இலங்கையில் சமுதாய அடிப்படையிலான சீர்திருத்த முறைமை பற்றிய வரைவு அறிக்கை குறித்து பொதுமக்களின் கருத்து பெறப்படும் – நீதி அமைச்சர்

  • 11

இலங்கையில் சமுதாய அடிப்படையிலான சீர்திருத்த முறைமை பற்றிய வரைபு அறிக்கையை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் ஆலோசனைகளையும் மேற்பார்வைகளையும் பெறுவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய மற்றும் சர்வதேச பங்குதாரர்களுக்கு வழங்குமாறு நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யு.எம். அலி சப்ரி பணிப்புரை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இந்தப் பணிப்புரையை வழங்கினார்.

குற்றவியல் நீதி முறைமையை மறுசீரமைப்பதற்கான ஆரம்ப கட்டமாக இப்பணிப்புரையை வழங்கிய அமைச்சர், குறித்த அறிக்கை தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை கோருமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.

நீதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஹனா சிங்கர் ஹம்டி மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திரு. ரொபர்ட் ஜுக்ஹாம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

மக்களைச் சீர்திருத்தத்துக்கு உட்படுத்தாமல் சிறைக்கு அனுப்புவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதால் சமுதாய அடிப்படையிலான சீர்திருத்த முறைமை மிகவும் பயனுள்ள முறையாக அமையும் என்பது அமைச்சின் கருத்தாக இருந்தது.

இதற்கமைய, இரண்டு வருடங்களுக்கு குறைந்த தண்டனை விதிக்கப்பட்டவர்களை சிறைத்தண்டனைக்கு உட்படுத்தாமல் சமுதாய அடிப்படையில் சீர்திருத்துவதற்கான சாத்தியங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகமும் முன்னாள் மஜிஸ்திரேட்டுமான திரு. டிகிரி கே. ஜயதிலக்க அவர்களின் முன்வைப்பை அடுத்து சமுதாய அடிப்படையிலான சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

குற்றவியல் சட்டம் மற்றும் நீதி பற்றிய கருத்து என்பன ஒன்றுடனொன்று பிணைந்து காணப்படுவதாகவும், ஒரு நபரை குற்றவாளியாக  முத்திரை குத்துவதை விட பொறுப்பான பிரஜையாக சமுதாயத்திற்கு அனுப்புவதே முக்கியமானது என உதவிச் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஊடாக இதனை இரண்டு அடுக்குகள் மூலம் அடைய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அவை தேவையான மறுசீரமைப்புகளை நோக்கிய அரசியல் தலைமைகளை உள்ளடக்கிய அரசியல் அடுக்கு மற்றும் தேவையான மறுசீரமைப்புகளை உருவாக்குவதற்கும் விருத்தி செய்வதற்குமான பல்வேறு துறைகளில் தமது நிபுணத்துவத்தை வழங்கும் அதிகாரிகள் மற்றும் தொழில்வாண்மையானவர்களை உள்ளடக்கிய அடுக்கு என்பனவாகும்.

இந்த முறைமையை மேலும் விருத்தி செய்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் ஆலோசனைகள் மிகவும் முக்கியமானது எனவும் உதவிச் செயலாளர் நாயகம் வலியுறுத்தினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஹனா சிங்கர் ஹம்டி குற்றவியல் நீதி முறைமையை மறுசீரமைப்பதற்கான நீதி அமைச்சின் முயற்சிகளை பாராட்டினார்.

சமுதாய அடிப்படையிலான சீர்திருத்தம் ஒரு சில வேளைகளில் வன்முறையாகவும், பாதுகாப்பற்றதாகவும் உள்ள குற்றம் செய்தவர்கள் சிறைக்குள் வந்து செல்லும் சுழற்சியை ஏற்படுத்தும் சிறைச்சாலை நிலவரங்களுக்குள் உள்வாங்குவதை தடுக்கும் என வர மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்க, ஜீ.ஜீ. பொன்னம்பலம், சாகர காரியவசம், மதுர விதானகே, டயனா கமகே, காமினி வலேபொட, எஸ். கஜேந்திரன், அஜித் ராஜபக்ஷ, அகில எல்லாவல ஆகியோர் நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் சமுதாய அடிப்படையிலான சீர்திருத்த முறைமை பற்றிய வரைபு அறிக்கையை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் ஆலோசனைகளையும் மேற்பார்வைகளையும் பெறுவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய மற்றும் சர்வதேச பங்குதாரர்களுக்கு வழங்குமாறு நீதி அமைச்சர், ஜனாதிபதி…

இலங்கையில் சமுதாய அடிப்படையிலான சீர்திருத்த முறைமை பற்றிய வரைபு அறிக்கையை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் ஆலோசனைகளையும் மேற்பார்வைகளையும் பெறுவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய மற்றும் சர்வதேச பங்குதாரர்களுக்கு வழங்குமாறு நீதி அமைச்சர், ஜனாதிபதி…