Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
உழ்ஹிய்யா ஒரு வணக்கம் 

உழ்ஹிய்யா ஒரு வணக்கம்

  • 62

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
  • உழ்ஹிய்யா பற்றிய அறிஞர்களின் வித்தியாசமான சிந்தனைகள்
  • உழ்ஹிய்யா ஏன்?
  •  உழ்ஹிய்யா என்றால் என்ன?
  • உழ்ஹிய்யா ஆறாவது கடமை அல்ல
  • ஸஹாபாக்கள் வாழ்வில் உழ்ஹிய்யா
  • உழ்ஹிய்யாவிற்கான பிராணிகள்
  • உழ்ஹிய்யாவுக்கு மிகவம் சிறந்த பிராணி எது?
  • முஸ்லிம் அல்லாதாருக்கு உழ்ஹிய்யா பங்கை வழங்குதல்
  • உழ்ஹிய்யாவிற்கு பதிலாக அதன் பெறுமதியை கொடுத்தல்.
  • இந்த வருடம் (2019) என்ன செய்யலாம்

சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் ஹஜ் காலங்கில் நிறைவேற்றும் மிக முக்கியமான வணக்கமாக கருதப்படும் உழ்ஹிய்யா வணக்கம் சுன்னாவின் நிழலில் எந்த அந்தஸ்தை பெற்றுள்ளது? அதன் இலக்குகள் யாது? அதனை நடைமுறைப்படுத்தும் போது கவனிக்க வேண்டிய வியங்கள் என்ன? பாரம்பரிய பிக்ஹில் உள்ள கருத்துக்களை நாம் வாழும் காலத்திற்கு பொருத்தமானதாக மாற்றுவது எப்படி?

இந்த ஆக்கம் மேற்கூறிய வினாக்களுக்கு விடை தேடும் பரந்த ஒரு வாசிப்பாகவே அமையும். உழ்ஹிய்யா வணக்கத்தை நடைமுறைப்படுத்த முனையும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய வித்தியாசமான சிந்தனைகளை இந்த வாசிப்பில் அதிகமாக சேர்த்துள்ளோம். பாரம்பரிய சிந்தனை சிறையில் இருந்து வெளியேருவதற்கான வழியை தேடும் பயணத் தொடரில் இதுவொரு ஆரம்பமாக இருக்கட்டும்.

குறித்த ஒரு விடயம் நடைமுறை வடிவத்தை எடுக்கும் போது காலம், இடம், சூழல், இயலுமை மற்றும் அதன் ஷரீஆவின் இலக்குகள் என்ன? என்ற பின்புலங்களோடு பாரம்பரிய கருவூலங்களில் உள்ள தீர்ப்புக்களை அணுகுவது சிறுபான்மை முஸ்லிம்களின் வாழ்வியல் ஒழுங்கிற்கு மிகுந்த தேவையுடையதாகும்.

அந்த வகையில் உழ்ஹிய்யா பற்றிய அறிஞர்களின் வித்தியாசமான சிந்தனைகளை வாசிப்பதன் ஊடாக இலங்கை சூழலில் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதற்கான மிகப் பொருத்தமான சிந்தனையை தெரிவு செய்வதற்கு இந்த ஆக்கம் உதவியாக அமையும் என நம்புகின்றோம்.

உழ்ஹிய்யா கொடுப்பது ஏன்?

உழ்ஹிய்யாவின் இலக்குகள், அதனால் அடையப் பெறவேண்டிய நோக்கங்கள் யாது என்பதனை அல்-குர்ஆனும் சுன்னாவும் மிகவும் தெளிவாகவே கூறியுள்ளன. அது குறித்த அறிஞர்களின் கருத்துக்களை திரட்டி நோக்கும் போது பின்வரும் இலக்குகளை நாம் அடையாளம் காண முடிகிறது.

  1. இறைபயம் எனும் தக்வாவை பெறுவது உழ்ஹிய்யாவின் பிரதான இலக்காகும். இறைபயம் உள்ளம் சார்ந்த ஒரு வணக்கமாகும். தான் இறைவனின் கண்காணிப்பில் சதாவும் இருப்பதாக உணர்வதும், எந்த நிலையிலும் அல்லாஹ் அவதானித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வோடு வாழ்வதுதான் தக்வாவாகும். அந்த மனோநிலையை வளர்ப்பது உழ்ஹிய்யாவின் பிரதான இலக்குகளில் ஒன்றாகும்.
    எனவே இறைச்சியையோ இரத்தத்தையோ அல்லாஹ் எதிர்பார்ப்பதில்லை. உள்ளத்தில் உள்ள தூய்மையான உணர்வின் முதிர்ச்சிக்கே அல்லாஹ் கூலி வழங்குகின்றான். உள்ளத்தின் இந்த முதிர்ச்சி நிலையை அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் பார்க்க முடியாது.
  2. உழ்ஹிய்யா செல்வம் சார்ந்த ஒரு வணக்கமாகும். எனவே அடியான் தனது செல்வத்தை இறை கட்டளைக்கு அடிபணிந்து செலவழிப்பதன் மூலம் அவணுக்கு முற்றுமுழுதாக சரணடைவதை எதிர்பார்க்கின்றான். பணத்தை செலவழிப்பதன் மூலும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் வணங்கி வழிபடுவது உழ்ஹிய்யாவின் இன்னொரு இலக்காகும்.
  3. வசதியுள்ளவர்கள் செய்யும் இந்த வணக்கம் இறைவன் தந்த செல்வத்திற்கு நன்றி செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே குர்பான் கொடுப்பது இறைவன் தந்த அருள்களுக்கு நன்றி சொல்வதாகும்.
  4. மகிழ்ச்சிக்குரிய ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் எல்லோரும் சந்தோசமாக உண்டு, களித்து கொண்டாடி மகிழ வேண்டும் என்பதே இறை வழிகாட்டலாக அமைந்துள்ளது. எனவே அந்த தினத்தில் தன் குடும்பம், உற்றார் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், தேவையுடையவர்கள் அனைவரினதும் அடிப்படைத் தேவைகளை கண்டறிந்து அதனை பூர்த்தி செய்யும் கூட்டுப் பொறுப்பு உழ்ஹிய்யா வணக்கத்தின் பிராதான நோக்கங்களில் ஒன்றாகும். ஊருசனம் கொண்டாடி மகிழும் அந்த நாளில் எந்த உள்ளமும் வாடி நிற்கக் கூடாது என்பதே உழ்ஹிய்யாவின் பிராதன நோக்கமாக அமைந்துள்ளது.
  5. இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது அன்பு மகன் இஸ்மயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வின் ஆணைக்கு கட்டுப்பட்டு அறுத்துப் பலியிட முற்பட்டபோது அல்லாஹ் தன்னிடமிருந்து ஜிப்ரீல் (அலை) மூலம் ஒரு செம்மறியாட்டை வழங்கி அவருக்கு அருள் புரிந்தான். அது அல்லாஹ்வின் கருணையின் வெளிப்பாடாகும். இறை கட்டளைக்காக மகனை அறுக்க முற்பட்ட தியாகச் செம்மலின் அர்ப்பண சிந்தனையை மறுமை நாள் மட்டும் நினைவு கூர்வது உழ்ஹிய்யாவின் இன்னொரு பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.

