பத்ருப் போரின் படிப்பினைகள்
- by admin
- 8
ரமழான் பிறை 17 என்றாலே எமக்கு சட்டென்று ஞாபகம் வருவது பத்ருக்க்களம்தான். பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்து நொந்து போயிருந்த நபிகளாருக்கும் அவரது தோழர்களுக்கும் உலகில் பாரிய வெற்றியை பதிவு செய்த நாள் அது.
வெறுமனே யுத்தம் என்றில்லாமல் இன்றைய நாள் வரைக்கும் முஸ்லிம் உம்மத்துக்கு பல படிப்பினைகளையும் உபதேசங்களையும் அனந்தரமாக பத்ர் விட்டுச் சென்றுள்ளது என்றால் அது மிகையாகாது. ரமழான் பிறை 17 ஹிஜ்ரி இரண்டாம் வருடம் அந்த களம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதை நாம் அனைவரும் பெரும்பாலும் அறிந்து வைத்திருந்தாலும் அத்தினம் நமக்கு விட்டுச் சென்ற பொன்னான நினைவுகளில் பலரும் பாடம் படிக்க தவறிவிட்டோம்.
சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்த்திய நாள் அது. அந்த நாள் நமக்கு விட்டுச்சென்ற ஒரு சில படிப்பினைகளைமட்டும் இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
- பத்ர் களம் மாத்திரமன்றி வரலாறு நெடுகிலும் நாம் சந்தித்த அனைத்து தீர்க்கமான கட்டங்களிலும் இஸ்லாம் மறுமை நாள் வரை நிலை பெறக்கூடியது, முஸ்லிம்களை நோக்கி எவ்வித பலவீனங்களும் சோதனைகளும் வந்து சேர்ந்தாலும் ஏகத்துவம் சற்றும் ஆடிப்போகாது உறுதியாக இருக்கும் என்ற உண்மையை உரக்கச் சொல்லித் தருகின்றன.
- ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் இறைவனிடம் கையேந்தி பிரார்த்தித்தல் என்பது எப்பேர்ப்பட்ட வகிபாகத்தை கொண்டுள்ளது, அதன் பலம் தான் என்ன? வெற்றியின் மிகப்பெரும் ரகசியமே அதுதான் என்பதை செயல் ரீதியாக உணர பத்ரை தவிர வேறு சிறந்த உதாரணம் இல்லை எனலாம்.
- ஈருலக வெற்றிக்கும் இறை உதவிக்கும் இறையச்சம் மாத்திரமன்றி முஸ்லீம்களின் ஒற்றுமையும் சமத்துவமும் அத்தியாவசியமானது என்பதை உணர்த்திய ஒரு களம். ஆள்பலம் பணபலம் என இவ்வுலகில் எல்லா பலங்களிளும் நிறைவு காணாது பலவீனப்பட்டு நின்றாலும் வெற்றி என்பது அல்லாஹ்வின் கையில் உள்ளது, வெற்றிக்கும் ஈமானியப் பலத்துக்கும் தான் தொடர்புண்டே தவிர ஆள்பலமும் பணபலமும் ஆயுத பலமும் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகள் அல்ல. எனவே எண்ணிக்கையில் எங்கு சிறுபான்மையாக இருந்தாலும் எம்மிடம் ஈமானிய பலம் இருந்தால் போதும் யாராலும் நம்மை பலவீனப்படுத்த முடியாது.
- தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தாம் எப்பேர்பட்ட மேதையாக இருப்பினும் தனக்கு கீழ் உள்ளவர்களின் ஆலோசனைகளுக்கு செவிசாய்த்தல் வேண்டும். தனது சகாக்களுக்கு என்றுமே நம்பிக்கையை கொடுக்க வேண்டும். தனக்கு கீழ் உள்ளவர்களின் சுபீட்சத்திற்காக எப்போதுமே அயராது உழைக்க வேண்டும். அதில் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்ச கூடாது. இது போன்ற இன்னும் பல தலைமைத்துவ பண்புகளை கற்றுத் தருகின்றது.
இதுபோன்று இன்னும் பல படிப்பினைகள் இருந்தாலும் இன்றைய கால சூழ்நிலைக்கு தேவைப்படும் இந்த ஒரு சில விடயங்களுடன் மாத்திரம் சுருக்கி கொள்கிறேன்.
எனவே பத்ர் சஹாபாக்களின் ஞாபகார்த்தமாக யாசீன் ஓதி இன்னும் பல மூடநம்பிக்கைகளை செய்து மேலும் மேலும் நமது பின்தங்கிய நிலையை பறைசாற்றாமல் படிப்போம் படிப்பினை பெறுவோம்!
A.C.M. Shakir (Abbasi)
ரமழான் பிறை 17 என்றாலே எமக்கு சட்டென்று ஞாபகம் வருவது பத்ருக்க்களம்தான். பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்து நொந்து போயிருந்த நபிகளாருக்கும் அவரது தோழர்களுக்கும் உலகில் பாரிய வெற்றியை பதிவு செய்த நாள் அது.…
ரமழான் பிறை 17 என்றாலே எமக்கு சட்டென்று ஞாபகம் வருவது பத்ருக்க்களம்தான். பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்து நொந்து போயிருந்த நபிகளாருக்கும் அவரது தோழர்களுக்கும் உலகில் பாரிய வெற்றியை பதிவு செய்த நாள் அது.…