூலமாகவும் பூமி எனும் பரந்த விரிந்த இடத்தை அவன் வணங்கப்படுகின்ற வணக்கஸ்தலமாக மாற்றி அலங்கரிப்பதன் மூலமாகவும் தனது பிரதிநிதித்துவத்தை சிறப்பாக நிறைவேற்ற வேண்டுமென்று அல்லாஹுத்தஆலா எதிர்பார்க்கிறான்.
அந்த எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்வதற்கான சகலவிதமான வசதி வாய்ப்புகளையும் இந்த பூமியில் அவன் ஏற்பாடு செய்து தந்திருக்கின்றான்.
“வானங்கள் மற்றும் பூமியில் இருக்கின்ற அனைத்தையும் உங்களுக்கு அல்லாஹ் வசப்படுத்தி தந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா ?” (லுக்மான் 20)
“அவன் தான் பூமியில் இருக்கின்ற சகலதையும் உங்களுக்காகப் படைத்தான்” (அல்பகரா 29). போன்ற அல்குர்ஆன் வசனங்களும் இன்னும் பல வசனங்களும் அதனை மிகத் தெளிவாக கூறுகின்றன.
மனிதனல்லாத படைப்புக்கள் யாவும் மனிதனுக்காக படைக்கப்படுகின்ற அதேவேளை மனிதன் அல்லாஹ்வுக்காக படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதே இதன் சாராம்சம் ஆகும் .
KLM. Akram
Sammanthurai
SEUSL.
ரமழான் அல்குர்ஆனின் மாதம் என்ற வகையில் அல் குர்ஆனுக்கும் அது யாருக்கு வழிகாட்டியாக இருக்கின்றதோ அந்த மனிதனுக்கும் இடையில் உள்ள நெருக்கமான தொடர்பை பற்றி அறிந்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். மனிதனுக்கும்…
ரமழான் அல்குர்ஆனின் மாதம் என்ற வகையில் அல் குர்ஆனுக்கும் அது யாருக்கு வழிகாட்டியாக இருக்கின்றதோ அந்த மனிதனுக்கும் இடையில் உள்ள நெருக்கமான தொடர்பை பற்றி அறிந்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். மனிதனுக்கும்…