எனவே இப்ராஹீம் (அலை) அவர்களது தியாக வாழ்வை நினைவு கூர்வதும், எந்த நிலையிலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து வாழ்வதும், உள்ளத்தில் உள்ள கஞ்சத்தனத்தை அகற்றுவதற்கு பயிற்சி எடுப்பதும், பெருநாள் தினங்களில் எல்லோரும் பசியாறி சந்தோசமாக வாழ்வதற்கு வழியமைப்பதும் உழ்ஹிய்யா வணக்கத்தை நிறைவேற்றுவதன் மூலம் அடையப் பெறும் முக்கியமான சில நோக்ககங்களாகும்.

உழ்ஹிய்யா என்றால் என்ன?

துல்ஹஜ் மாதம் 10ம் நாளாகிய பெருநாள் அன்று காலை பெருநாள் தொழுகை முடிந்ததிலிருந்து துல்ஹஜ் 13ம் நாள் சூரியன் மறைவதற்குள் வசதிபடைத்தவர்கள் தமது சுயவிருப்பத்தின் பிரகாரம் இறை திருப்தியை நாடி தியாக உணர்வோடு ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து பலியிடுவதற்கு ‘குர்பான்’ அல்லது உழ்ஹிய்யா எனப்படும். இது ஒரு சுன்னத்தான வணக்கமாகும். இந்த வணக்கத்தை நிறைவேற்றுவதன் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

உழ்ஹிய்யா ஆறாவது கடமை அல்ல

உழ்ஹிய்யா வணக்கத்திற்கு ஷரீஆ சட்டப்பரப்பரில் என்ன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்திருப்பது மிக முக்கியமாகும். அது வசதி படைத்த ஒருவருக்கு தவிர்க்க முடியாத கட்டாயக் கடமையா? அல்லது சுன்னத்தான ஒரு அமலா? வசிதியிருந்தும் அதனை நிறைவேற்றாமல் விட்டுவிட்டால் குற்றமாகுமா? இவை குறித்து தெளிவான விளக்கம் இல்லாவிட்டால் சமூக தளத்தில் பாரதூரமான தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. தேசிய நல்லிணக்கத்தையே பாதிக்கும் அளவிற்கு அதன் தாக்கம் பாய்ந்து செல்லும். எனவே ஷரீஆ சட்டப்பரப்பில் அதன் அந்தஸ்தை மிகச் சரியாக புரிந்து கொள்வது தார்மீகக் கடமையாகும்.

உழ்ஹிய்யா என்பது வாஜிபான ஒரு வணக்கம் என என சில அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். இக்கருத்தை இமாம் அபூஹனீபா (ரஹ்), இமாம் நகஈ, இமாம் முஹம்மத், இமாம் அவ்ஸாஈ இமாம் இப்னு தைமியா ஆகியோர் கூறியுள்ளனர். அவ்வாறே இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்களின் இரண்டு அபிப்பிராயங்களில் ஒரு கருத்தும் மாலிக் மத்ஹபின் ஒரு சாராரின் கருத்தும் உழ்ஹிய்யா வாஜிப் என்ற சிந்தனைக்கு வலுச் சேர்க்கின்றது. ‘நீர் அவனுக்காகவே தொழுது பலியிடுவீராக!’ என்ற அல்-குர்ஆன் வசனம் இதற்கு ஆதாரமாக அவர்கள் முன்வைக்கின்றனர்.

பின்வரும் ஹதீஸ்களையும் வாஜிப் என்ற சிந்தனையை கொண்டிருப்பவர்கள் முன்வைக்கும் ஆதாரமாக அடையளப்படுத்தலாம்.

ஜுன்துப் இப்னு சுஃப்யான் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நான் நபி (ஸல்) அவர்களுடன் துல்ஹஜ் 10வது நாளில் இருந்தேன். அப்போது அவர்கள், ‘பெருநாள் தொழுவதற்கு முன்பே குர்பானிக்கான பிராணியை அறுத்துவிட்டவர் அதற்கு பதிலாக வேறொன்றை தொழுகைக்குப் பின் அறுக்கட்டும் என்றும் அறுக்காமல் இருப்பவர் தொழுகை முடிந்தவுடன் அறுக்கட்டும்” என்றும் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

“யார் வசதியிருந்தும் அறுத்துப் பலியிடவில்லையோ அவர் நமது தொழுகை நடைபெறும் இடத்தை நெருங்கவும் வேண்டாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (அஹம்த், இப்னுமாஜா)

இமாம் ஷாபிஈ, இமாம் ஸவ்ரி, இமாம் ஸயீத் இப்னு முஸைய்யப், இமாம் மாலிக் மற்றும் ஹம்பலி மத்ஹபின் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தும் உழ்ஹிய்யா முக்கியமான ஒரு சுன்னத் என்பதே. பொதுவாக ஸஹாபாக்களின் கருத்தும் உழ்ஹிய்யா வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னாவாகும் என்பதே. எனவே பொரும்பான்மையான அறிஞர்களின் கருத்துப்படி உழ்ஹிய்யா வாஜிப் அல்ல.

