பாபர் மசூதி தொடர்பான தீர்ப்பு கவலை தருகிறது ஆனால், அல்லாஹ் வணங்கப்படுவதை நிறுத்த முடியாது
- by admin
- 17
பாபர் மசூதி தொடர்பான தீர்ப்பு கவலை தருகிறது ஆனால், பாபர் மசூதியையோ முஸ்லிம்களது ஏனைய சில பல பள்ளிகளையோ உடைப்பதால் பூமியில் அல்லாஹ் வணங்கப்படுவதை நிறுத்தவோ தடுக்கவோ முடியும் என மனப்பால் குடிப்போர் பெரும் தப்புக்கணக்கு போட்டுக் கொண்டு வாழுகிறார்கள்.
முஸ்லிம்கள் தொழுவதற்கு சுவர்களையும் கூரைகளையும் டோம்களையும் மினாராக்களையும் கொண்ட பள்ளிகள் தான் அவசியம் என்பதல்ல. ஏனெனில்,
எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன எனக் கூறிய நபிகள் பிரான்(ஸல்) அவர்கள் அவற்றில் ஒன்றாக:- “பூமி முழுவதும் சுத்தம் செய்யத்தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுது கொள்ளட்டும்! (நூல்: புகாரி- 335)
என்றார்கள்.
எனவே, முஸ்லிம்கள் பள்ளிக்குள் தான் தொழ வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.தொழுவதற்கான தனியான பள்ளிகள் இருந்தன, அவ்வாறு இருப்பது எவ்வளவோ நல்லது. வீட்டில் தனித்து தொழுவதை விட பள்ளியில் சென்று தொழுவது 27 மடங்கு அதிக நன்மை தருவதாகும். பள்ளியில் கூட்டாக தொழுதால் ஏற்படும் சமூக நலன்கள் ஏராளம் என்று கூறிக்கொண்டே போகலாம்.
ஆனால் இஸ்லாத்தை விரும்பாத, பிரபஞ்ச நாயகனை மட்டும் வழிபடும் பள்ளிகளை விரும்பாதவர்கள் இருக்கும் போது என்னதான் செய்யலாம்?
அந்த ஏக இறைவனின் காற்றை சுவாசித்துக் கொண்டு அவன் இறக்கிய தண்ணீரை குடித்துக் கொண்டு அவன் தந்த பூமியின் மீது நடமாடிக் கொண்டு அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவென்றே ஏற்படுத்தப்பட்ட புனிதமான ஆலயங்களான மஸ்ஜித்களை உடைப்பவர்கள் பற்றி என்ன தான் கூற முடியும்.
பள்ளிவாயல்கள் என்பன உளநிம்மதியை தருவதற்காகவும் இறைதொடர்பை வலுப்படுத்தவும் பாவங்களை விட்டும் மக்களைத் தூரப்படுத்தவுமே ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு முஸ்லிமுக்கு பள்ளி செல்லும் அனுமதி மறுக்கப்பட்டால் அவன் தனது வியாபாரத் தலத்திலோ வீட்டிலோ தொழுவான். பூமியின் எந்த சுத்தமான இடத்திலும் அவனுக்கு தொழ அனுமதியுண்டு. கிப்லா திசை எதுவென்று தெரியாத போது அனுமானித்து தொழலாம்.
நின்று கொண்டு தொழ முடியாத போது அமர்ந்து கொண்டு தொழலாம். அமர்ந்தும் தொழ உடல் நிலை இடம் தரவில்லையா படுத்துக்கொண்டே தொழலாம். உறுப்புக்களை அசைக்க முடியாத போது மனதால் தொழ பூரண அனுமதியுண்டு.
எனவே, பள்ளியொன்றை உடைப்பதாலோ அல்லது தொழ விடாமல் தடுப்பதாலோ முஸ்லிம்கள் தொழாமல் இருப்பார்கள் என நினைப்பவர்கள் இவற்றைப் பற்றி சிந்திக்கட்டும்.
يُرِيْدُوْنَ لِيُطْفِــُٔـوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ61:8.
“அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவான்.”
மேற்குலக நாடுகளில் பள்ளிவாயல்கள் அதிகரிக்கும் போது, அங்குள்ள மக்கள் சாரிசாரியாக இஸ்லாத்தில் நுழையும் போது இதுவொன்றும் இஸ்லாத்தைப் பாதிக்கப் போவதில்லை.
எனவே, பாபர் மசூதி பற்றிய கதையாடல்களில் அதிகம் ஈடுபடுவதை விட அது பற்றிய அடுத்த கட்ட தீர்வை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டு எமது நாட்டுக்கே உரிய விவகாரங்களில் கவனம் செலுத்துவோமாக. அல்லாஹ் முழு உலகையும் அநீதி,அராஜகம் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பானாக!
وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ (114) وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ۚ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ وَاسِعٌ عَلِيمٌ(115)
Speech From Faleel Sir
Writer: Sasna Nithar
பாபர் மசூதி தொடர்பான தீர்ப்பு கவலை தருகிறது ஆனால், பாபர் மசூதியையோ முஸ்லிம்களது ஏனைய சில பல பள்ளிகளையோ உடைப்பதால் பூமியில் அல்லாஹ் வணங்கப்படுவதை நிறுத்தவோ தடுக்கவோ முடியும் என மனப்பால் குடிப்போர் பெரும்…
பாபர் மசூதி தொடர்பான தீர்ப்பு கவலை தருகிறது ஆனால், பாபர் மசூதியையோ முஸ்லிம்களது ஏனைய சில பல பள்ளிகளையோ உடைப்பதால் பூமியில் அல்லாஹ் வணங்கப்படுவதை நிறுத்தவோ தடுக்கவோ முடியும் என மனப்பால் குடிப்போர் பெரும்…