‘துல் ஹஜ் முதல் பத்தில் நுழைந்துள்ள ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க விரும்பினால்…) என ஆரம்பிக்கும் ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிமில் வந்துள்ளது. இந்த ஹதீஸில் தெளிவாகவே விருப்முள்ள ஒருவர் செய்யக் கூடிய ஒரு வணக்கமாகவே உழ்ஹிய்யாவை நபிகளார் அறிமுகம் செய்துள்ளார்கள். அது கட்டாயக் கடமை என்ற கருத்து இருந்திருப்பின் மக்கள் விருப்ப தெரிவுக்கு நபி (ஸல்) அவர்கள் விட்டுவைக்க மாட்டார்கள்.

ஸஹாபாக்கள் வாழ்வில் உழ்ஹிய்யா

உழ்ஹிய்யா என்பது இறையச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான வணக்க வழிபாடாகும். இருந்தும் ஸஹாபாக்கள் அதனை கட்டாயக் கடமையாக புரிந்து கொள்ள வில்லை. மாறாக சுன்னத்தான ஒரு அமலாகவே பார்த்தனர். மக்கள் அதனை ஆறாவது கடமையாக நோக்கக் கூடாது என்பதில் அபூபக்கர் (ரழி) அவர்களும் உமர் (ரழி) அவர்களும் மிகக் கவனமாக செயற்பட்டார்கள். எனவே அவர்கள் இருவரும் துல்ஹஜ் மாதத்தின் விசேட சிறப்புக்குரிய வணக்கமான அறுத்துப் பலியிடும் உழ்ஹிய்யா வணக்கத்தை ஒரு போதும் நிறைவேற்றவில்லை என்பதே வரலாறாகும். (இப்னு கதீர் 4/646, ஸுப்லுஸ்ஸலாம் 4/91)

நபித்தோழர்கள் பலர் உழ்ஹிய்யா வணக்கத்தை பொது மக்கள் கடமை என்று எண்ணி விடக்க கூடாது என்பதற்காக அதனை நிறைவேற்றாமல் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்ற செய்தியை இமாம் ஷாதிபி அவர்கள் தனது இஃதிஸாம் எனற் நூலில் பதிவு செய்துள்ளார். (இஃதிஸாம் 8/91)

இக்ரிமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இரண்டு திர்ஹம்களை என்னிடம் தந்து இறைச்சி வாங்கி வருமாறு பணித்தார்கள். வரும் வழியில் இது என்ன? என யாரேனும் வினவினால், இது இப்னு அப்பாஸின் உழ்ஹிய்யா என சொல்லுமாறு என்னிடம் கூறினார்கள். (பிதாயாதுல் முஜ்தஹித் 1/464) இப்னு அப்பாஸின் பார்வையில் அது ஒரு கடமையாகாது. எனவே இறைச்சியை வாங்கி தர்மம் செய்து விட்டு இதுதான் எனது உழ்ஹிய்யா எனக் கூறியுள்ளார்கள்.

பிலால் (ரழி) அவர்கள் ஒரு சேவலை அறுத்து உழ்ஹிய்யா கொடுத்தார்கள் என்பதும் நம்பகமான அறிவிப்பாகவே காணப்படுகிறது. இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் தனக்கு வசதிகள் இருந்தும் மக்கள் உழ்ஹிய்யா வணக்கத்தை கடமை என்று புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக குர்பான் கொடுப்பதை வேண்டுமென்றே தவிர்ந்து கொண்டார்கள். (இஃதிஸாம் 8/91)

சட்ட வசனங்கள் தரும் அர்த்தங்களை நபித்தோழர்களின் புரிதல்களுடன் விளங்குவது சட்டங்களின் தராதரங்களை விளங்கிக் கொள்வதற்கு உதவதியாக அமைகிறது. இங்கு ஸஹாபாக்கள் உழ்ஹிய்யா ஒரு கடமையல்ல என்பதை வித்தியாசமான முறையில் புரிய வைத்துள்ளார்கள். சிறப்புகுரிய முதலிரண்டு கலீபாக்களும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றாமல் தவிர்ந்து கொள்வதினூடாக அது கடமையல்ல என்பதை நேரடியாகவே விளக்கியுள்ளார்கள்.

குர்பானுக்கு அறுத்துப் பலியிடுவது ஏற்றமானது என்பதை இப்னு அப்பாஸ் ரழி) அவர்கள் அறியாதவரல்ல. இருந்தும் அவர் அறுத்துப்பலியிடாமல் அறுக்கப்பட்ட மிருகத்தின் ஒரு பகுதியை வாங்கி இது எனது உழ்ஹிய்யா என கூறுவதன் மூலம் உழ்ஹிய்யாவை ஆறாவது கடமையாக கருதிவிடாதீர்கள் என எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

பிலால் ரழி அவர்கள் ஒரு சேவலை உழ்ஹிய்யா கொடுத்து விட்டு அது தான் எனது உழ்ஹிய்யா என்று கூறிய அறிவிப்பும் உழ்ஹிய்யா கட்டாயக் கடமையல்ல என்ற கருத்தையே சொல்லுதவற்கு முனைந்துள்ளார்கள்.

உழ்ஹிய்யா பற்றிய இந்தப் பின்னணி இல்லாததன் காரணமாகவே கடன்பட்டாவது குர்பான் கொடுப்பதற்கு சிலர் முனைகின்றனர். கூட்டுக் குர்பான் திட்டமும் இந்த புரிதலில் ஏற்பட்ட கோளாராகவே பார்க்க முடியும்.

பலர் தவனை அடிப்படையில் அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களை கொள்வனவு செய்து வாழும் போது அந்த தவனைகளுக்கான கட்டணங்கள் கடன் சுமையாக எஞ்சியிருக்கும் நிலையில் உழ்ஹிய்யாவை ஆறாவது கடமை போல் செய்யத் துணிகின்றனர். அப்படி உழ்ஹிய்யா கொடுப்பது கூடாது என்பதே ஷரீஆவின் பார்வையாகும்.

ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லாது ஒட்டகத்தையோ உழ்ஹிய்யா கொடுக்கலாம். அதற்காக கூட்டுக் குர்பான் என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து பணம் சேகரித்து செய்யப்படும் திட்டமிட்ட கூட்டு அமலாக உழ்ஹிய்யா வணக்கம் மாற்றப்படுவது நபிகளாரின் சுன்னாவல்ல. ஒரு வணக்கத்தின் சட்ட அந்தஸ்தை மிகைப்படுத்துவது வரவேற்கத்தக்க ஒன்றல்ல. ஸஹாபாக்கள் தனித்தனியாக உழ்ஹிய்யா கொடுப்பதையே மக்கள் அதனை வாஜிப் என்ற சட்ட அந்தஸ்துக்கு உயர்த்தக் கூடாது என்பதற்காக தவிர்ந்து கொண்டார்கள். எனவே அந்தந்த வணக்கங்களுக்கு அதற்குரிய சட்ட அந்தஸ்தையே வழங்க வேண்டும்.

உழ்ஹிய்யாவிற்கான பிராணிகள்

குர்பானுக்குரிய கால்நடைகள் என்பது ஆடு மாடு ஒட்டகம் என்பதில் அறிஞர்கள் மத்தியில் உடன்பாடான கருத்து நிலவுகிறது. எனினும் ஆரம்ப காலம் தொட்டு சில அறிஞர்கள் மான் இனத்தில் இருந்தும் அறுத்துப் பலியிடுவது ஆகும் என குறிப்பிட்டுள்ளனர். (பிதாயதுல் முஜ்தஹித் 2/193) இது தவிர ஏனைய பிராணிகளை உழ்ஹிய்யா என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்த முடியாது என்பதே பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும்.

எனினும் அறுக்கப்படும் பிராணிகள் குறித்து வித்தியாசமான கருத்துக்கள் நிலவுவதை அவதானிக்க முடிகிறதது உழ்ஹிய்யா கொடுப்பதற்கு வசதியற்றவர்கள் குர்பான் கொடுப்பதாக எண்ணிக்கொண்டு கோழி, சேவலை அறுப்பது விரும்பத்தக்கதல்ல என்பதே ஹனபி மத்ஹபின் கருத்தாகும். (பதாவா ஆலம்கீரிய்யா-சுருக்க நூல் ப:332 )

இமாம் இப்னு ஹஸம் (ரஹ்) அவர்கள் உழ்ஹிய்யா பிராணிகள் விடயத்தில் மிகவும் விரிந்த கருத்துடையவராகவே காணப்படுகின்றார். எந்த மிருகங்களின் இறைச்சியை சாப்பிடுவது ஷரீஆவில் ஆகுமாக்கப்பட்டிருக்கின்றதோ அந்தப் பிராணிகள் யாவும் உழ்ஹிய்யா கொடுக்கப்பதற்கு ஆகுமானதே.

அத்துடன் கோழி, சேவல் போன்ற ஏனைய சாப்பிடுவதற்கு ஹலாலான பறவை இனங்கள் யாவும் உழ்ஹிய்யா பிராணியாக அறுத்துப் பலியிடுவதற்கு ஆகுமானது என்றும் அவற்றில் சுவையான, இறைச்சியுள்ள, பெறுமதியான வற்றறை அறுத்துப் பலியிடுவதே மிகவும் சிறந்தது என்றும் இமாம் இப்னு ஹஸம் கூறுகிறார். (முஹல்லா 3/13)

இமாம் இப்னு ஹஸம் அவர்கள் தமது சிந்தனைக்கு ஏற்கனவே கூறப்பட்ட பிலால் (ரழி) அவர்களின் அறிவிப்பையும் இப்னு அப்பாஸ் (ரழி) நடைமுறையையும் ஆதாரமாக எடுத்துள்ளார்.

இந்த சிந்தனையை சரிகண்ட சில இஸ்லாமிய அறிஞர்கள் விரும்பியதை அறுத்துப் பலியிடுவதற்கு இடம்பாடு உண்டு என்ற கருத்தை வெளியிட்டதால் சமகால அறிஞர்கள் மத்தியில் அது ஒரு புரளியாக தோற்றம் பெற்றது. கடந்த காலங்களில் எகிப்து நாட்டிலும் துருக்கிய அறிஞர்கள் மத்தியிலும்; இது குறித்து பாரிய சர்ச்கைகள் எழுந்ததை ஊடகங்கள் வாயிலாக நாம் அறிய முடிந்தது. இந்த சிந்தனைப் போக்கு பிழையானது என்பதை எகிப்து நாட்டின் உத்தியோகபூர்வ பத்வா சபை தீர்ப்பு வெளியிட்டது. துருக்கியில் இந்த தீர்ப்வை வழங்கிய இஸ்லாமிய அறிஞரின் நிலைப்பாட்டை கலாநிதி யூஸுப் கர்ளாவி அவர்களும் அழகான முறையில் மறுதளித்துள்ளார்கள்.

உண்மையில் அல்குர்ஆன் சூரா ஹஜ் 28ம் வசனத்தில்: ‘அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளில் இருந்து அறுத்துப் பலியிடுமாறு கட்டளையிடுகிறான்’ என்று கூறுவதன் மூலம் ஆடு, மாடு, ஒட்டகம் என்பதே அறுத்துப்பலியிடுவதற்கான பிராணிகள் என்பதை தெளிவாக சுட்டுகின்றன. விதிவிலக்காக மான், மரை இரண்டையும் உழ்ஹிய்யாவுக்குரிய பிராணியாக அறுக்க முடியும் என ஆரம்பகாலம் தொட்டே அறிஞர்கள் கூறி வந்துள்ளனர்.

எனவே இப்னு அப்பாஸ் ரழி அவர்களும் பிலால் ரழி அவாகளும் கட்டாயக் கடமையான ஒரு வணக்கமல்ல என்பதை காட்டுவதற்காக நடைமுறைப்படுத்திய உதாரணங்களை வைத்து அனைத்துப் பிராணிகளையும் உழ்ஹிய்யா பிராணிகளாக எடுப்பது உசிதமானதல்ல. இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தில் இவற்றை அசாதாரண சிந்தனைகளாகவே நோக்குவதுண்டு.

உழ்ஹிய்யாவுக்கு மிகவம் சிறந்த பிராணி எது?

உழ்ஹிய்யாவுக்கான கால்நடைகளில் எது மிகவும் சிறந்தது என்ற விடயத்திலும் இமாம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஷாபி, ஹன்பலி, ழாஹரி மத்ஹப்களின் கருத்துப் படி உழ்ஹிய்யா கொடுப்பதற்கு மிகவும் சிறந்தபிராணி ஒட்டகமாகும். அதற்கு அடுத்ததாக சிறந்தது மாடாகும். அதனையடுத்து ஆடாகும் என அபிப்பிராயப்பட்டுள்ளனர். இதே கருத்தை மாலிக் மத்ஹபிலும் சிலர் கூறியுள்ளனர்.

மாலிக் மத்ஹபின் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து ஆட்டை குர்பான் கொடுப்பது தான் மிகவும் சிறந்ததாகும் என்பதே. மாலிக் மத்ஹபைச் சேர்ந்த இமாம் அல்-கரசி அவர்கள் பொதுவாக உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளில் ஆடு மாத்திரமே முதன்மைபடுத்த முடியுமான சிறப்புக்குரிய பிராணியாகும் என கருத்துத் தெரிவித்துள்ளார். (ஷரஹுல் கரசி 3/38)

நல்ல சதை இறைச்சியை அதிகமாக கெண்ட பிராணியே அறுத்துப் பலியிடுவதற்கு மிகவும் சிறந்ததாகும் என்றும் அவ்வாறே ஏழுபேர் சேர்ந்து ஒரு மாட்டை கொடுப்பதை விட ஆட்டை உழ்ஹிய்யா கொடுப்பதே மிகவும் மேலானது என்றும் இமாம் அபூஹனீபா அபிப்பிராயப்பட்டுள்ளார்.

நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஆடுகளை குர்பான் கொடுத்ததாக புகாரி முஸ்லிம்களில் பதிவாகியுள்ளது. அவ்வாறே ரஸுல் ஸல் அவர்கள் தனக்காவும் தனது குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையும் தனது உம்மத் சார்பாக ஒரு ஆட்டையும் அறுத்து பலியிட்டதாக ஆயிஷா (ரழி) அறிவித்துள்ள ஹதீஸ் இப்னு மாஜாவில் பதிவாகியுள்ளது. அதிகமான அறிஞர்களின் கருத்துப்படி உழ்ஹிய்யாவுக்கான கால்நடைகளில் ஆட்டை அறுத்துப் பலியிடுவதே மிகவும் சிறந்தது என கூறியுள்ளனர்.

இலங்கை சூழலில் ஆட்டை அறுப்பது தான் மிகவும் பொருத்தமானது என்பது சொல்லித் தெரிய வேண்டிய வியம் அல்ல. நபிகளாரின் செயலை வெளிப்படையாகவே பின்பற்றுதல் என்ற வகையிலும் குர்பானுக்காக ஆட்டை முற்படுத்துவது ஒரு சுன்னா என்ற பார்வையிலும் இலங்கை மக்கள் ஆட்டை தெரிவு செய்வது தார்மீகக் கடமையாகும். சகோதர இனங்களின் மனங்களை புண்படுத்தாமல் எமது வணக்கவழிபாடுகளை செய்வதற்கு ஷரீஆ விரிந்து தரும்போது அதனை பின்பற்றுவது சுன்னா என்பதற்கு அப்பால் அந்த தெரிவு ஒரு நல்ல பண்பாடு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் அல்லாதாருக்கு உழ்ஹிய்யா பங்கை வழங்குதல்

குர்பான் இறைச்சியை முஸ்லிமல்லாதாருக்கு கொடுப்பது சம்பந்தமாக அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதங்கள் காணப்படுகின்றன.

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கு உழ்ஹியாவின் இறைச்சியையோ அதன் தோலையோ கொடுப்பது விரும்பத்தக்கது அல்ல என்ற கருத்தை கூறியுள்ளார்கள். இமாம் லைஸ் அவர்கள் அதனை விரும்பத்தக்கது அல்ல என்ற கருத்தை கொண்டிருந்தாலும் சமைத்த உணவாக கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.

இமாம் நவவி அவர்கள் எமது மத்ஹபில் (ஷாபிஈ) உழ்ஹியா இறைச்சியை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பங்கு வைக்கலாம் என்றே பதிவு செய்துள்ளார். அவ்வாறே ஷாபி மத்ஹப் அறிஞரான இமாம் இப்னு குதாமா, காபிருக்கு உழ்ஹியாவிலிருந்து பங்கு கொடுக்கலாம் என்று அபிப்பிராயப்பட்டுள்ளார். (முஃனி-9/450)

இது குறித்து ஒரு முக்கியமான விடயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது போராட்டங்கள் நிகழாத சமாதான சூழலில் வாழும் வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை ஒரு முஸ்லிம் திருமணம் முடிப்பதற்கான அனுமதியை இஸ்லாம் வழங்கியுள்ளது. அப்படியான திருமணங்கள் நடைபெற்றால் அவர்களுக்கு மத்தியில் பிணைப்பும் உறவும் இருக்கவே செய்யும். அப்போது மனைவியின் சுற்றத்தார்களுக்கு உழ்ஹிய்யா கொடுப்பது ஒரு சகஜமான விடயமாகவே காணப்படும்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு நோன்பு காலங்களில் நிறைவேற்றும் கடமையான ஸகாதுல் பித்ர் மற்றும் உழ்ஹிய்யா இறைச்சியை கொடுக்கலாம் என்ற சிந்தனையை முன்வைத்வர்களில் இரண்டாம் கலீபா உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள், அப்துல்லா இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி), உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்), இமாம் ஸுஹ்ரி (ரஹ்), இமாம் இன்னு ஸீரீன் (ரஹ்), இமாம் ஹஸனுல்பஸரி, இமாம் அபூஹனீபா உட்டபட ஹனபி மத்ஹப் அறிஞர்கள் என பலரை அடையாளம் காணமுடிகிறது. இவர்களுடைய அபிப்பிராயப்படி உழ்ஹிய்யா இறைச்சியை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வழங்கவது ஆகுமானதே.

உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் ஸகாதுல் பித்ரில் இருந்து முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கொடுக்குமாறு கவனர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள். (அம்வால்-ப:46) எனவே அவரது பார்வையில் உழ்ஹிய்யாவையும் முஸ்லமிம் அல்லாதவர்களுகக கொடுப்பது ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (றழி) அவர்கள் தனது வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட போது அவர் அதிலிருந்து தனது அயல் வீட்டாரான யூதனுக்கு கொடுத்தீர்களா என்று பல தடைவ கேட்டார்கள். ஏன் இப்படி அலட்டிக் கொள்கின்றீர்கள் என்று அவரிடம் அவருடைய பணியாள் வினவும் அளவிற்கு அயல்வீட்டு யூதனுக்கு பங்கு கொடுப்பதில் கவனம் எடுத்தார்கள் என்ற செய்தி இமாம் முஜாஹித் (ரஹ் அவர்கள் அறிவித்துள்ளர்கள். (திர்மிதி) இந்த அறிவிப்பு ஸஹீஹானது என ஷெய்க் அல்பானி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வகையில் உழ்ஹியாவிலிருந்து முஸ்லிம் அல்லாதாருக்கு பங்கு கொடுக்கலாம் என்ற சிந்தனையை இலங்கையிலும் தெரிவு செய்வதற்கான இடம்பாடு ஷரீஆ சட்டப்பரப்பில் தாரளமாகவே உள்ளது. சகவாழ்வுக்கான மிகுந்த தேவையுடன் வாழும் நாம் முஸ்லிம் அல்லாத அயலவர்கள், கலப்பு திருமணம் வழியாக வந்த உறவினர்கள், இன, மத வேறுபாடுகள் பார்க்காமல் தேவையுடையவர்கள் என பலருக்கும் உழ்ஹிய்யா இறைச்சியை தராளமாக கொடுக்கலாம் என்பதை உணர முடிகிறது.

இதனை கூடாது என்போர் முஸ்லிம்களது தேவை இருக்க மற்றவர்களை முற்படுத்திக் கொடுக்கக் கூடாது என்ற வகையிலேயே அதற்கு நியாயம் சொல்கிறார்கள். மாற்றமாக எம்மில் பலர் நினைப்பது போல் இறைச்சிக்கு புனிதத் தன்மை கொடுத்து அல்ல என்பதனை அறிஞர்களது கருத்துக்களில் இருந்து புரிய முடிகிறது.

உழ்ஹிய்யா ஒரு வணக்கம். அதன் இறைச்சியை பங்கீடு செய்தல் இன்னொரு செயற்பாடு. எனவே பங்கு வைத்தல் என்பது தேவைகளுக்கு ஏற்பவே நோக்கப்பட வேண்டும். அதற்கு தேவையில்லாத நிபந்தனைகளை நாமே விதியாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

நவீன காலத்தில் இமாம் அப்துல்லாஹ் பின் பாஸ் மற்றும் அல்-அஸ்ஹர் பத்வா சபை உறுப்பினர்களும் இது குறித்து பேசும் போது: எம்முடன் போராடாத காபிர்களுக்கும் கைதிகளுக்கும் மற்றும் எம்மிடம் அபயம் பெற்றோருக்கும் உழ்ஹிய்யாவை கொடுக்கலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதுவும் அவர்கள் ஏழைகளாக, நெருங்கிய உறவினரகளாக, அயலவராக இருப்பின் அவர்களை முற்படுத்துவது சிறப்பானது என்பதுடன் அவர்களது உள்ளங்களை பிணைக்கும் நோக்குடனும் நல்லுறவை பேணுவதற்காகவும் இதுவே மேலானதாகும் என்றும் கூறியுள்ளனர்.

உழ்ஹிய்யாவிற்கு பதிலாக அதன் பெறுமதியை கொடுத்தல்.

உழ்ஹியாவை பொருத்த வரை அதனது பெறுமதியை கொடுப்பதைப் பார்க்கிலும் அதனை அறுத்துப் பலியிடுவதே மேலானது என்பதே அநேகமான அறிஞர்களது கருத்தாகும். இங்கு யாரும் பெறுமதியை கொடுப்பது கூடாது என்று கூறவில்லை. அறுத்துப் பலியிடுவது சிறப்பானது என்ற கருத்தைதான் முன்வைத்துள்ளார்கள்.

ஏற்கனவே குறிப்பட்டது போல இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் அறுப்பு கடமையில்லை என்ற கருத்தை கொண்டதனால்தான் காசுக்கு இறைச்சியை வாங்கி உழ்ஹிய்யா கொடுத்தார்கள். எனவே பணப் பெறுமதியை கொடுப்பதும் ஆகும் என்ற கருத்தை அதிலிருந்து எடுக்க முடியும்.

பெறுமதியை கொடுக்காது உழ்ஹியாவை கொடுக்க வேண்டும் என வழியுறுத்தியவர்கள் அனைவரும் அறுத்துப் பலியிடும் சுன்னா இல்லாமல் போய்விடக் கூடாது என்ற நியாயத்தைத்தான் முன்வைத்துள்ளார்கள்.

கலாநிதி யூஸுப் கர்ளாவி அவர்கள் அபிப்பிராயப்படி ஒருவர் தனக்காக உழ்ஹிய்யா வணக்கத்தை நிறைவேற்ற நாடினால் அறுத்துப் பலியிடுவதே மிகவும் சிறந்தது. ஆனால் மரணித்த ஒருவருக்கு பகரமாக உழ்ஹிய்யா கொடுக்கும் போது பெறுமதியை கொடுப்பது சிறந்தது என அவர் கூறுகிறார்.

நாம் சிறுபான்மையாக வாழும் போது எமது நாட்டின் சட்ட திட்டகங்களை அனுசரித்து போக வேண்டியுள்ளதாலும் ஜீவகாருண்யம் பற்றி கூடுதலாக பேசுகின்ற நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதாலும் சில நிபந்தனைகளுடன் பெறுமதியை கொடுப்பதற்கான முடிவை தெரிவு செய்வது மிகப் பொருத்தமானதாக அமையலாம்

உழ்ஹிய்யா விவகாரத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் உள்ள சட்டத்தீர்ப்புக்களை நாம் அச்சொட்டாக பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. அவ்வாறே குறித்த ஒரு மத்ஹபின் எல்லைக்குள் இருந்து மாத்திரம் சிந்திக்க வேண்டிய தேவையும் இல்லை. சிந்தனைகளுக்கு சுவர் எழுப்புவதன் மூலம் காலத்தின் தேவையை நிவர்த்தி செய்யும் தீர்வுகளை வெளிக்கொணர முடியாது.

நாம் வாழும் காலத்தில் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற அதன் பெறுமதியை தர்மமாகக் கொடுப்பது உழ்ஹிய்யாவின் இலக்குகளை அடைவதற்கு போதுமாயின் அதனை அனுமதிக்கலாம். அதனால் அறுத்துப் பலியிடும் சுன்னா இல்லாமல் போகாது. காரணம் இது ஒரு காலத்தின் தேவை மட்டுமே. நாட்டின் அனைத்துப் பிராந்தியங்களும் இதனை பின்பற்ற வேண்டிய அவசியமும் கிடையாது. மிகுந்த கெடுபிடியுள்ள பிரதேசங்சளில் மாத்திரம் பெறுமதியை கொடுப்பதற்கான நடைமுறைய அமுல் படுத்தலாம்.

அசாதாரண ஒரு சூழ்நிலையில் உழ்ஹிய்யா தொடர்பாக எப்படி சிந்திப்பது என்பதற்கு சிரியா நாட்டின் உலமா சபை ஒரு முன்னுதாரணமாகும். அவர்கள் உழ்ஹிய்யாவின் பெறுமதியை சிரியா மக்களின் துயர் துடைப்பதற்காக ஸதகா செய்வது உழ்ஹியா கடமையை நிறைவேற்றுவதை விட சிறந்தது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு காலத்தில் ஸகாதுல் பித்ர் பணமாக வசூலிக்க முடியாது என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது. இன்று இலங்கையில் இருந்து கடல்கடந்த தேசத்திற்கு சென்று அதனை வசூலித்து மக்கள் பயணடையச் செய்கின்றோம். இது கலா மாற்றம் வேண்டி நிற்கும் சிறந்த தீர்வின் விளைவாக வந்த பயனாகும்.

அவ்வாறே கொஞ்ச காலத்திற்கு முன்பு ஹஜ் காலத்தில் அறுத்துப் பலியிடும் மாமிசத்தை வெளியே கொண்டு போக முடியாது என இறுக்கமான சட்டம் காணப்பட்டது. அது ஹராம் என்ற பத்வா சிந்தனைக்கு முடிச்சாக காணப்பட்டது. அதன் விளைவாக புனித மக்கா நகரமே துர்நாற்றம் எடுத்தது.

தேவைக்கதிகமான குர்பன் இறைச்சி கழிவுப் பொருளாக குவிந்து மலைகளாக காட்சி தந்தன. சுற்றுச் சூழல் மாசடைந்து ஆரோக்கியம் பாதிப்படைய ஆரம்பித்த போதுதான் பொருத்தமான தீர்ப்பு கிடைத்தது. இன்று ஹஜ் காலத்தின் உழ்ஹிய்யா இறைச்சி உலக மக்கள் யாவரும் பயணடையும் பாரிய திட்டமாக மாறியுள்ளது.

கால மாற்றங்கள் நிர்ப்பந்தங்களை தரும் போது மனிதன் இன்னொரு தீர்வை நோக்கி தள்ளப்படுகின்றான். சட்டத்தின் வரம்பகளை மீறாமல் பாரம்பரிய சிந்தனையை உடைத்துக் கொண்டு வெளியேறுவது தவறல்ல.

உழ்ஹிய்யாவின் பிரதான இலக்கை அடைந்து கொள்ளும் வகையில் பெறுமதியை கொடுப்பது சிறந்ததாயின் அந்த தீர்மானத்தை தெரிவு செய்வது நன்மைகளையே கொண்டுவரும். தேவையான நிபந்தனைகளுடன் அந்த தெரிவு அமுலுக்கு வந்தால் நிச்சயமாக இஸ்லாமிய சிந்தனையை முன்வைப்பதற்கு புதிய வாயில்கள் திறக்கப்படலாம்

ஐரோப்பிய நாடுகளில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவதற்கு பல தடைகள் இருந்தன. குர்பான் காலம் வரும் போது கால்நடைகளுக்கான விலையேற்றம், அறுப்பதற்கு முன்பு பலியிடும் மிருகத்தை கட்டாயம் மயக்க வேண்டும் என்ற அரச கட்டளை, சில அமைப்புக்கள் இது மிருகவதை என கூப்பாடு போடுவதால் வரும் அசௌகரியங்கள் என பல வழிகளில் உழ்ஹிய்யா வணக்கத்தை நிறைவேற்றுவதில் தடைகள் இருந்தன. எனவே நாட்டுக் வெளியே அதன் பெறுமதியை கொடுத்து அந்த சுன்னாவை அவர்கள் செய்வதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். அதனால் தேவையுடையவர்கள் நன்மை பெற்றார்கள். இதுவும் பாரம்பரிய பிக்ஹ் என்ற வேலியை தாண்டி சிந்திக்கின்ற போது மக்கள் பெறும் நலனாக அமைந்தது என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.

அதே போல் ரோஹிங்கிய முஸ்லிம்கள் முகாம்களில் பட்டினியால் சாகும் போதும், சிரியா மக்கள் இருப்பிடமில்லாமல் ஐரோப்பிய நகரங்களில் நாதியற்றவர்களாக திரியும் போது இன்னும் பல நாடுகளில் முஸ்லிம்கள் வறுமையால் வாடும் போதும் உழ்ஹிய்யாவிற்கு முதலுரிமை வழங்காமல் அந்தப் பணத்தை வறுமைக்கு தருமாறு பல சட்ட அறிஞர்கள் அறைகூவல் விடுத்தனர்.

இது காலத்தின் தேவையை உணர்ந்து நபிலான ஒரு வணக்கத்தை நிறைவேற்ற முன்பு கடமையை செய்ய வேண்டும் என்ற நபிகளாரின் வழிகாட்டல்களை மிகக் கவனமாக உள்வாங்கியதால் ஏற்பட்ட மாற்றங்களாகும். இன்று இலங்கையிலும் இப்படி சிந்திக்க வேண்டிய தேவை அதிகமாகவே உள்ளது.

ஏப்ரல் 21 பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் தான் நாம் உழ்ஹிய்யா வணக்கத்தை நிறைவேற்றும் பருவகாலம் வருகிறது. பலர் சிறைச்சாலையில் வீணாக அடைக்கப்பட்டுள்ளனர். அதனால் ஏற்பட்ட பெரும் பொருளாதாரச் சுமை அந்தக் குடும்பங்களின் வழமையான வாழ்வில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் உழ்ஹிய்யாவின் பெறுமானங்களை வழங்குவதற்கான கருத்து பற்றி யோசிப்பதே பொருத்தமானது. அறிஞர்கள், சிவில் சமூக நிறுவனங்கள் இதன் சாதக பாதங்களையும் நாட்டு சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு ஆரோக்கியமான கருத்தாடல்களை மேற்கொண்டு ஒரு சாதகமான முடிவுக்கு வருவது பயனுள்ளதாக அமையும்.

இதுவரை பார்த்த விடயங்களின் மையக் கருத்துக்களை சுருக்மாக சொல்வதாயின்:

உழ்ஹிய்யா என்பது அதனை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் செய்யும் ஓர் உயரந்த சுன்னாவாகும். இதனை நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கமைய, சமூக நால்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டும். உழ்ஹிய்யா வணக்கத்தை கூட சகவாழ்வுக்கான ஒரு ஊடகாமாக பயன்படுத்தலாம்.

பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யா வணக்கத்தை நிறைவேற்றுவதில் எமது கவனம் இருக்க வேண்டும். அது உயர்ந்த பண்பாடு என்பதை நாம மனங்கொள்ள வேண்டும்.

பிரதேச சூழலுக்கு ஏற்ப மஹல்லாவாசிகள் பொது மஷுராவின் அடிப்படையில் உழ்ஹிய்யா விடயங்களை முன்னெடுப்பது மிகவும் சிறந்தது.

குர்பான் பங்கீட்டின்போது ஒழுங்கு முறைப்படியும், சாணக்கியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அதில் பரந்து மனதுடன் செயற்படுவதற்கு ஷரீஆ சட்டம் இடம் தந்துள்ளது என்பதையும் நாம் அறிவோம்.

இந்த வருடம் ஒரு அசாதாரண சூழ்நிலை இருப்பதால் பெறுமானத்தை கொடுத்தல் என்ற உடன்பாட்டுக்கு வருவது எல்லாவகையிலும் மிகுந்த பயன்பாட்டை தரும் என்பதில் சந்தேகமில்லை.

இஸ்லாமிய சட்டப்பரப்பில் ‘சுன்ன முஅக்கதா’ என்ற தரத்தில் வைத்து நோக்க வேண்டிய உழ்ஹிய்யா வணக்கத்தை வாஜிபான வணக்கத்திற்குரிய அந்தஸ்தை கொடுப்பது ஷரீஆவின் பார்வையில் பிழையான புரிதலாகும். உழ்ஹிய்யாவிற்கு உரிய அந்தஸ்தை கொடுப்பதுடன் இலகங்கை சூழலில் அந்த வணக்கத்தை நடைமுறைப்படுத்தும் போது அறிஞர்களின் வித்தியாசமான கருத்துக்களை அருளாகக் கொண்டு பெருத்தமானதை தெரிவுகளை முற்படுத்துவது காலத்தின் தேவையாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

முஹம்மத் பகீஹுத்தீன்
வியூகம் வெளியீட்டு மையம்

உழ்ஹிய்யா பற்றிய அறிஞர்களின் வித்தியாசமான சிந்தனைகள் உழ்ஹிய்யா ஏன்?  உழ்ஹிய்யா என்றால் என்ன? உழ்ஹிய்யா ஆறாவது கடமை அல்ல ஸஹாபாக்கள் வாழ்வில் உழ்ஹிய்யா உழ்ஹிய்யாவிற்கான பிராணிகள் உழ்ஹிய்யாவுக்கு மிகவம் சிறந்த பிராணி எது? முஸ்லிம்…

உழ்ஹிய்யா பற்றிய அறிஞர்களின் வித்தியாசமான சிந்தனைகள் உழ்ஹிய்யா ஏன்?  உழ்ஹிய்யா என்றால் என்ன? உழ்ஹிய்யா ஆறாவது கடமை அல்ல ஸஹாபாக்கள் வாழ்வில் உழ்ஹிய்யா உழ்ஹிய்யாவிற்கான பிராணிகள் உழ்ஹிய்யாவுக்கு மிகவம் சிறந்த பிராணி எது? முஸ்லிம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *